Friday, October 28, 2022

Aru Ramanadhan: Kadhal: Tamil Literature and Magazines by KN Sivaraman

'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்

தி.ஜானகிராமனின் 'குளிர்' சிறுகதை எந்த இதழில் பிரசுரமானது தெரியுமா? 'காதல்' பத்திரிகையில்! 

யெஸ், பத்திரிகையின் பெயரே 'காதல்'தான். மட்டுமல்ல கு.அழகிரிசாமி, ஆர்.சூடாமணி, மு.வரதராசனார், டாக்டர் மா.ராசமாணிக்கனார், வல்லிக்கண்ணன், அகிலன், மாயாவி... என பல பிரபலங்கள் இந்த மாத இதழில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்கள். 

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இப்படியொரு பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்த இந்த 2022லும் யோசிக்கிறோம். அப்படியிருக்க 1947ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தப் பத்திரிகை பிறந்திருக்கிறது  - அதுவும் தமிழில் - என்றால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்? 

முதல் இதழில் 'காதல்' பத்திரிகையின் அவசியம் குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை பாருங்கள்: 

//இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. இதுவரை சுதந்திரம் ஒன்றுதான் நமது ஒரே இலட்சியமாக இருந்து வந்தது. இனி, நம்முடைய லட்சியங்கள் பல. 

முதலில் சென்ற நூற்றைம்பது வருஷங்களாக அல்ல, சென்ற ஆயிரம் வருஷங்களாக நம் சமூகத்தில் குவிந்து வந்த குப்பைகளை வாரிக் கொட்ட வேண்டும். மக்கள் வாழ்க்கைத் துயர்களிலிருந்து விடுபட்ட வாழ்க்கை வாழ வகை செய்ய வேண்டும். இப்பெரு நோக்கத்தோடு பல துறைகளில் பல பத்திரிகைகள் உண்டு. 

அரசியல் சூதாட்டத்தைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், குடும்ப அரசியலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை. 

பொருளாதாரச் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை உண்டு. ஆனால், கணவன் மனைவியரிடையே எழும் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை. 

நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டும் பாதி வயிறு நிறையாத தொழிலாளிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், வாழத் தெரியாமல் தவிக்கும் இளம் தம்பதிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.

நாட்டின் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், ஆண், பெண் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் இல்லை. 

பாலர்களுக்கென்றும், பக்தர்களுக்கென்றும், ஜோசியத்திற்கென்றும், சினிமாவுக்கென்றும் பத்திரிகை உண்டு. போட்டிப் புதிர்களை விடுவிப்பதற்கென்றும் பத்திரிகை உண்டு. ஆனால், காதலர்களிடையே ஏற்படும் புதிர்களை விடுவிக்க பத்திரிகை இல்லை. 

ஆண், பெண் தூய்மையாக, மனமொத்து வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன் வந்திருக்கிறோம்...// 

இந்த குறிப்புத்தான் முதல் இதழில் இடம்பெற்றிருக்கிறது. சொன்னபடியேதான் இதழையும் ஆசிரியர் நடத்தியிருக்கிறார். 

'காதல்' இதழ் முழுக்கவே காதல் பற்றித்தான் நிரம்பி வழிகிறது. பக்கத்துக்குப் பக்கம் காதல் ரசம் சொட்டுகிறது. திகட்டத் திகட்ட இருந்தாலும் திகட்டும்படி இல்லை. 

'காதல் கதை எழுதுவது எப்படி', 'காதலும் கல்யாணமும்' போன்ற தொடர்களுடன், உலகிலுள்ள பல நாட்டு அறிஞர்களும் காதல் பற்றி உயர்வாக எழுதியிருப்பவை எல்லாம் பொன்மொழியாக தொகுக்கப்பட்டு 'முத்துக் குவியல்' என்ற பெயரில் மாதம்தோறும் வெளியாகியிருக்கிறது. 

சிறுகதைகளும், கவிதைகளும் கூட காதலை மையமாகக் கொண்டதுதான். உள்ளூர் ஆட்களின் கதைகள் தவிர 'வெளிநாட்டு காதல் கதைகள்' என்ற தலைப்பின் கீழ் மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் வெளியிட்டிருக்கிறார். 

'குடும்பத்தில் நடப்பவை' என்னும் தலைப்பின் கீழ் கணவனும் மனைவியும் உரையாடுவது போல் ஒரு பகுதி இறுதி இதழ் வரை வந்துள்ளது. அந்தரங்கமான விஷயங்கள் அனைத்தும் இதில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. 

இன்று பெரும்பாலான பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் 'அந்தரங்க கேள்வி - பதில்' பகுதியை முதன்முதலில் தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொடுத்தது 'காதல்'தான். 

இது போக உறவுச்சிக்கல் குறித்து உளவியல் - உடற்கூறு மருத்துவர்களின் கட்டுரைகள் மாதந்தோறும் பக்கங்களை அலங்கரித்திருக்கின்றன. 

முக்கியமான விஷயம் 'காதல்' முதல் இதழ் முதல் இறுதி இதழ் வரை அதன் அட்டைப் படத்தில் இடம்பெற்றவர்கள் காதலர்கள்தான். வேறு யாரையும் அந்த இதழ் பிரசுரித்ததில்லை. 

விதிவிலக்கு 1948 அக்டோபர் இதழ். அந்த ஆண்டு காந்தியடிகள் கொலை செய்யப்பட்டதாலோ என்னவோ, இந்த இதழின் அட்டைப் படத்தை மட்டும் காந்தியடிகளும் கஸ்தூரிபாயும் அலங்கரிக்கிறார்கள். என்றாலும் இந்த இதழின் உள்ளே காந்திக்கும் கஸ்தூரிபாய்க்கும் இருந்த காதல்தான் தனிக் கட்டுரையாக வெளியாகியிருக்கிறது. 

இப்படி துணிச்சலுடன் இந்த 'காதல்' பத்திரிகையை நடத்தியவர் அரு.ராமநாதன். வெளியீட்டாளரும், ஆசிரியரும் இவர்தான். 

1980களின் இறுதியில் 'வயல்' மோகன் என்கிற சி.மோகன்தான் Mohan Chellaswamy முதன் முதலில் அரு.ராமநாதன் என்னும் பெயரை எனக்கு அறிமுகப்படுத்தினார். 'பிரேமா பிரசுரம்' சார்பில் வெளியான 'சிந்தனையாளர் வரிசை' நூல்களை அவசியம் நான் படிக்க வேண்டும் என்று சொன்னதுடன் அந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் தனது பரிசாக அவற்றை வாங்கியும் கொடுத்தார். 

''அரு.ராமநாதன் முக்கியமான ஒரு நபர். ஆனால், தமிழ்ச் சூழல் அவரை மறந்துவிட்டது. சொல்லப்போனால் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டிருக்கிறார்...'' என்று அடிக்கடி சி.மோகன் நேர் பேச்சில் குறிப்பிடுவார். 

1990களில் 'புதிய பார்வை' இதழில் அவர் 'நடைவழிக் குறிப்புகள்' தொடரை எழுதிய போது ஓர் அத்தியாயத்தையே அரு.ராமநாதனுக்காக ஒதுக்கியிருக்கிறார். 

''இவரைப் போன்ற ஓர் ஆளுமையாளரை காலம் மறக்க முற்படும்பொழுது, நாம் நினைவு கூர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது. அது நம் பயணத்தின் தொடர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கான அவசியமாகவும் இருக்கிறது...'' என சி.மோகன் அந்தக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருப்பது சத்தியமான வார்த்தைகள். 

இதன் பிறகு அரு.ராமநாதன் எழுதிய 'வீரபாண்டியன் மனைவி' நாவலை தேடிப் பிடித்து வாசித்தேன். மூன்று பாகங்கள் அடங்கிய இந்த நாவல் ஏறக்குறைய 1700 பக்கங்கள் கொண்டது. 1953ம் ஆண்டு ஜனவரி மாத 'காதல்' இதழில் தொடங்கிய இந்தத் தொடர் 1959ம் ஆண்டு மார்ச் இதழில் முடிவடைந்திருக்கிறது. 

ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளியான இந்த சரித்திர நாவல், தமிழ் வரலாற்று நாவல்களிலேயே முதன்மையானது. சிறப்பானது. 

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' மாபெரும் வெற்றியடைந்த போது, 'அது அல்ல சரித்திர நாவல். அலெக்சான்டர் டூமாஸின் நாவல்களை காப்பி அடித்து கல்கி எழுதியிருக்கிறார். உண்மையில் வரலாற்று நாவல் என்றால் இப்படியிருக்க வேண்டும்...' என நண்பர்களிடம் சூளுரைத்துவிட்டு அரு.ராமநாதன் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்ததாக சொல்வார்கள். 

இந்த நாவலில் பல புதுமைகளை இவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் கம்ப ராமாயணப் பாடலை கொண்டிருக்கும். நாவலின் நிலைக்களன் மதுரை என்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் 'ம' என்ற எழுத்துடனேயே தொடங்கும். கம்ப ராமாயணம் பால காண்டத்தில் தொடங்கி யுத்த காண்டத்தில் முடிகிறது என்றால் 'வீரபாண்டியன் மனைவி'யின் முதல் பாகம் யுத்த காண்டம்; இரண்டாவது பாகம் சுந்தர காண்டம்; மூன்றாவது பாகம் பால காண்டம்... என தலைகீழாக இருக்கும். 

இந்த 'வீரபாண்டியன் மனைவி'யின் தலைசிறந்த கதாபாத்திரம் என ஜனநாதனை சொல்லலாம். இந்த கதாபாத்திரத்துக்கு சமமாக படைக்கப்பட்ட பிற கேரக்டர்களை தமிழ்ப் புனைக்கதை உலகில் தேடினால் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் கிடைக்கும். அந்தளவுக்கு பவர்ஃபுல்லான ஸ்கெட்ச். 

ஜனநாயகம், அரசாட்சி தொடர்பாக ஜனநாதன் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் பட்டாசு. இன்றும் பொருந்தக் கூடிய நக்கல், நையாண்டி. குறிப்பாக மந்திராலோசனை அரங்கில் ஆசனங்கள் ஏன் படி வாரியாக போடப்பட்டிருக்கின்றன என்பதற்கு அந்தப் பாத்திரம் அளிக்கும் விளக்கம் இருக்கிறதே... தெள்சன்ட் வாலா. 

''நான் முட்டாள்களை ஏமாற்ற முட்டாள்களுக்கு வழிகாட்டுவேனே தவிர நானே முட்டாள்களோடு ஒரு முட்டாளாக கலந்து கொள்வதில்லை!'' 

இன்னொரு இடம் - 

''ஏகாதிபத்தியம் என்பது அடிமைப் பிரஜைகளைத்தான் உற்பத்தி செய்து என்றாவது ஒரு நாள் அன்னிய ஆதிக்கத்தின் வருகைக்கு அழிவுப்பாதை போடும். அதுதான் பல்லாண்டுகளாக பாரத தேசத்தின் சரித்திரமாக இருந்து வந்திருக்கிறது. கிராம சுயாட்சியின் மூலம் ஜனங்களின் உரிமைகளும் தனி மனிதனின் சுதந்திரமும், நல்வாழ்வும் பெருக வேண்டுமானால் ஏகாதிபத்ய முறை அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்...''

சுவாரஸ்யமான தகவல் - 'வீரபாண்டியன் மனைவி'; சாண்டில்யனின் 'கன்னி மாடம்' ஆகிய நாவல்கள் அனைத்தும் ஒரே வரலாற்றுக் காலகட்டத்தை சேர்ந்தவைதான். ஆனால், டிரீட்மெண்ட்டும் வேறு வேறாக இருக்கும். சரித்திர நாவல் பிரியர்கள் ஒரே நேரத்தில் இந்த புதினங்களை வாசித்துப் பார்க்கலாம். 

எனக்கு அறிமுகமாகும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த நாவலை படிக்கும்படி பரிந்துரைப்பேன். குறிப்பாக வெகுஜன பத்திரிகைகளில் புதிதாக எழுத வருகிறவர்கள் அவசியம் ஒருமுறையாவது 'வீரபாண்டியன் மனைவி'யை வாசிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். 

கூடவே இ.பாலகிருஷ்ண நாயுடு எழுதிய 'டணாய்க்கன் கோட்டை' நாவலையும் வாசிப்பது நல்லது. 

கோவையில் இருந்து வெளியான நாளிதழில் தொடராக வந்த சரித்திரப் புதினம் இது. நீண்ட வருடங்களாக விற்பனைக்கு கிடைக்காத இந்த நாவலை சமீபத்தில்தான் 'அம்ருதா பதிப்பகம்' தேடிப் பிடித்து அச்சிட்டிருக்கிறது. ஃபிக்‌ஷனுக்கும், நான் ஃபிக்‌ஷனுக்கும் இடைப்பட்ட அந்த எழுத்து நடையும், திப்பு சுல்தான் குறித்த சரித்திர விவரங்களும் சிலிர்க்க வைக்கும். 

ஆனால், முகநூலிலும் இணையதளத்திலும் எழுதி வரும் நண்பர்கள் 'டணாய்க்கன் கோட்டை'யை படிக்காமல் இருப்பதே உத்தமம். ஏனெனில் அந்தக் கால புறச்சூழல் பிறப்பித்த நடையில் எழுதப்பட்ட அந்தப் புதினம் இணைய நண்பர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.
 
இந்தப் பிரச்னை 'வீரபாண்டியன் மனைவி'யில் கிடையாது. அட்டகாசமான வெகுஜன நாவல். ஆனால், எந்த விமர்சகரும் இதுவரை இந்த நாவல் பற்றி பேசியதும் இல்லை. எழுதியதுமில்லை. 

நாவலுக்கு மட்டுமல்ல 'காதல்' இதழுக்கும் இதுதான் கதி. 
இத்தனைக்கும் 1947 நவம்பர் மாதம் இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது அரு.ராமநாதனுக்கு வயது 23. அதன் பிறகு, தான் காலமாகும் வரை - அதாவது 18.10.1974 வரை தொடர்ந்து காதலுடன் 'காதலை' நடத்தியிருக்கிறார். இதனை அடுத்து இவரது சந்ததியினர் இப்பத்திரிகையை விடாமல் கொண்டு வந்திருக்கிறார்கள். கடைசி இதழ் 1980ல் வெளிவந்திருக்கிறது. 

ஏறக்குறைய 33 ஆண்டுகள் வெற்றிகரமாக, அதுவும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையான 'காதல்' இதழ் எவரது நினைவின் அடுக்கிலும் இப்போது இல்லை என்பது மிகப்பெரிய சோகம். 

அவ்வளவு ஏன்... இந்த இதழ் வெளிவந்துக் கொண்டிருந்த நாளிலேயே தமிழகம் 'காதல்' பற்றி பேச மறுத்திருக்கிறது. இதற்கு உதாரணம் 'கல்கி' இதழ். 

1963ம் ஆண்டு ஆகஸ்டில் 'குண்டு மல்லிகை' என்ற சமூக நாவலை 'கல்கி' வார இதழில் அரு.ராமநாதன் தொடராக எழுதியிருக்கிறார். 

இதற்கான அறிவிப்பில் ''தமிழ் மக்களின் இதயங்களில் நிலையான இடம் பெற்றுவிட்ட 'இராஜராஜ சோழன்' நாடகத்தை அளித்த திரு. அரு.ராமநாதன் எழுதிய சமூகத் தொடர் 'கல்கி' இதழில் விரைவில் ஆரம்பமாகிறது...'' என்றுத்தான் குறிப்பிட்டது. 

அப்போது 'காதல்' இதழ் 16வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தது. ஆனாலும் 'காதல்' ஆசிரியர் என்று சொல்ல 'கல்கி' தயங்கியது. 

இந்த நிலை என் அப்பாவுக்கும் இருந்தது. நிச்சயம் என் அப்பா, தன் இளமைக் காலத்தில் 'காதல்' பத்திரிகையை படித்திருப்பார். ஆனாலும் என்னிடம் அது குறித்து பேசியதேயில்லை. பதிலாக வெவ்வேறு இதழ்கள், தொடர்கதைகள் குறித்து பல இரவுகள் விடிய விடிய என் தலையை கோதியபடி பேசியிருக்கிறார். 

வியர்வை மணம் வீசும் அவர் தொப்பையில் தலைசாய்த்தபடி அவற்றை எல்லாம் கேட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. 'குண்டு மல்லிகை' நாவல் கூட அப்பா பைண்டு செய்து வைத்திருந்த அடுக்கில் இருந்து எடுத்துத்தான் படித்தேன். அப்போது 'காதல்' குறித்து நான் கேள்விப்படாத நேரம். 

'வயல்' மோகனை சந்தித்த பிறகுதான் 'காதல்' குறித்து அறிந்தேன். அப்பாவிடம் கேட்டபோது புன்னகையே பதிலாக கிடைத்தது. 

ஏறக்குறைய இதே குணத்துடன்தான் 1947 - 1980 காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். வெகுஜன வாசகர்களாக இருந்த அவர்கள் அனைவரும் 'காதல்' பத்திரிகையையும் அறிந்திருக்கிறார்கள், தொடர்ச்சியாக படித்திருக்கிறார்கள். 

ஆனால் - 

அதை வெளியில் சொல்ல கூச்சப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் முறைகேடான உறவுகள் சார்ந்த காதலை 'காதல்' பத்திரிகை பிரசுரித்ததேயில்லை. 

கணவன் - மனைவி; காதலன் - காதலி ஆகியோருக்கு இடையில் இருக்க வேண்டிய இணக்கத்தைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறது. 

என்றாலும் இதழ் குறித்து விவாதிக்கும் துணிச்சல் ஒருவரிடமும் இல்லை. 1960களின் பிற்பகுதிக்கு பிறகு 'காதல்' இதழில் கவர்ச்சிகரமான படங்கள் இடம்பெற ஆரம்பித்திருக்கின்றன. அதற்காக 'சரோஜாதேவி', 'பருவகாலம்', 'விருந்து' அளவுக்கெல்லாம் இறங்கவில்லை. 

அப்படியிருக்க ஏன் தமிழ்ச் சமூகம் 'காதல்' என்ற பெயரில் ஓரு வெகுஜன இதழ் 33 ஆண்டுகள் வெளிவந்தது என்பதையே பதிவு செய்ய மறுக்கிறது என்று புரியவில்லை. அத்துடன் பழைய புத்தகக் கடையிலோ, கரையான் அரிப்பதற்காகவே உயிர் வாழும் வாடகை நூலகத்திலோ கூட ஏன் ஒரு 'காதல்' பிரதி ஒன்று கூட காணக்கிடைக்கவில்லை என்பதற்கும் பதில் கிடைக்கவில்லை. 

சமீபத்தில் ரோஜா முத்தையா நூலகத்தில் 'காதல்' இதழ்களை பார்க்க நேர்ந்தது. ஆச்சர்யம் கலந்த வியப்புத்தான் ஏற்பட்டது. இதோ இந்த நிமிடம் வரை அந்த உணர்வு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

என்ன மாதிரியான உள்ளடக்கத்தை எல்லாம் சர்வசாதாரணமாக அரு.ராமநாதன் கொடுத்திருக்கிறார்... அவற்றை எல்லாம் அந்தக் கால 'குமுதமும்', 'ஆனந்த விகடனும்' எப்படியெல்லாம் உருமாற்றி பயன்படுத்திக் கொண்டன என்பதை நினைக்கும்போது - 

ஒன்றுத்தான் தோன்றியது. 

இந்த ஜானர் ஏன் இப்போது இல்லாமல் போய்விட்டது? 

திருமணமாகாத 23 வயது இளைஞனுக்கு இப்படியொரு பத்திரிகையை திருச்சியிலிருந்து தொடங்க வேண்டும் என்று எப்படி தோன்றியது? 

விடை தெரியா கேள்விகள். 

1950 வாக்கில் சென்னை வந்த அரு.ராமநாதன் 'கலைமணி' என்னும் சினிமா மாத இதழை 1949 ஏப்ரல் முதல் நடத்தியிருக்கிறார். சில ஆண்டுகள் மட்டுமே வெளியான இந்த இதழில் உதவி ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கியவர்தான் பிற்காலத்தில் 'வாண்டு மாமா' என்று புகழப்பட்ட கிருஷ்ண மூர்த்தி. 

அதே போல் 1954ம் ஆண்டு சிரஞ்சீவியை ஆசிரியராக கொண்டு 'மர்மக் கதை' என்னும் மாத நாவலையும் (பாக்கெட் நாவல், க்ரைம் நாவலுக்கு எல்லாம் முன்னோடி) வெளியிட்டிருக்கிறார். 

'கலைமணி'யும் சரி, 'மர்மக் கதை'யும் சரி அதிக ஆண்டுகள் தாக்குப் பிடிக்கவில்லை. 'காதல்' மட்டும்தான் இறுதி வரை கம்பீரமாக வந்திருக்கிறது. 

என்றாலும் 'காதலை'ப் பற்றி பேசத்தான் ஆளில்லை. 

அன்றும் இன்றும் நிஜ வாழ்வில் அதுதானே நிலமை? 

பின் குறிப்பு: 

1. 'தங்கப் பதுமை', 'பூலோக ரம்பை', 'ஆரவல்லி' போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் அரு.ராமநாதன்தான். 

2. டி.கே.எஸ். நாடகக் குழு நடத்திய போட்டிக்காக இவர் எழுதியதுதான் 'இராஜராஜ சோழன்' நாடகம். 

3. இதுவரை 350க்கும் மேற்பட்ட நூல்களை 'பிரேமா பிரசுரம்' வெளியிட்டிருக்கிறது. 

4. 'அசோகன் காதலி' இவர் எழுதிய முதல் சரித்திர நாவல். குறுநாவல் என்றும் சொல்லலாம். 

5. தன் இறுதிக் காலத்தில் இவர் எழுதிய 'வெற்றிவேல் வீரத்தேவன்' சரித்திர நாவலை வாசிக்காமல் இருப்பதே இவருக்கு நான் செய்யும் மரியாதை. 'வீரபாண்டியன் மனைவி'யை எழுதியவரா இந்த நாவலையும் படைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும். 

6. தன் கனவுப் படைப்பாக 'ரசியா பேகம்' சரித்திர நாவலை நினைத்திருந்தார். அதற்காக குறிப்புகளையும் சேகரித்திருந்தார். ஆனால், எழுத ஆரம்பிப்பதற்குள் தன் 50வது வயதில் காலமாகிவிட்டார்.

Friday, September 16, 2022

Writer Anuthama: Author Anudhama by Sankara Subramanian: Keezhamboor

https://www.facebook.com/100001913660140/posts/pfbid02xsiTfAWPQ6P1mZTzmFbw3eypPR2JC1i37VJvdwABkvQSBZQtMJWvuAVB23hW9iAFl/

சாகித்திய அகாதெமியும் சென்னை எம் ஒ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய எழுத்தாளர் அநுத்தமா பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டேன். போதிய நேரம் இல்லாததால் மிகக் குறைவாகவேப் பேச நேர்ந்தது! நான் பேச எண்ணியதின் முழு வடிவம் கீழே.................

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு மாலன் சார் எழுத்தாளர் அம்பை அவர்கள் மணிமேகலை பதிப்பக ரவி தமிழ்வாணன் அவர்கள் மற்றும் டாக்டர் ஜெ. பாஸ்கரன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்......

விழா அழைப்பிதழ்.........................

கலைமகளும் அநுத்தமாவும்
..........................................................

- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்

உலகம் எங்கும் இதிஹாச, புராணங்கள் எல்லா நாடுகளிலும் கவிதைகளாக, காப்பியங்களாக உருவாகியுள்ள தொன்மையின் சிறப்பை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கவிதைகளாக, பாடல்களாக இருந்த பாங்கு மாறி வசனம் அதாவது உரைநடையை இலக்கியம் வாகனமாக்கிக் கொண்டது.அநேகமாக சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகத்தான் இந்த மாற்றம் ஏற்பட்டது.

உலகின் முதல் சிறுகதை இர்விங் வாஷிங்க்டன் எழுதிய “ரிப் வான் விங்கிள்” என்பதாகும். இந்தச் சிறுகதையைக் கொண்ட அவரது சிறுகதைத் தொகுதியான “தி ஸ்கெட்ச்” 1811-ஆம் ஆண்டு பிரசுரம் ஆயிற்று. இலக்கிய வரலாற்றில் சிறுகதை உருவாகி இப்போது இரு நூறு ஆண்டுகள் ஆகின்றன.சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான்.
சிறுகதைக்குக் கரு, குணாதிசயம், பாத்திரப் படைப்பு, சூழல், இவையே முக்கியமானவை. இந்த வரையறைக்குள் இருக்கின்ற சிறுகதைகள் பெரிதும் பேசப்படுகின்றன. தமிழ் சிறுகதைக்குத் தளம் அமைத்துத் தந்த பெருமைக்குரியவர் வ.வே.சு. அய்யர். அவர் எழுதிய “குளத்தங்கரை அரசமரம்” (1913-ஆம் ஆண்டு) தமிழில் சிறுகதையின் திருந்திய வடிவு பெற்ற முதல் கதை என்று துணிந்து கூறலாம். வ.வே.சு. அய்யர் பல மொழிகளில் புலமை பெற்றவர். உலக இலக்கியங்களின் நோக்கும் - போக்கும் கண்டறிந்தவர்.
சிறுகதை இலக்கியத்தில் ஏற்பட்ட எண்ணற்ற மாற்றங்கள் வளர்ச்சியில் புதிய வடிவங்கள் 20-ஆம் நூற்றாண்டில் மத்தியில் பலரைப் பாதித்திருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன்.

 சிறுகதைகளைத் தெளிவாகச் சொல்லவும் வாசகர்கள் மனத்தில் அழுத்தந்திருத்தமாகப் பதியவைக்கும் வித்தையை பலர் பெற்றிருந்தார்கள்.அவர்களில் ஒருவர்தான் கலைமகளோடு மிக இணக்கமாக இருந்த எழுத்தாளர் அநுத்தமா ஆவார்.
வை,மு,கோதைநாயகி, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் போன்ற தமிழில் வெற்றிகரமான பெண் எழுத்தாளர்களின் வரிசையில் அனுத்தமாவும் குறிப்பிடத்தக்கவர். தமிழ் நாட்டின் “ஜேன் ஆஸ்டின்” என்று அழைக்கப்பட்டார். வடவார்காடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 1922-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பிறந்தார். தந்தை சேஷகிரி ராவ் வனத்துறை அதிகாரி. அம்மா இல்லத்தரசி. வனத்துறை அதிகாரி என்பதால் அடிக்கடி தந்தைக்கு பணி மாறுதல் கிடைக்கும் போதெல்லாம் வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டிய நிலைமை அநுத்தமாவுக்கு ஏற்பட்டது.எனவே அவர் அதிகம் படிக்க முடியாமல் போனது.

பால்ய வயதில் திருமணம். 14-வயதில் மின்சாரத்துறையில் பணியாற்றி வந்த பத்மனாபனைக் கைப்பிடித்தார். திருமணமாகி ஒன்பதுஆண்டுகள் கழித்து அதாவது தனது 23-ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.

கணவருடன் தனது எண்ணங்களை, தாம் கேட்ட சம்பாஷணைகளை, தான் பார்த்த நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் மணிக்கணக்கில் பேசுவார். நிறையப் புத்தகங்களை வாங்கிப் படிப்பார். கணவருடைய பூரண ஒத்துழைப்பும் இருந்தது. இவர் எழுதிய முதல் சிறுகதை “அங்கயற்கண்ணி” கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. ஆனாலும் இவருக்குப் புகழ், வெளிச்சம் கொடுத்தது கலைமகள் மாத இதழ்தான். கலைமகளில்தான் இவரது பல படைப்புகள் பிரசுரம் ஆயின.

 கலைமகள் நடத்திய நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டியில் இவரது “மணல் வீடு” நாவல் முதல் பரிசு பெற்றது. இந்த நாவலின் மூலம் தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராகத் தயார்ப்படுத்திக் கொண்டார்.

கலைமகளுக்கு என்று சில கொள்கைகள் உண்டு.சிறுகதைகள் யாரையும் புண்படுத்தாத வண்ணம் அமைக்கப்பெற வேண்டும். குடும்பப் பாங்கான பெண்கள் பலர் கலைமகளின் வாசகிகளாக இருந்த காரணத்தினால் குடும்பப் பாங்கான கதைகளையே கலைமகள் அதிகம் பிரசுரம் செய்தது. பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் சிறுகதைகள் நிகழ்காலத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதே சமயத்தில் எதிர்கால சந்ததியருக்குச் சொல்ல வேண்டிய செய்திகளைக் கட்டுக்கோப்பாகச் சொல்லவேண்டும்.

மேற்கண்ட இந்தக் கொள்கைகளில் தமிழ் அறிஞரும் கலைமகள் பத்திரிகையின் நீண்டநாள் ஆசிரியருமான திரு. கி.வா.ஜகன்னாதன் உறுதியாக இருந்தார்.
அநுத்தமாவின் கதைகள் குடும்பப்பாங்காகவே இருந்தன. தன்னுடைய கதைகளில் விரசத்தைக் கொஞ்சம்கூட இவர் கலந்ததில்லை. ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளை இவர் கற்றிருந்தார் என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயமாகும். அநுத்தமாவிடம் பேசுவது நூறு புத்தகங்களுக்குச் சமமானது. ஒரு மணி நேரத்தில் நூறு புத்தகங்களைப் படிக்கக்கூடிய வாய்ப்பினைத் தனது உரையாடல் மூலம் வழங்கி விடுவார் அநுத்தமா. இப்படி கி.வா.ஜ. அடிக்கடி சொல்வதுண்டு.
அநுத்தமாவை அவரது புகுந்த வீட்டுக்காரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவரின் மாமனார் ராஜேஸ்வரி என்ற இயற்பெயர் கொண்டவருக்கு ‘அநுத்தமா’ என்ற புனைப்பெயர் சூட்டினார். இவருடைய கணவர் பத்மநாபன் அனுசரணையாக இருந்தார்.

 சிறுகதைகளைவிட இவரது நாவல்கள் வலிமை வாய்ந்தவை.
கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அநுத்தமாவைத் தன் உடன்பிறவா தங்கை என்றே மேடைகளில் அறிமுகப்படுத்துவார். அநுத்தமாவும் கி.வா.ஜ.வை ‘அண்ணன்’ என்றே குறிப்பிடுவார்.
கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகன்னாதன் அவர்கள் ஒருமுறை இவருடைய வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.கணவர் பத்மநாபன் வாசல் வரை வந்து வாய் நிறைய வரவேற்றார். ‘‘ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் ஒரு கூட்டம் ஏற்பாடாகி இருக்கிறது. அதில் ரஷ்ய மொழியில் பேசுவதற்காக அநுத்தமா சென்றிருக்கிறார்” என்று அநுத்தமாவின் கணவர் சொன்னதும், ‘‘சினிமாக் காட்சி என்றால் “ரஷ்” போட்டுப் பார்க்கலாம், ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் அநுத்தமாவின் பேச்சை ரஷ் போட்டுக் கேட்க முடியுமா?” என்று கி.வா.ஜ. சொன்னதும் வீட்டில் உள்ள எல்லோரும் சிரித்தார்கள். ‘‘எனக்கு ரஷ்ய மொழி தெரியாது அதனால்தான் எனக்கு என் தங்கை அழைப்புக் கொடுக்கவில்லை போலும்!’’ என்று கூறி அநுத்தமாவின் கணவர் மற்றும் மாமனாரிடம் உரையாட ஆரம்பித்தார் கி.வா.ஜ. “ரஷ்ய மொழி தெரியாவிட்டால் என்ன? எனக்குக் கொஞ்சம் ரச்னாவாவது கலந்து கொடுக்கக்கூடாதா?” என்று கி.வா.ஜ. கேட்டபோது அக்கூட்டத்தினர் மீண்டும் சிரித்து மகிழ்ந்தார்கள்.
இந்த விஷயத்தை கி.வா.ஜ. அவர்களின் மூத்த மகன் சுவாமிநாதன் அவர்கள் என்னிடம் சொல்லி மகிழ்ந்தது உண்டு.

 கி.வா.ஜ. குடும்பமும் அநுத்தமா அவர்களின் குடும்பமும் ஒன்றுக்கொன்று அனுசரணையாக இருந்த குடும்பங்கள் ஆகும்.
கலைமகள் ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி இவர் கதைகளை எழுதித் தள்ளினார். அதனை அழகாகப் பிரதி எடுத்துக் கொடுக்கக்கூடியவர் அவருடைய கணவர் பத்மநாபன். அநுத்தமாவின் மாமனார்தான் கலைமகளின் அலுவலகத்திற்கு அக்கதையைக் கொண்டு வந்து சேர்ப்பார். அவருடைய குடும்பமே அநுத்தமா எழுத்து வளர்ச்சியில் அக்கறை காட்டியது.

அநுத்தமாவுக்கு நன்றாக ஆங்கிலம் பேச வரும். ‘‘என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடு” என்று கி.வா.ஜ கேட்டுக் கொண்டது உண்டு. 

‘‘தமிழ் அறிஞரான கி.வா. ஜ. விற்கு ஆங்கிலம் தெரியுமா?’’ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது உண்டு. கலைமகள் மாத இதழ் தமிழ் செய்யும் மாத இதழாகும். நல்ல தமிழை வளர்ப்பதற்காக மதராஸ் லா ஜர்னல் நடத்திய நாராயணசாமி ஐயரால் 1932-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதழாகும். இதன் முதல் ஆசிரியர் உ.வே. சாமிநாத அய்யர் ஆவார். அவரைத் தொடர்ந்து அவருடைய தலைமை மாணாக்கரான கி.வா.ஜ. 50-ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"தமிழ்ப் புலவர் தேர்வில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் மாணவர் கி.வா.ஜ. தமிழ் அறிஞரான கி.வா.ஜ. வுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க நியாயமில்லை என்றுதான் பலரும் எண்ணுவார்கள். ஆனால் ஆங்கிலக் கட்டுரைகளைப் படிக்கவும் அதில் உள்ள சாராம்சங்களைத் தெரிந்து கொள்ளவும் கி.வா.ஜ.வால் முடியும். ஆங்கிலத்தில் சின்னச் சின்ன உரையாடல்களையும் அவரால் மேற்கொள்ள முடியும்’’ என்று கி.வா.ஜ.வின் உதவியாளராக இருந்த திரு. அனந்தன் அவர்கள் என்னிடத்தில் தெரிவித்தது உண்டு. 1995-96ஆம் ஆண்டுகளில் இவரை நான் சந்தித்தபோது கி.வா.ஜ. அவர்களைப் பற்றியும் அநுத்தமா அவர்களின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றியும் என்னிடத்தில் அனந்தன் அவர்கள் பகிர்ந்து கொண்டதுண்டு. கி.வா.ஜ. அவர்களைப் பற்றி ஒரு நூலும் அனந்தன் எழுதியிருக்கிறார்.

தமது இளமைக்காலத்தில் (1926-27) கி.வா.ஜ. அவர்கள் திருக்குறளில் நல்ல தேர்ச்சி பெற்று இருந்தார்.அவருடைய நண்பர் டோவர் துரை என்பவரின் மனைவிக்கு திருக்குறள் வகுப்பு எடுக்கக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவருக்கு அப்பொழுது மாதம் ரூபாய் 15 என்று பேசப்பட்டது. கி.வா.ஜ. அவர்கள் முதன்முதலாக வாங்கிய சம்பளம் திருக்குறள் வகுப்பு எடுப்பதற்காகத்தான் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
டோவர் துரையின்  வீட்டில் நிறைய ஆங்கிலப் புத்தகங்களும், ஆங்கிலத் தினசரிகளும் மேஜையின் மீது பரந்து கிடக்கும். திருக்குறள் வகுப்பு சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம் அந்த ஆங்கிலப் பேப்பர்களைப் படித்தார். தமிழ் தெரிந்த டோவர் துரையுடன் சின்னச் சின்ன ஆங்கில உரையாடல் மூலமாகவும் தமது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார் கி.வா.ஜ. என்று பெருமிதத்துடன் திரு. அனந்தன் அவர்கள் சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 அநுத்தமாவுடன் சின்னச் சின்ன ஆங்கில உரையாடல்களையும் கி.வா.ஜ. செய்திருக்கிறார்.அவருடைய மகன் சுவாமிநாதன் (ஆடிட்டர் படிப்புப் படித்தவர்.) இதற்கு உதவியும் செய்திருக்கிறார். அநுத்தமா அவர்களின் குடும்பப் பாங்கான சிந்தனைகளை கி.வா.ஜ. மிகச் சரியாக அவருடைய கதைகளுக்கு உருவம் கொடுத்து கலைமகளில் பயன்படுத்திக் கொண்டார். எவ்வளவோ விஷயங்கள் தெரிந்தபோதும் அநுத்தமா பெரியவர்களிடம் காட்டிய அன்பு என்பது, மரியாதை என்பது பாராட்டத்தக்கதாகும்.

கலைமகளின் எழுத்தாளர்களில் அநுத்தமா குறிப்பிடத்தக்கவர் என்பார் அகிலன். அது மிகையல்ல; அகிலன் அவர்களுடைய பல கதைகளும், நாவல்களும் கலைமகளில் இடம் பெற்று அகிலனுக்கு வெற்றி தேடித் தந்தன.அக்கால கலைமகள் எழுத்தாளர்கள் ஒருவரோடொருவர் நட்புப் பாராட்டி, குடும்பம் போலப் பழகுவார்கள். குடும்பத்தின் தலைவராக கி.வா.ஜ. இருப்பார். குடும்ப உறுப்பினர்களாக தமிழ் எழுத்தாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்குள் எந்த ஒரு வித்தியாசத்தையும் காட்டாமல் அவர்களை ஊக்குவித்த பெருமை கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. வுக்கு உண்டு.தன்னுடைய குழந்தைகளிடம் ஒரு தகப்பனார் பாசம் காட்டுவதில் அளவுகோல் வைப்பாரா? அதுபோலத்தான் கி.வா.ஜ. எல்லா எழுத்தாளர்களையும் சமமாகவே மதித்து நடத்தினார்.
எழுத்தாளர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் சுவாரஸ்யமான மொழிகளையும்கேட்டு ரசிப்பார் கி.வா.ஜ. அவர்கள். 

எழுத்தாளர் அகிலன் அவர்கள் அநுத்தமாவைப் பார்த்து, ‘‘சமையலுக்கு மட்டுமல்ல; கதைகளுக்குப் பாத்திரங்களை சமையலறையிலிருந்தே எடுக்கிறாயே?” என்று பாராட்டினார். இதைக் கேட்டு ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தினார் கி.வா.ஜ. (ஆனந்தக் கண்ணீர்) அநுத்தமா அவர்கள் பதினெட்டு முழப் புடவையைத்தான் (மடிசார்) கட்டிக் கொண்டு பெரிதும் காட்சி அளிப்பார். வெளியில் வரும்போதும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதும் எடுப்பாகப் புடவைகளைத் தேர்வு செய்து கட்டிக்கொண்டு வருவார். இப்படி பிரபல எழுத்தாளர் உஷா சுப்பிரமணியத்தின் மாமியார் ராஜம்மாள் கருத்துத் தெரிவிக்கிறார்.

தாம் எதை நம்பினாரோ அப்படியே வாழ்ந்து காட்டியவர் அநுத்தமா அவர்கள். பறவைகளை நேசிக்கத் தெரிந்தவர். உலகில் உள்ள உறவுகள் ஒவ்வொன்றையும் ஆத்மார்த்தமாக நேசிப்பதனாலேயே அவரால் குடும்பப் பாங்கான கதைகளை எழுத முடிந்தது. அவருடைய பரந்த வாசிப்பும், பன்மொழித் திறமையும் கை கொடுத்தது.

ஒருமுறை கி.வா.ஜ. அவர்கள் “கலைமகள் இதழுக்கு ஒரு நாவல் எழுதித் தர முடியுமா?” என்று கேட்க, அனுத்தமா உடனே ஒப்புக்கொண்டாராம். “எத்தனை நாளில் தர முடியும்?” எனக் கி.வா.ஜ. கேட்க, ‘‘பத்து நாளில்” என்று அநுத்தமா வாய் தவறிச் சொல்லிவிட்டாராம். “ஒரு   நாவலை எப்படிப் பத்து நாட்களில் முடிக்கமுடியும்?” என்று கி.வா.ஜ. கேட்டார். ‘‘சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவேன்” என்றார் அநுத்தமா. அந்த நாளே அநுத்தமா எழுதத் தொடங்கினார். எழுத எழுத அவைகளைப் பிரதி எடுத்துப் பத்திரப்படுத்தினார் பத்மநாபன். கி.வா.ஜ. அவர்களிடம் சொன்னபடி பத்தே நாளில் நாவலை முடித்து  சேர்த்தபோது அவர் அசந்தே போனார். ‘‘ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார்’’ என்கிற பழமொழியை மாற்றி ‘‘ஒரு பெண்ணின் வெற்றியே எனது வெற்றி’’ என்று காட்டியவர் அநுத்தமாவின் கணவர் பத்மநாபன் என்று தன்னைப் பார்க்க வரும் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி வியந்து போவார் கி.வா.ஜகன்னாதன்.
1949-ஆம் ஆண்டு முதல் (“மணல் வீடு” நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி அய்யர் பரிசு பெற்ற நாள் முதல்) 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி வரை (அவர் மறைந்த நாள்) கலைமகள் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தார் அநுத்தமா.இவருடைய பேட்டிக் கட்டுரை ஒன்றை கலைமகளில் நான் வாங்கிப் பிரசுரித்ததும் உண்டு.

ஒரு எழுத்தாளருக்கு அவசியம் தேவை அமைதியான சூழல், எழுத ஊக்குவிக்கும் நல்ல நட்பு உள்ளங்கள், வெளியான கதைகளைப் பாராட்டும் சிறந்த வாசகர்கள், எழுதியவைகளைச் செம்மைப் படுத்தி வெளியிடும் பத்திரிகைகள். இவை அனைத்தும் அநுத்தமாவின் வாழ்க்கையில் வளமாகக் கிடைத்தன.

“கேட்ட வரம்” என்ற நாவல் ‘பாளையம்’ என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிக் கூறும் நூல். இந்த நாவலை காஞ்சி மகாப் பெரியவர் பாராட்டியுள்ளார். ‘‘ஒரே ஒரு வார்த்தை” என்ற இவரது நாவல் ‘‘மனோதத்துவ ரீதியில் எழுதப்பட்ட தமிழில் வெளியான முதல் நாவல்’’ என்ற பெருமைக்குரியது.

காளிதாசன் ரகுவம்சம் மகா காவியத்தைத் துவங்கும் பொழுது கடவுள் வாழ்த்துப்பாடலாக சிவனையும், பார்வதியையும் வணங்குகிறான். தனக்கு ஆசி புரியும்படி வேண்டுகிறான்.” சொல்லும் பொருளும் போல் இணைந்து நிற்கும் நீவிர் இருவரும் எனக்கு சொல் (காவியத்திறன்) மற்றும் பொருள் (கருத்தாழம்)ஆகிய இரண்டையும் அளிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். அதாவது அர்த்தமும் இருக்க வேண்டும்; தரமும் இருக்கவேண்டும் என்பது காளிதாசனின் பிரார்த்தனை. இறைவன் அருள் புரிந்தான். அழகான காவியம் நமக்குக் கிடைத்தது. அதுபோல இறை பக்தி கொண்ட அநுத்தமாவிற்கு இறைவனின் பரிபூர்ண அருள் இருந்த காரணத்தினால் (கலைமகளின் அருள் இருந்த காரணத்தினால்) சொல்லும் பொருளும், அவரது கதைகளில் விரிந்து நமக்குத் தரமான இலக்கியங்கள் கிடைத்தன. அநுத்தமாவின் புகழ் சிறுகதை, நாவல் இலக்கியங்களில் என்றும் போற்றத்தக்கதாக பேசப்படும் என்பது திண்ணம். 

வாகர்தௌ இவ ஸம்ப்ருக்தௌ வாகர்த ப்ரதிபதயே!
ஜகத: பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ!!
(ரகுவம்சம் 1: 1)