Friday, October 28, 2022

Aru Ramanadhan: Kadhal: Tamil Literature and Magazines by KN Sivaraman

'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்

தி.ஜானகிராமனின் 'குளிர்' சிறுகதை எந்த இதழில் பிரசுரமானது தெரியுமா? 'காதல்' பத்திரிகையில்! 

யெஸ், பத்திரிகையின் பெயரே 'காதல்'தான். மட்டுமல்ல கு.அழகிரிசாமி, ஆர்.சூடாமணி, மு.வரதராசனார், டாக்டர் மா.ராசமாணிக்கனார், வல்லிக்கண்ணன், அகிலன், மாயாவி... என பல பிரபலங்கள் இந்த மாத இதழில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்கள். 

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இப்படியொரு பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்த இந்த 2022லும் யோசிக்கிறோம். அப்படியிருக்க 1947ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தப் பத்திரிகை பிறந்திருக்கிறது  - அதுவும் தமிழில் - என்றால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்? 

முதல் இதழில் 'காதல்' பத்திரிகையின் அவசியம் குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை பாருங்கள்: 

//இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. இதுவரை சுதந்திரம் ஒன்றுதான் நமது ஒரே இலட்சியமாக இருந்து வந்தது. இனி, நம்முடைய லட்சியங்கள் பல. 

முதலில் சென்ற நூற்றைம்பது வருஷங்களாக அல்ல, சென்ற ஆயிரம் வருஷங்களாக நம் சமூகத்தில் குவிந்து வந்த குப்பைகளை வாரிக் கொட்ட வேண்டும். மக்கள் வாழ்க்கைத் துயர்களிலிருந்து விடுபட்ட வாழ்க்கை வாழ வகை செய்ய வேண்டும். இப்பெரு நோக்கத்தோடு பல துறைகளில் பல பத்திரிகைகள் உண்டு. 

அரசியல் சூதாட்டத்தைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், குடும்ப அரசியலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை. 

பொருளாதாரச் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை உண்டு. ஆனால், கணவன் மனைவியரிடையே எழும் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை. 

நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டும் பாதி வயிறு நிறையாத தொழிலாளிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், வாழத் தெரியாமல் தவிக்கும் இளம் தம்பதிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.

நாட்டின் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், ஆண், பெண் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் இல்லை. 

பாலர்களுக்கென்றும், பக்தர்களுக்கென்றும், ஜோசியத்திற்கென்றும், சினிமாவுக்கென்றும் பத்திரிகை உண்டு. போட்டிப் புதிர்களை விடுவிப்பதற்கென்றும் பத்திரிகை உண்டு. ஆனால், காதலர்களிடையே ஏற்படும் புதிர்களை விடுவிக்க பத்திரிகை இல்லை. 

ஆண், பெண் தூய்மையாக, மனமொத்து வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன் வந்திருக்கிறோம்...// 

இந்த குறிப்புத்தான் முதல் இதழில் இடம்பெற்றிருக்கிறது. சொன்னபடியேதான் இதழையும் ஆசிரியர் நடத்தியிருக்கிறார். 

'காதல்' இதழ் முழுக்கவே காதல் பற்றித்தான் நிரம்பி வழிகிறது. பக்கத்துக்குப் பக்கம் காதல் ரசம் சொட்டுகிறது. திகட்டத் திகட்ட இருந்தாலும் திகட்டும்படி இல்லை. 

'காதல் கதை எழுதுவது எப்படி', 'காதலும் கல்யாணமும்' போன்ற தொடர்களுடன், உலகிலுள்ள பல நாட்டு அறிஞர்களும் காதல் பற்றி உயர்வாக எழுதியிருப்பவை எல்லாம் பொன்மொழியாக தொகுக்கப்பட்டு 'முத்துக் குவியல்' என்ற பெயரில் மாதம்தோறும் வெளியாகியிருக்கிறது. 

சிறுகதைகளும், கவிதைகளும் கூட காதலை மையமாகக் கொண்டதுதான். உள்ளூர் ஆட்களின் கதைகள் தவிர 'வெளிநாட்டு காதல் கதைகள்' என்ற தலைப்பின் கீழ் மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் வெளியிட்டிருக்கிறார். 

'குடும்பத்தில் நடப்பவை' என்னும் தலைப்பின் கீழ் கணவனும் மனைவியும் உரையாடுவது போல் ஒரு பகுதி இறுதி இதழ் வரை வந்துள்ளது. அந்தரங்கமான விஷயங்கள் அனைத்தும் இதில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. 

இன்று பெரும்பாலான பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் 'அந்தரங்க கேள்வி - பதில்' பகுதியை முதன்முதலில் தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொடுத்தது 'காதல்'தான். 

இது போக உறவுச்சிக்கல் குறித்து உளவியல் - உடற்கூறு மருத்துவர்களின் கட்டுரைகள் மாதந்தோறும் பக்கங்களை அலங்கரித்திருக்கின்றன. 

முக்கியமான விஷயம் 'காதல்' முதல் இதழ் முதல் இறுதி இதழ் வரை அதன் அட்டைப் படத்தில் இடம்பெற்றவர்கள் காதலர்கள்தான். வேறு யாரையும் அந்த இதழ் பிரசுரித்ததில்லை. 

விதிவிலக்கு 1948 அக்டோபர் இதழ். அந்த ஆண்டு காந்தியடிகள் கொலை செய்யப்பட்டதாலோ என்னவோ, இந்த இதழின் அட்டைப் படத்தை மட்டும் காந்தியடிகளும் கஸ்தூரிபாயும் அலங்கரிக்கிறார்கள். என்றாலும் இந்த இதழின் உள்ளே காந்திக்கும் கஸ்தூரிபாய்க்கும் இருந்த காதல்தான் தனிக் கட்டுரையாக வெளியாகியிருக்கிறது. 

இப்படி துணிச்சலுடன் இந்த 'காதல்' பத்திரிகையை நடத்தியவர் அரு.ராமநாதன். வெளியீட்டாளரும், ஆசிரியரும் இவர்தான். 

1980களின் இறுதியில் 'வயல்' மோகன் என்கிற சி.மோகன்தான் Mohan Chellaswamy முதன் முதலில் அரு.ராமநாதன் என்னும் பெயரை எனக்கு அறிமுகப்படுத்தினார். 'பிரேமா பிரசுரம்' சார்பில் வெளியான 'சிந்தனையாளர் வரிசை' நூல்களை அவசியம் நான் படிக்க வேண்டும் என்று சொன்னதுடன் அந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் தனது பரிசாக அவற்றை வாங்கியும் கொடுத்தார். 

''அரு.ராமநாதன் முக்கியமான ஒரு நபர். ஆனால், தமிழ்ச் சூழல் அவரை மறந்துவிட்டது. சொல்லப்போனால் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டிருக்கிறார்...'' என்று அடிக்கடி சி.மோகன் நேர் பேச்சில் குறிப்பிடுவார். 

1990களில் 'புதிய பார்வை' இதழில் அவர் 'நடைவழிக் குறிப்புகள்' தொடரை எழுதிய போது ஓர் அத்தியாயத்தையே அரு.ராமநாதனுக்காக ஒதுக்கியிருக்கிறார். 

''இவரைப் போன்ற ஓர் ஆளுமையாளரை காலம் மறக்க முற்படும்பொழுது, நாம் நினைவு கூர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது. அது நம் பயணத்தின் தொடர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கான அவசியமாகவும் இருக்கிறது...'' என சி.மோகன் அந்தக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருப்பது சத்தியமான வார்த்தைகள். 

இதன் பிறகு அரு.ராமநாதன் எழுதிய 'வீரபாண்டியன் மனைவி' நாவலை தேடிப் பிடித்து வாசித்தேன். மூன்று பாகங்கள் அடங்கிய இந்த நாவல் ஏறக்குறைய 1700 பக்கங்கள் கொண்டது. 1953ம் ஆண்டு ஜனவரி மாத 'காதல்' இதழில் தொடங்கிய இந்தத் தொடர் 1959ம் ஆண்டு மார்ச் இதழில் முடிவடைந்திருக்கிறது. 

ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளியான இந்த சரித்திர நாவல், தமிழ் வரலாற்று நாவல்களிலேயே முதன்மையானது. சிறப்பானது. 

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' மாபெரும் வெற்றியடைந்த போது, 'அது அல்ல சரித்திர நாவல். அலெக்சான்டர் டூமாஸின் நாவல்களை காப்பி அடித்து கல்கி எழுதியிருக்கிறார். உண்மையில் வரலாற்று நாவல் என்றால் இப்படியிருக்க வேண்டும்...' என நண்பர்களிடம் சூளுரைத்துவிட்டு அரு.ராமநாதன் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்ததாக சொல்வார்கள். 

இந்த நாவலில் பல புதுமைகளை இவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் கம்ப ராமாயணப் பாடலை கொண்டிருக்கும். நாவலின் நிலைக்களன் மதுரை என்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் 'ம' என்ற எழுத்துடனேயே தொடங்கும். கம்ப ராமாயணம் பால காண்டத்தில் தொடங்கி யுத்த காண்டத்தில் முடிகிறது என்றால் 'வீரபாண்டியன் மனைவி'யின் முதல் பாகம் யுத்த காண்டம்; இரண்டாவது பாகம் சுந்தர காண்டம்; மூன்றாவது பாகம் பால காண்டம்... என தலைகீழாக இருக்கும். 

இந்த 'வீரபாண்டியன் மனைவி'யின் தலைசிறந்த கதாபாத்திரம் என ஜனநாதனை சொல்லலாம். இந்த கதாபாத்திரத்துக்கு சமமாக படைக்கப்பட்ட பிற கேரக்டர்களை தமிழ்ப் புனைக்கதை உலகில் தேடினால் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் கிடைக்கும். அந்தளவுக்கு பவர்ஃபுல்லான ஸ்கெட்ச். 

ஜனநாயகம், அரசாட்சி தொடர்பாக ஜனநாதன் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் பட்டாசு. இன்றும் பொருந்தக் கூடிய நக்கல், நையாண்டி. குறிப்பாக மந்திராலோசனை அரங்கில் ஆசனங்கள் ஏன் படி வாரியாக போடப்பட்டிருக்கின்றன என்பதற்கு அந்தப் பாத்திரம் அளிக்கும் விளக்கம் இருக்கிறதே... தெள்சன்ட் வாலா. 

''நான் முட்டாள்களை ஏமாற்ற முட்டாள்களுக்கு வழிகாட்டுவேனே தவிர நானே முட்டாள்களோடு ஒரு முட்டாளாக கலந்து கொள்வதில்லை!'' 

இன்னொரு இடம் - 

''ஏகாதிபத்தியம் என்பது அடிமைப் பிரஜைகளைத்தான் உற்பத்தி செய்து என்றாவது ஒரு நாள் அன்னிய ஆதிக்கத்தின் வருகைக்கு அழிவுப்பாதை போடும். அதுதான் பல்லாண்டுகளாக பாரத தேசத்தின் சரித்திரமாக இருந்து வந்திருக்கிறது. கிராம சுயாட்சியின் மூலம் ஜனங்களின் உரிமைகளும் தனி மனிதனின் சுதந்திரமும், நல்வாழ்வும் பெருக வேண்டுமானால் ஏகாதிபத்ய முறை அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்...''

சுவாரஸ்யமான தகவல் - 'வீரபாண்டியன் மனைவி'; சாண்டில்யனின் 'கன்னி மாடம்' ஆகிய நாவல்கள் அனைத்தும் ஒரே வரலாற்றுக் காலகட்டத்தை சேர்ந்தவைதான். ஆனால், டிரீட்மெண்ட்டும் வேறு வேறாக இருக்கும். சரித்திர நாவல் பிரியர்கள் ஒரே நேரத்தில் இந்த புதினங்களை வாசித்துப் பார்க்கலாம். 

எனக்கு அறிமுகமாகும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த நாவலை படிக்கும்படி பரிந்துரைப்பேன். குறிப்பாக வெகுஜன பத்திரிகைகளில் புதிதாக எழுத வருகிறவர்கள் அவசியம் ஒருமுறையாவது 'வீரபாண்டியன் மனைவி'யை வாசிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். 

கூடவே இ.பாலகிருஷ்ண நாயுடு எழுதிய 'டணாய்க்கன் கோட்டை' நாவலையும் வாசிப்பது நல்லது. 

கோவையில் இருந்து வெளியான நாளிதழில் தொடராக வந்த சரித்திரப் புதினம் இது. நீண்ட வருடங்களாக விற்பனைக்கு கிடைக்காத இந்த நாவலை சமீபத்தில்தான் 'அம்ருதா பதிப்பகம்' தேடிப் பிடித்து அச்சிட்டிருக்கிறது. ஃபிக்‌ஷனுக்கும், நான் ஃபிக்‌ஷனுக்கும் இடைப்பட்ட அந்த எழுத்து நடையும், திப்பு சுல்தான் குறித்த சரித்திர விவரங்களும் சிலிர்க்க வைக்கும். 

ஆனால், முகநூலிலும் இணையதளத்திலும் எழுதி வரும் நண்பர்கள் 'டணாய்க்கன் கோட்டை'யை படிக்காமல் இருப்பதே உத்தமம். ஏனெனில் அந்தக் கால புறச்சூழல் பிறப்பித்த நடையில் எழுதப்பட்ட அந்தப் புதினம் இணைய நண்பர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.
 
இந்தப் பிரச்னை 'வீரபாண்டியன் மனைவி'யில் கிடையாது. அட்டகாசமான வெகுஜன நாவல். ஆனால், எந்த விமர்சகரும் இதுவரை இந்த நாவல் பற்றி பேசியதும் இல்லை. எழுதியதுமில்லை. 

நாவலுக்கு மட்டுமல்ல 'காதல்' இதழுக்கும் இதுதான் கதி. 
இத்தனைக்கும் 1947 நவம்பர் மாதம் இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது அரு.ராமநாதனுக்கு வயது 23. அதன் பிறகு, தான் காலமாகும் வரை - அதாவது 18.10.1974 வரை தொடர்ந்து காதலுடன் 'காதலை' நடத்தியிருக்கிறார். இதனை அடுத்து இவரது சந்ததியினர் இப்பத்திரிகையை விடாமல் கொண்டு வந்திருக்கிறார்கள். கடைசி இதழ் 1980ல் வெளிவந்திருக்கிறது. 

ஏறக்குறைய 33 ஆண்டுகள் வெற்றிகரமாக, அதுவும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையான 'காதல்' இதழ் எவரது நினைவின் அடுக்கிலும் இப்போது இல்லை என்பது மிகப்பெரிய சோகம். 

அவ்வளவு ஏன்... இந்த இதழ் வெளிவந்துக் கொண்டிருந்த நாளிலேயே தமிழகம் 'காதல்' பற்றி பேச மறுத்திருக்கிறது. இதற்கு உதாரணம் 'கல்கி' இதழ். 

1963ம் ஆண்டு ஆகஸ்டில் 'குண்டு மல்லிகை' என்ற சமூக நாவலை 'கல்கி' வார இதழில் அரு.ராமநாதன் தொடராக எழுதியிருக்கிறார். 

இதற்கான அறிவிப்பில் ''தமிழ் மக்களின் இதயங்களில் நிலையான இடம் பெற்றுவிட்ட 'இராஜராஜ சோழன்' நாடகத்தை அளித்த திரு. அரு.ராமநாதன் எழுதிய சமூகத் தொடர் 'கல்கி' இதழில் விரைவில் ஆரம்பமாகிறது...'' என்றுத்தான் குறிப்பிட்டது. 

அப்போது 'காதல்' இதழ் 16வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தது. ஆனாலும் 'காதல்' ஆசிரியர் என்று சொல்ல 'கல்கி' தயங்கியது. 

இந்த நிலை என் அப்பாவுக்கும் இருந்தது. நிச்சயம் என் அப்பா, தன் இளமைக் காலத்தில் 'காதல்' பத்திரிகையை படித்திருப்பார். ஆனாலும் என்னிடம் அது குறித்து பேசியதேயில்லை. பதிலாக வெவ்வேறு இதழ்கள், தொடர்கதைகள் குறித்து பல இரவுகள் விடிய விடிய என் தலையை கோதியபடி பேசியிருக்கிறார். 

வியர்வை மணம் வீசும் அவர் தொப்பையில் தலைசாய்த்தபடி அவற்றை எல்லாம் கேட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. 'குண்டு மல்லிகை' நாவல் கூட அப்பா பைண்டு செய்து வைத்திருந்த அடுக்கில் இருந்து எடுத்துத்தான் படித்தேன். அப்போது 'காதல்' குறித்து நான் கேள்விப்படாத நேரம். 

'வயல்' மோகனை சந்தித்த பிறகுதான் 'காதல்' குறித்து அறிந்தேன். அப்பாவிடம் கேட்டபோது புன்னகையே பதிலாக கிடைத்தது. 

ஏறக்குறைய இதே குணத்துடன்தான் 1947 - 1980 காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். வெகுஜன வாசகர்களாக இருந்த அவர்கள் அனைவரும் 'காதல்' பத்திரிகையையும் அறிந்திருக்கிறார்கள், தொடர்ச்சியாக படித்திருக்கிறார்கள். 

ஆனால் - 

அதை வெளியில் சொல்ல கூச்சப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் முறைகேடான உறவுகள் சார்ந்த காதலை 'காதல்' பத்திரிகை பிரசுரித்ததேயில்லை. 

கணவன் - மனைவி; காதலன் - காதலி ஆகியோருக்கு இடையில் இருக்க வேண்டிய இணக்கத்தைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறது. 

என்றாலும் இதழ் குறித்து விவாதிக்கும் துணிச்சல் ஒருவரிடமும் இல்லை. 1960களின் பிற்பகுதிக்கு பிறகு 'காதல்' இதழில் கவர்ச்சிகரமான படங்கள் இடம்பெற ஆரம்பித்திருக்கின்றன. அதற்காக 'சரோஜாதேவி', 'பருவகாலம்', 'விருந்து' அளவுக்கெல்லாம் இறங்கவில்லை. 

அப்படியிருக்க ஏன் தமிழ்ச் சமூகம் 'காதல்' என்ற பெயரில் ஓரு வெகுஜன இதழ் 33 ஆண்டுகள் வெளிவந்தது என்பதையே பதிவு செய்ய மறுக்கிறது என்று புரியவில்லை. அத்துடன் பழைய புத்தகக் கடையிலோ, கரையான் அரிப்பதற்காகவே உயிர் வாழும் வாடகை நூலகத்திலோ கூட ஏன் ஒரு 'காதல்' பிரதி ஒன்று கூட காணக்கிடைக்கவில்லை என்பதற்கும் பதில் கிடைக்கவில்லை. 

சமீபத்தில் ரோஜா முத்தையா நூலகத்தில் 'காதல்' இதழ்களை பார்க்க நேர்ந்தது. ஆச்சர்யம் கலந்த வியப்புத்தான் ஏற்பட்டது. இதோ இந்த நிமிடம் வரை அந்த உணர்வு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

என்ன மாதிரியான உள்ளடக்கத்தை எல்லாம் சர்வசாதாரணமாக அரு.ராமநாதன் கொடுத்திருக்கிறார்... அவற்றை எல்லாம் அந்தக் கால 'குமுதமும்', 'ஆனந்த விகடனும்' எப்படியெல்லாம் உருமாற்றி பயன்படுத்திக் கொண்டன என்பதை நினைக்கும்போது - 

ஒன்றுத்தான் தோன்றியது. 

இந்த ஜானர் ஏன் இப்போது இல்லாமல் போய்விட்டது? 

திருமணமாகாத 23 வயது இளைஞனுக்கு இப்படியொரு பத்திரிகையை திருச்சியிலிருந்து தொடங்க வேண்டும் என்று எப்படி தோன்றியது? 

விடை தெரியா கேள்விகள். 

1950 வாக்கில் சென்னை வந்த அரு.ராமநாதன் 'கலைமணி' என்னும் சினிமா மாத இதழை 1949 ஏப்ரல் முதல் நடத்தியிருக்கிறார். சில ஆண்டுகள் மட்டுமே வெளியான இந்த இதழில் உதவி ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கியவர்தான் பிற்காலத்தில் 'வாண்டு மாமா' என்று புகழப்பட்ட கிருஷ்ண மூர்த்தி. 

அதே போல் 1954ம் ஆண்டு சிரஞ்சீவியை ஆசிரியராக கொண்டு 'மர்மக் கதை' என்னும் மாத நாவலையும் (பாக்கெட் நாவல், க்ரைம் நாவலுக்கு எல்லாம் முன்னோடி) வெளியிட்டிருக்கிறார். 

'கலைமணி'யும் சரி, 'மர்மக் கதை'யும் சரி அதிக ஆண்டுகள் தாக்குப் பிடிக்கவில்லை. 'காதல்' மட்டும்தான் இறுதி வரை கம்பீரமாக வந்திருக்கிறது. 

என்றாலும் 'காதலை'ப் பற்றி பேசத்தான் ஆளில்லை. 

அன்றும் இன்றும் நிஜ வாழ்வில் அதுதானே நிலமை? 

பின் குறிப்பு: 

1. 'தங்கப் பதுமை', 'பூலோக ரம்பை', 'ஆரவல்லி' போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் அரு.ராமநாதன்தான். 

2. டி.கே.எஸ். நாடகக் குழு நடத்திய போட்டிக்காக இவர் எழுதியதுதான் 'இராஜராஜ சோழன்' நாடகம். 

3. இதுவரை 350க்கும் மேற்பட்ட நூல்களை 'பிரேமா பிரசுரம்' வெளியிட்டிருக்கிறது. 

4. 'அசோகன் காதலி' இவர் எழுதிய முதல் சரித்திர நாவல். குறுநாவல் என்றும் சொல்லலாம். 

5. தன் இறுதிக் காலத்தில் இவர் எழுதிய 'வெற்றிவேல் வீரத்தேவன்' சரித்திர நாவலை வாசிக்காமல் இருப்பதே இவருக்கு நான் செய்யும் மரியாதை. 'வீரபாண்டியன் மனைவி'யை எழுதியவரா இந்த நாவலையும் படைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும். 

6. தன் கனவுப் படைப்பாக 'ரசியா பேகம்' சரித்திர நாவலை நினைத்திருந்தார். அதற்காக குறிப்புகளையும் சேகரித்திருந்தார். ஆனால், எழுத ஆரம்பிப்பதற்குள் தன் 50வது வயதில் காலமாகிவிட்டார்.

Friday, September 16, 2022

Writer Anuthama: Author Anudhama by Sankara Subramanian: Keezhamboor

https://www.facebook.com/100001913660140/posts/pfbid02xsiTfAWPQ6P1mZTzmFbw3eypPR2JC1i37VJvdwABkvQSBZQtMJWvuAVB23hW9iAFl/

சாகித்திய அகாதெமியும் சென்னை எம் ஒ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய எழுத்தாளர் அநுத்தமா பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டேன். போதிய நேரம் இல்லாததால் மிகக் குறைவாகவேப் பேச நேர்ந்தது! நான் பேச எண்ணியதின் முழு வடிவம் கீழே.................

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு மாலன் சார் எழுத்தாளர் அம்பை அவர்கள் மணிமேகலை பதிப்பக ரவி தமிழ்வாணன் அவர்கள் மற்றும் டாக்டர் ஜெ. பாஸ்கரன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்......

விழா அழைப்பிதழ்.........................

கலைமகளும் அநுத்தமாவும்
..........................................................

- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்

உலகம் எங்கும் இதிஹாச, புராணங்கள் எல்லா நாடுகளிலும் கவிதைகளாக, காப்பியங்களாக உருவாகியுள்ள தொன்மையின் சிறப்பை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கவிதைகளாக, பாடல்களாக இருந்த பாங்கு மாறி வசனம் அதாவது உரைநடையை இலக்கியம் வாகனமாக்கிக் கொண்டது.அநேகமாக சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகத்தான் இந்த மாற்றம் ஏற்பட்டது.

உலகின் முதல் சிறுகதை இர்விங் வாஷிங்க்டன் எழுதிய “ரிப் வான் விங்கிள்” என்பதாகும். இந்தச் சிறுகதையைக் கொண்ட அவரது சிறுகதைத் தொகுதியான “தி ஸ்கெட்ச்” 1811-ஆம் ஆண்டு பிரசுரம் ஆயிற்று. இலக்கிய வரலாற்றில் சிறுகதை உருவாகி இப்போது இரு நூறு ஆண்டுகள் ஆகின்றன.சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான்.
சிறுகதைக்குக் கரு, குணாதிசயம், பாத்திரப் படைப்பு, சூழல், இவையே முக்கியமானவை. இந்த வரையறைக்குள் இருக்கின்ற சிறுகதைகள் பெரிதும் பேசப்படுகின்றன. தமிழ் சிறுகதைக்குத் தளம் அமைத்துத் தந்த பெருமைக்குரியவர் வ.வே.சு. அய்யர். அவர் எழுதிய “குளத்தங்கரை அரசமரம்” (1913-ஆம் ஆண்டு) தமிழில் சிறுகதையின் திருந்திய வடிவு பெற்ற முதல் கதை என்று துணிந்து கூறலாம். வ.வே.சு. அய்யர் பல மொழிகளில் புலமை பெற்றவர். உலக இலக்கியங்களின் நோக்கும் - போக்கும் கண்டறிந்தவர்.
சிறுகதை இலக்கியத்தில் ஏற்பட்ட எண்ணற்ற மாற்றங்கள் வளர்ச்சியில் புதிய வடிவங்கள் 20-ஆம் நூற்றாண்டில் மத்தியில் பலரைப் பாதித்திருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன்.

 சிறுகதைகளைத் தெளிவாகச் சொல்லவும் வாசகர்கள் மனத்தில் அழுத்தந்திருத்தமாகப் பதியவைக்கும் வித்தையை பலர் பெற்றிருந்தார்கள்.அவர்களில் ஒருவர்தான் கலைமகளோடு மிக இணக்கமாக இருந்த எழுத்தாளர் அநுத்தமா ஆவார்.
வை,மு,கோதைநாயகி, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் போன்ற தமிழில் வெற்றிகரமான பெண் எழுத்தாளர்களின் வரிசையில் அனுத்தமாவும் குறிப்பிடத்தக்கவர். தமிழ் நாட்டின் “ஜேன் ஆஸ்டின்” என்று அழைக்கப்பட்டார். வடவார்காடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 1922-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பிறந்தார். தந்தை சேஷகிரி ராவ் வனத்துறை அதிகாரி. அம்மா இல்லத்தரசி. வனத்துறை அதிகாரி என்பதால் அடிக்கடி தந்தைக்கு பணி மாறுதல் கிடைக்கும் போதெல்லாம் வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டிய நிலைமை அநுத்தமாவுக்கு ஏற்பட்டது.எனவே அவர் அதிகம் படிக்க முடியாமல் போனது.

பால்ய வயதில் திருமணம். 14-வயதில் மின்சாரத்துறையில் பணியாற்றி வந்த பத்மனாபனைக் கைப்பிடித்தார். திருமணமாகி ஒன்பதுஆண்டுகள் கழித்து அதாவது தனது 23-ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.

கணவருடன் தனது எண்ணங்களை, தாம் கேட்ட சம்பாஷணைகளை, தான் பார்த்த நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் மணிக்கணக்கில் பேசுவார். நிறையப் புத்தகங்களை வாங்கிப் படிப்பார். கணவருடைய பூரண ஒத்துழைப்பும் இருந்தது. இவர் எழுதிய முதல் சிறுகதை “அங்கயற்கண்ணி” கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. ஆனாலும் இவருக்குப் புகழ், வெளிச்சம் கொடுத்தது கலைமகள் மாத இதழ்தான். கலைமகளில்தான் இவரது பல படைப்புகள் பிரசுரம் ஆயின.

 கலைமகள் நடத்திய நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டியில் இவரது “மணல் வீடு” நாவல் முதல் பரிசு பெற்றது. இந்த நாவலின் மூலம் தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராகத் தயார்ப்படுத்திக் கொண்டார்.

கலைமகளுக்கு என்று சில கொள்கைகள் உண்டு.சிறுகதைகள் யாரையும் புண்படுத்தாத வண்ணம் அமைக்கப்பெற வேண்டும். குடும்பப் பாங்கான பெண்கள் பலர் கலைமகளின் வாசகிகளாக இருந்த காரணத்தினால் குடும்பப் பாங்கான கதைகளையே கலைமகள் அதிகம் பிரசுரம் செய்தது. பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் சிறுகதைகள் நிகழ்காலத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதே சமயத்தில் எதிர்கால சந்ததியருக்குச் சொல்ல வேண்டிய செய்திகளைக் கட்டுக்கோப்பாகச் சொல்லவேண்டும்.

மேற்கண்ட இந்தக் கொள்கைகளில் தமிழ் அறிஞரும் கலைமகள் பத்திரிகையின் நீண்டநாள் ஆசிரியருமான திரு. கி.வா.ஜகன்னாதன் உறுதியாக இருந்தார்.
அநுத்தமாவின் கதைகள் குடும்பப்பாங்காகவே இருந்தன. தன்னுடைய கதைகளில் விரசத்தைக் கொஞ்சம்கூட இவர் கலந்ததில்லை. ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளை இவர் கற்றிருந்தார் என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயமாகும். அநுத்தமாவிடம் பேசுவது நூறு புத்தகங்களுக்குச் சமமானது. ஒரு மணி நேரத்தில் நூறு புத்தகங்களைப் படிக்கக்கூடிய வாய்ப்பினைத் தனது உரையாடல் மூலம் வழங்கி விடுவார் அநுத்தமா. இப்படி கி.வா.ஜ. அடிக்கடி சொல்வதுண்டு.
அநுத்தமாவை அவரது புகுந்த வீட்டுக்காரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவரின் மாமனார் ராஜேஸ்வரி என்ற இயற்பெயர் கொண்டவருக்கு ‘அநுத்தமா’ என்ற புனைப்பெயர் சூட்டினார். இவருடைய கணவர் பத்மநாபன் அனுசரணையாக இருந்தார்.

 சிறுகதைகளைவிட இவரது நாவல்கள் வலிமை வாய்ந்தவை.
கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அநுத்தமாவைத் தன் உடன்பிறவா தங்கை என்றே மேடைகளில் அறிமுகப்படுத்துவார். அநுத்தமாவும் கி.வா.ஜ.வை ‘அண்ணன்’ என்றே குறிப்பிடுவார்.
கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகன்னாதன் அவர்கள் ஒருமுறை இவருடைய வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.கணவர் பத்மநாபன் வாசல் வரை வந்து வாய் நிறைய வரவேற்றார். ‘‘ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் ஒரு கூட்டம் ஏற்பாடாகி இருக்கிறது. அதில் ரஷ்ய மொழியில் பேசுவதற்காக அநுத்தமா சென்றிருக்கிறார்” என்று அநுத்தமாவின் கணவர் சொன்னதும், ‘‘சினிமாக் காட்சி என்றால் “ரஷ்” போட்டுப் பார்க்கலாம், ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் அநுத்தமாவின் பேச்சை ரஷ் போட்டுக் கேட்க முடியுமா?” என்று கி.வா.ஜ. சொன்னதும் வீட்டில் உள்ள எல்லோரும் சிரித்தார்கள். ‘‘எனக்கு ரஷ்ய மொழி தெரியாது அதனால்தான் எனக்கு என் தங்கை அழைப்புக் கொடுக்கவில்லை போலும்!’’ என்று கூறி அநுத்தமாவின் கணவர் மற்றும் மாமனாரிடம் உரையாட ஆரம்பித்தார் கி.வா.ஜ. “ரஷ்ய மொழி தெரியாவிட்டால் என்ன? எனக்குக் கொஞ்சம் ரச்னாவாவது கலந்து கொடுக்கக்கூடாதா?” என்று கி.வா.ஜ. கேட்டபோது அக்கூட்டத்தினர் மீண்டும் சிரித்து மகிழ்ந்தார்கள்.
இந்த விஷயத்தை கி.வா.ஜ. அவர்களின் மூத்த மகன் சுவாமிநாதன் அவர்கள் என்னிடம் சொல்லி மகிழ்ந்தது உண்டு.

 கி.வா.ஜ. குடும்பமும் அநுத்தமா அவர்களின் குடும்பமும் ஒன்றுக்கொன்று அனுசரணையாக இருந்த குடும்பங்கள் ஆகும்.
கலைமகள் ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி இவர் கதைகளை எழுதித் தள்ளினார். அதனை அழகாகப் பிரதி எடுத்துக் கொடுக்கக்கூடியவர் அவருடைய கணவர் பத்மநாபன். அநுத்தமாவின் மாமனார்தான் கலைமகளின் அலுவலகத்திற்கு அக்கதையைக் கொண்டு வந்து சேர்ப்பார். அவருடைய குடும்பமே அநுத்தமா எழுத்து வளர்ச்சியில் அக்கறை காட்டியது.

அநுத்தமாவுக்கு நன்றாக ஆங்கிலம் பேச வரும். ‘‘என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடு” என்று கி.வா.ஜ கேட்டுக் கொண்டது உண்டு. 

‘‘தமிழ் அறிஞரான கி.வா. ஜ. விற்கு ஆங்கிலம் தெரியுமா?’’ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது உண்டு. கலைமகள் மாத இதழ் தமிழ் செய்யும் மாத இதழாகும். நல்ல தமிழை வளர்ப்பதற்காக மதராஸ் லா ஜர்னல் நடத்திய நாராயணசாமி ஐயரால் 1932-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதழாகும். இதன் முதல் ஆசிரியர் உ.வே. சாமிநாத அய்யர் ஆவார். அவரைத் தொடர்ந்து அவருடைய தலைமை மாணாக்கரான கி.வா.ஜ. 50-ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"தமிழ்ப் புலவர் தேர்வில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் மாணவர் கி.வா.ஜ. தமிழ் அறிஞரான கி.வா.ஜ. வுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க நியாயமில்லை என்றுதான் பலரும் எண்ணுவார்கள். ஆனால் ஆங்கிலக் கட்டுரைகளைப் படிக்கவும் அதில் உள்ள சாராம்சங்களைத் தெரிந்து கொள்ளவும் கி.வா.ஜ.வால் முடியும். ஆங்கிலத்தில் சின்னச் சின்ன உரையாடல்களையும் அவரால் மேற்கொள்ள முடியும்’’ என்று கி.வா.ஜ.வின் உதவியாளராக இருந்த திரு. அனந்தன் அவர்கள் என்னிடத்தில் தெரிவித்தது உண்டு. 1995-96ஆம் ஆண்டுகளில் இவரை நான் சந்தித்தபோது கி.வா.ஜ. அவர்களைப் பற்றியும் அநுத்தமா அவர்களின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றியும் என்னிடத்தில் அனந்தன் அவர்கள் பகிர்ந்து கொண்டதுண்டு. கி.வா.ஜ. அவர்களைப் பற்றி ஒரு நூலும் அனந்தன் எழுதியிருக்கிறார்.

தமது இளமைக்காலத்தில் (1926-27) கி.வா.ஜ. அவர்கள் திருக்குறளில் நல்ல தேர்ச்சி பெற்று இருந்தார்.அவருடைய நண்பர் டோவர் துரை என்பவரின் மனைவிக்கு திருக்குறள் வகுப்பு எடுக்கக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவருக்கு அப்பொழுது மாதம் ரூபாய் 15 என்று பேசப்பட்டது. கி.வா.ஜ. அவர்கள் முதன்முதலாக வாங்கிய சம்பளம் திருக்குறள் வகுப்பு எடுப்பதற்காகத்தான் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
டோவர் துரையின்  வீட்டில் நிறைய ஆங்கிலப் புத்தகங்களும், ஆங்கிலத் தினசரிகளும் மேஜையின் மீது பரந்து கிடக்கும். திருக்குறள் வகுப்பு சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம் அந்த ஆங்கிலப் பேப்பர்களைப் படித்தார். தமிழ் தெரிந்த டோவர் துரையுடன் சின்னச் சின்ன ஆங்கில உரையாடல் மூலமாகவும் தமது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார் கி.வா.ஜ. என்று பெருமிதத்துடன் திரு. அனந்தன் அவர்கள் சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 அநுத்தமாவுடன் சின்னச் சின்ன ஆங்கில உரையாடல்களையும் கி.வா.ஜ. செய்திருக்கிறார்.அவருடைய மகன் சுவாமிநாதன் (ஆடிட்டர் படிப்புப் படித்தவர்.) இதற்கு உதவியும் செய்திருக்கிறார். அநுத்தமா அவர்களின் குடும்பப் பாங்கான சிந்தனைகளை கி.வா.ஜ. மிகச் சரியாக அவருடைய கதைகளுக்கு உருவம் கொடுத்து கலைமகளில் பயன்படுத்திக் கொண்டார். எவ்வளவோ விஷயங்கள் தெரிந்தபோதும் அநுத்தமா பெரியவர்களிடம் காட்டிய அன்பு என்பது, மரியாதை என்பது பாராட்டத்தக்கதாகும்.

கலைமகளின் எழுத்தாளர்களில் அநுத்தமா குறிப்பிடத்தக்கவர் என்பார் அகிலன். அது மிகையல்ல; அகிலன் அவர்களுடைய பல கதைகளும், நாவல்களும் கலைமகளில் இடம் பெற்று அகிலனுக்கு வெற்றி தேடித் தந்தன.அக்கால கலைமகள் எழுத்தாளர்கள் ஒருவரோடொருவர் நட்புப் பாராட்டி, குடும்பம் போலப் பழகுவார்கள். குடும்பத்தின் தலைவராக கி.வா.ஜ. இருப்பார். குடும்ப உறுப்பினர்களாக தமிழ் எழுத்தாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்குள் எந்த ஒரு வித்தியாசத்தையும் காட்டாமல் அவர்களை ஊக்குவித்த பெருமை கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. வுக்கு உண்டு.தன்னுடைய குழந்தைகளிடம் ஒரு தகப்பனார் பாசம் காட்டுவதில் அளவுகோல் வைப்பாரா? அதுபோலத்தான் கி.வா.ஜ. எல்லா எழுத்தாளர்களையும் சமமாகவே மதித்து நடத்தினார்.
எழுத்தாளர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் சுவாரஸ்யமான மொழிகளையும்கேட்டு ரசிப்பார் கி.வா.ஜ. அவர்கள். 

எழுத்தாளர் அகிலன் அவர்கள் அநுத்தமாவைப் பார்த்து, ‘‘சமையலுக்கு மட்டுமல்ல; கதைகளுக்குப் பாத்திரங்களை சமையலறையிலிருந்தே எடுக்கிறாயே?” என்று பாராட்டினார். இதைக் கேட்டு ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தினார் கி.வா.ஜ. (ஆனந்தக் கண்ணீர்) அநுத்தமா அவர்கள் பதினெட்டு முழப் புடவையைத்தான் (மடிசார்) கட்டிக் கொண்டு பெரிதும் காட்சி அளிப்பார். வெளியில் வரும்போதும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதும் எடுப்பாகப் புடவைகளைத் தேர்வு செய்து கட்டிக்கொண்டு வருவார். இப்படி பிரபல எழுத்தாளர் உஷா சுப்பிரமணியத்தின் மாமியார் ராஜம்மாள் கருத்துத் தெரிவிக்கிறார்.

தாம் எதை நம்பினாரோ அப்படியே வாழ்ந்து காட்டியவர் அநுத்தமா அவர்கள். பறவைகளை நேசிக்கத் தெரிந்தவர். உலகில் உள்ள உறவுகள் ஒவ்வொன்றையும் ஆத்மார்த்தமாக நேசிப்பதனாலேயே அவரால் குடும்பப் பாங்கான கதைகளை எழுத முடிந்தது. அவருடைய பரந்த வாசிப்பும், பன்மொழித் திறமையும் கை கொடுத்தது.

ஒருமுறை கி.வா.ஜ. அவர்கள் “கலைமகள் இதழுக்கு ஒரு நாவல் எழுதித் தர முடியுமா?” என்று கேட்க, அனுத்தமா உடனே ஒப்புக்கொண்டாராம். “எத்தனை நாளில் தர முடியும்?” எனக் கி.வா.ஜ. கேட்க, ‘‘பத்து நாளில்” என்று அநுத்தமா வாய் தவறிச் சொல்லிவிட்டாராம். “ஒரு   நாவலை எப்படிப் பத்து நாட்களில் முடிக்கமுடியும்?” என்று கி.வா.ஜ. கேட்டார். ‘‘சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவேன்” என்றார் அநுத்தமா. அந்த நாளே அநுத்தமா எழுதத் தொடங்கினார். எழுத எழுத அவைகளைப் பிரதி எடுத்துப் பத்திரப்படுத்தினார் பத்மநாபன். கி.வா.ஜ. அவர்களிடம் சொன்னபடி பத்தே நாளில் நாவலை முடித்து  சேர்த்தபோது அவர் அசந்தே போனார். ‘‘ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார்’’ என்கிற பழமொழியை மாற்றி ‘‘ஒரு பெண்ணின் வெற்றியே எனது வெற்றி’’ என்று காட்டியவர் அநுத்தமாவின் கணவர் பத்மநாபன் என்று தன்னைப் பார்க்க வரும் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி வியந்து போவார் கி.வா.ஜகன்னாதன்.
1949-ஆம் ஆண்டு முதல் (“மணல் வீடு” நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி அய்யர் பரிசு பெற்ற நாள் முதல்) 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி வரை (அவர் மறைந்த நாள்) கலைமகள் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தார் அநுத்தமா.இவருடைய பேட்டிக் கட்டுரை ஒன்றை கலைமகளில் நான் வாங்கிப் பிரசுரித்ததும் உண்டு.

ஒரு எழுத்தாளருக்கு அவசியம் தேவை அமைதியான சூழல், எழுத ஊக்குவிக்கும் நல்ல நட்பு உள்ளங்கள், வெளியான கதைகளைப் பாராட்டும் சிறந்த வாசகர்கள், எழுதியவைகளைச் செம்மைப் படுத்தி வெளியிடும் பத்திரிகைகள். இவை அனைத்தும் அநுத்தமாவின் வாழ்க்கையில் வளமாகக் கிடைத்தன.

“கேட்ட வரம்” என்ற நாவல் ‘பாளையம்’ என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிக் கூறும் நூல். இந்த நாவலை காஞ்சி மகாப் பெரியவர் பாராட்டியுள்ளார். ‘‘ஒரே ஒரு வார்த்தை” என்ற இவரது நாவல் ‘‘மனோதத்துவ ரீதியில் எழுதப்பட்ட தமிழில் வெளியான முதல் நாவல்’’ என்ற பெருமைக்குரியது.

காளிதாசன் ரகுவம்சம் மகா காவியத்தைத் துவங்கும் பொழுது கடவுள் வாழ்த்துப்பாடலாக சிவனையும், பார்வதியையும் வணங்குகிறான். தனக்கு ஆசி புரியும்படி வேண்டுகிறான்.” சொல்லும் பொருளும் போல் இணைந்து நிற்கும் நீவிர் இருவரும் எனக்கு சொல் (காவியத்திறன்) மற்றும் பொருள் (கருத்தாழம்)ஆகிய இரண்டையும் அளிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். அதாவது அர்த்தமும் இருக்க வேண்டும்; தரமும் இருக்கவேண்டும் என்பது காளிதாசனின் பிரார்த்தனை. இறைவன் அருள் புரிந்தான். அழகான காவியம் நமக்குக் கிடைத்தது. அதுபோல இறை பக்தி கொண்ட அநுத்தமாவிற்கு இறைவனின் பரிபூர்ண அருள் இருந்த காரணத்தினால் (கலைமகளின் அருள் இருந்த காரணத்தினால்) சொல்லும் பொருளும், அவரது கதைகளில் விரிந்து நமக்குத் தரமான இலக்கியங்கள் கிடைத்தன. அநுத்தமாவின் புகழ் சிறுகதை, நாவல் இலக்கியங்களில் என்றும் போற்றத்தக்கதாக பேசப்படும் என்பது திண்ணம். 

வாகர்தௌ இவ ஸம்ப்ருக்தௌ வாகர்த ப்ரதிபதயே!
ஜகத: பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ!!
(ரகுவம்சம் 1: 1)

Thursday, July 2, 2020

Albert Camus in Tamil - Books, Articles and Short Stories: Essay Collection

யாரெல்லாம் எழுதி இருக்கிறார்கள்?


1. வெ. ஸ்ரீராம், காம்யுவை பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர், இருமுறை செவாலியெ விருது பெற்றவர். - தொடர்புக்கு: 

4. 
Shanmugapriya Saravanan 
ம.சண்முகப்பிரியா  போடிநாயக்கனூர்

5.
சரவணன் சுப்ரமணியன் 

6.
எஸ்.வி.ராஜதுரை,மார்க்ஸிய - பெரியாரிய அறிஞர்.தொடர்புக்கு: sagumano@gmail.com

7.தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

8. பிரெஞ்சு எழுத்தாளர் காம்யுவின் நூற்றாண்டை ஒட்டி சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள நூல் "ஆல்பெர் காம்யு நூற்றாண்டு நாயகன்காம்யுவின் நோபல் ஏற்புரை, சிறுகதை, பயணக்குறிப்புகள், நேர்காணல்கள்,


மொழியாக்கங்கள்
1. விருந்தாளி

'விருந்தாளி' என்னும் தலைப்பில் ஆல்பெர் காம்யு அவர்களால் 1957ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது. அல்ஜீரியா நாட்டில் நடப்பதாக இக்கதையின் களம் அமைந்துள்ளது. 'ஒரு கைதியின் பயணம்' என்ற பெயரிலும் இக்கதை அழைக்கப்படுவதுண்டு.
பள்ளத்தாக்கில் வசிக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும், கைதியாக அவரிடம் ஒருநாள் இருக்கும் அராபிய இளைஞனுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள்தான் கதை. க.நா.சு.வின் அற்புதமான மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு வரியும் அவ்வளவு துல்லியமாக இருக்கும்.

வெறும் 32 வரிகளுக்குள்ளே ஒரு மனிதனின் மகத்தான தனிமையுணர்வை விவரித்துள்ளார் எழுத்தாளர். அல்ஜீரியாவில் மலைகளுக்கு கீழே உள்ள பள்ளியின் தலைமையாசிரியர் டாரு. பனிப்பொழிவு அதிகமிருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு வரவியலாத சூழலில், ஒரு அரேபியக் கைதியுடன் தனது ஒரு இரவை கழிக்க வேண்டிய நிர்பந்தமும், மறுநாள் அந்த கைதியை மலைக்கு அந்த புறமிருந்த காவல்துறையிடமும் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிடப்படுகிறது. கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கைதியை அவர் வெறுத்தார். அவன் இந்த இரவே தன்னை தனிமையில் விட்டு விட்டு ஓடி விட மாட்டானா? என எண்ணுகிறார். கைதி ஓடவில்லை என அறிந்து கவலைக் கொள்கிறார். மறுநாள் கைதியிடம் தனது சேமிப்பில் இருந்த பணத்தை கொடுத்து இரு வழிகளாக பிரியும் சாலையில் (சாலைகளில் ஒன்று காவல்துறை இருக்குமிடம் செல்வது, மற்றொன்று கைதியின் ஊரை நோக்கி செல்வது) அவனை விட்டு விட்டு திரும்பி விடுகிறார் டாரு. கைதி எவ்வழியை தேர்ந்தெடுத்தான் என அறிய புத்தகத்தை வாசியுங்கள். கதையில் எழுத்தாளர் தன்னுடைய தனிமையையே தலைமையாசிரியரின் தனிமையாக வெளிப்படுத்துகிறார். தமிழில் இத்தகைய தனிமையுணர்ச்சியை பற்றி எழுதுவோர் குறைவுதான் என்று சொல்லத்தோன்றுகிறது.
இந்த குறுங்கதையில் முக்கிய அம்சம் துல்லியம். காட்சிகளை எழுத்தாளர் விவரிக்க நாம் அந்த கதைக்குள் நம்மையும் ஒரு அங்கம் ஆக்குகிறார் ஆசிரியர். காலநிலையும், பள்ளியின் அமைப்பும், தலைமையாசிரியரின் தனிமையை பறைசாற்றும் பள்ளியின் வண்ணமும், அரேபிய கைதியின் தோற்றத்தின் விவரிப்பும் ஆபாரமானவை. 



2.
அந்நியன்
பிரெஞ்சிலிருந்து தமிழில் வெ.ஸ்ரீராம்.
க்ரியா பதிப்பகம்
முதியோர் இல்லத்தில் இறந்த அம்மாவின் இறுதிச் சடங்கிற்காக மெர்சோ,விடுமுறையில் வருவதில் துவங்குகிற நாவல்,சில எதிர்பாராத சம்பவங்களால்,சிறையில் அவனது மரணத்திற்காகக் காத்திருப்பதில் முடிகிறது.
இறந்த அம்மாவின் வயது அவனுக்குத் தெரியவில்லை.அம்மா மரணமடைந்து இறுதிச் சடங்குக்குக் காத்திருக்கையில் காப்பி குடிக்கிறான்.சிகரெட் குடிக்கிறான். அழவில்லை.மறுநாள் பெண் தோழியுடன் நீச்சல் குளத்திற்குச் செல்கிறான்.உறவு கொள்கிறான்.நகைச்சுவைப் படத்திற்குச் செல்கிறான்.
இதனாலெல்லாம் அவன் எதிர்பாராமல்,தற்காப்புக்காகச் செய்த கொலைக்காக மிகப் பெரிய உணர்ச்சியற்ற கொடுரனாக, நீதிமன்றத்தில் சித்தரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறான்.

எந்தவித போலியான முகமும் அணியாமல் நேர்மையாகவே இருக்கிறான்.
தாயின் கடைசி கால நண்பர் 'பெரே' மனமுடைந்த நிலையில் சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டு மூர்ச்சையாகி விழுவதையும் கவனிக்கிறான்.
அதற்கு அடுத்த நாள் இயல்பாக தனது பணிகளுக்கு திரும்புகிறான்.
இவை அனைத்தும் அவனுக்கு எதிரான சாட்சியங்களாக ஆகிவிடுகின்றன.
மரணம், பாவம், புண்ணியம் இவைகளில் நம்பிக்கையற்ற அம்மனிதன், சந்தர்ப்ப வசத்தில் இழைத்த கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறான்.
சிறைச்சாலை பாதிரியாரிடமும் தர்க்கத்தில் ஈடுபடுகிறான்.
' என் தனிமை உணர்வு ஓரளவு குறைய வேண்டுமானால் நான் விழையக்கூடியது ஒன்றே ஒன்றுதான். என் தலை துண்டிக்கப்படும் தினத்தன்று பெரும் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் இருக்கவேண்டும். வெறுப்பு கலந்த கூக்குரலுடன் என்னை அவர்கள் வரவேற்க வேண்டும்' இவ்வரிகளுடன் நாவல் நிறைவு அடைகிறது.

அவன் ஏன் உங்களை,என்னைப் போல் இல்லை?அவன் ஏன் நம்மைப் போல் முகமுடி அணியாமல்,வக்கீல்,பாதிரியார் என அத்தனை பேர் வற்புறுத்தியும் இயல்பிழக்க மறுக்கிறான்?அதனால் தன் வாழ்வே முடிந்து விடும் என்ற நிலையிலும் ஏன் அவ்வளவு பிடிவாதமாக மாற மறுக்கிறான்?
குற்றவாளிக் கூண்டில் நின்றபடி,தன்னைப் பற்றி தன் வக்கீலும்,அரசாங்க வக்கீலும் வாதிடுவதை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு கொலைக் குற்றவாளியை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தன்னை புத்திசாலி என்று எடை போடுபவர்களால்,ஒரு சாதாரண மனிதனிடம் சிறப்பான அம்சங்களாகக் கருதப்படுகிற விஷயங்கள் எப்படி ஒரு குற்றவாளிக்கு எதிராகப் பலத்த குற்றச்சாட்டுகளாக மாற்ற முடியும்? என்ற அவனது தவிப்பை உணர்கிறிர்களா?
பாசாங்கற்ற அவனது வார்த்தைகளை இவ்வளவு விரிவாக இதற்கு முன் யாராவது சொல்லி கேட்டிருக்கிறீர்களா?
என்னுடைய செய்கைக்கு உண்மையான நோக்கம் என்ன கேட்ட நீதிபதியிடம் படபடப்புடன் வார்த்தைகள் குளற வெயில்தான் காரணம் என்றேன்.

இத்தனை குழப்பம் கொடுக்கும் நாவலை நான் படிப்பதின் அவசியம் என்ன என்றுகூட எனக்கு தெரியவில்லை. இன்றுதான் நாவலை ஆல்பெர் காம்யு , ‘மெர்சோ’ சொல்லிக் கொண்டுச் செல்வதாக எழுதியிருக்கிறார் என எனக்கு தெரிந்தது. தொடக்க அத்தியாயங்களில் ஆல்பெர் காம்யு-வே சொல்லி செல்வதாக நினைத்து படித்து வந்தேன். இப்போது எனக்கும் முன்பின் அறிமுகமில்லாத ஒருவன் - மெர்சோ கதையை சொல்லிச் செல்கிறான்.
  என் வரையில், வலது கையில் உண்பதையும் இடது கையில் உண்பதையும் நாயகன் வித்திசாயமாகப் பார்ப்பதில்லை. அவனுக்கு வலதும் ஒன்றுதான் இடது ஒன்றுதான்.
நாயகன் ‘மெர்சோ’ அவனை விரும்பும் ஒரு பெண் தன்னை திருமணம் செய்வாயா என கேட்டதற்குக் கூட, அவள் வ் விருப்பம் அதுவென்றால் செய்ய தயார் என்றே சொல்கிறான். திருமணம் செய்து பழகுவது, திருமணம் செய்யாமல் பழகுவது அவனுக்கு ஒன்றாகவேப் படுகிறது.
    தேவையில்லாமால், உணவு விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணின் செயல்களை  சிரத்தை எடுத்தும்க் கொண்டு கவனிக்கிறான். அது விசித்திரமாக இருக்கவே (விசித்திரம் என சொல்வது சரியா என்று கூட எனக்குத் தெரியவில்லை.) அவளை பின் தொடர்கிறான். அதைகூட நாயகனான் முழுமையாகச் செய்ய முடியவில்லை. கொஞ்ச தூரம் சென்ற அவள் காணாதது குறித்து எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் திரும்புகிறான்.
    எந்த ஒரு காரண காரியம் இன்றி நண்பன் ஒருவனுக்கு உதவுகிறான். உதவாமல் இருப்பதும் உதவி செய்வது அவனுக்கு ஒன்றுதான்.
   ஆனால் உதவி என்பது அப்படிப்பட்ட ஒன்றா என்ன..? உதவி செய்வது செய்யாமல் இருப்பதும் ஒன்றே என நினைக்கும் ஒருவன் எப்படிபட்ட மனிதன். மூளைக் கோளாறு உள்ளவனா இல்லை அவன்தான் தெளிவானவனா..?
முதல் பாகம் முழுக்க நாயகனின் உணர்ச்சியற்ற வாழ்க்கைமுறையே சொல்லப்படுகிறது. இறுதியில் கொலைகாரனாகிறான். முன்விரோதமோ பகையோ கோவமோ காரணமல்ல, அந்த சூழல், வெயில் என்றே சொல்லலாம்.
    மனம் நம்மை இயக்குகிறது என சொல்வதைவிட, இதன் வழி புற சூழல்தான் நம்மை இயக்கிக் கொண்டுவருகிறது என நினைக்கத் தோன்றுகிறது. பகையும் பலிவாங்கும் உணர்ச்சியும் மனதில்தானே தோன்றுகிறது. வெயிலும் அதன் உஷ்ணமும் உடலில்தானே உணரமுடிகிறது. நாயகனுக்கு அப்படித்தான் போலும்.
   இரண்டாம் பாகம் முழுவதும் கைதியாகவே வருகிறான். கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படுகிறவன் பின்னர் தன் விசித்திர குணத்திற்காக விசாரிக்கப்படுகிறான் கவனிக்கப்படுகிறான்.
    நமது ஒவ்வொரு செயலும் நமது அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவதை நாயகனின் வாழ்க்கை காட்டுவதாகப் படுகிறது. இதற்கிடையில் மன்னிப்புகளுக்கும் கடவுள்களுக்கு வேலை இல்லாத்தையே நாயகன் காட்டுகிறான்.

தண்டனை அறிவித்த பிறகு மெர்சோவுக்கும் பாதிரியாருக்குமான உரையாடல் மிக சுவாரசியமான ஒன்று. பாதிரியார் அவன் பாவம் புரிந்தவன் என்று அதற்கான பாவ மன்னிப்புக்கு அவனை அணுகும்போது அவன் மிகத் தெளிவாகக் கூறுகிறான். இதில் ‘பாவம்’ என்ன இருந்ததென்று எனக்குப் புரியவில்லை. நான் குற்றம் புரிந்தவன் என்று மட்டும்தான் எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் குற்றவாளி, அதன் பலனை அனுபவித்தேன். அதற்கும் அப்பால் என்னிடமிருந்து எதுவும் எதிர்ப்பார்க்கக் கூடாது. குறைந்தபட்சம் அவனுக்குக் கடவுள் நம்பிக்கையை உண்டாக்கலாம் என்ற எண்ணமும் அவருக்குப் போய் விடுகிறது. பொதுவாக ஆத்திகர்கள் வைக்கும் வாதம், எப்படிப்பட்ட நாத்திகனும் இறக்கும் தருவாயில் கடவுளை வழிப்படுவான் என்பது. அதற்கு மாறாக மெர்சோ, “எனக்கு இன்னும் மீதமிருந்த நேரம் குறுகியதென்பதைத் தெரியப்படுத்த முற்பட்டேன். கடவுளைப் பற்றிய சர்ச்சையில் அந்த நேரத்தையும் இழக்க நான் விரும்பவில்லை” என்கிறான்.

நாவலின் கடைசி பக்கங்கள் என்னை முழுமையாக ஆட்கொண்டன. மெர்சோ மரணத்திற்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறான். இறந்த தாயை பார்ப்பதற்கு முதியோர் இல்லத்திற்கு செல்கையில், இல்லத்தின் நிர்வாகி அங்கு இருந்த ஒரு வயதான மனிதனைக் காட்டி இவர்தான் உங்கள் தாயின் நெருங்கிய நண்பர்.  உங்கள் தாயும் இவரும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். இங்கு இருப்பவர்கள் இவர்களைக் காதலர்கள் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறியது அவன் ஞாபகத்திற்கு வருகிறது. இப்போது அவன் தன் அம்மாவை நினைத்துக் கொள்கிறான். “தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் அவள் ஏன் தனக்கொரு ஆண் துணையைத் தேடிக் கொண்டாள் என்பது எனக்குப் புரிந்தது போல் தோன்றியது. மறுபடியும் ஆரம்பிப்பது போல் ஏன் அப்படிச் செய்தாள் என்பதைப் புரிந்து கொண்டேன். இங்கு போலவே அங்கேயும், வாழ்க்கைச் சுடர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணைந்து கொண்டிருந்த அந்த முதியோர் இல்லத்திலும் அந்தப் பொழுது ஒரு சோகமான இளைப்பாறல் போல் இருந்தது. மரணத்திற்கு அவ்வளவு அருகில் இருந்த அம்மா, விடுதலை பெற்று ஒரு புதிய வாழ்வைத் தொடங்குபவள் போல் உணர்ந்திருக்க வேண்டும்.  அவளுக்காக அழுவதற்கு யாருக்குமே உரிமை இருந்திருக்கவில்லை. ஆம், யாருக்குமேதான். நானும் ஒரு புதுவாழ்க்கை தொடங்கத் தயாராக இருப்பதுபோல் உணர்ந்தேன்” என்கிறான்.  அந்நியன் வாசிக்கும் போது எனக்கு நெருக்கமாய் தோன்றிய இன்னொரு நாவல் தஸ்தயேவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்”.  குற்றமும் தண்டனையும் நாவலில் வருகிற ரஸ்கோல்னிகோவும், அந்நியனில் வருகிற மெர்சொவும் குணாதிசயங்களில் ஒத்த கருத்தை உடையவர்களாய் இருக்கின்றனர். எந்த ஒரு பெரிய முன்பகையும் இல்லாத, தங்களுக்கான எதிரிகள் என்று தீர்மானிக்க முடியாத மனிதர்களைக் கொல்கின்றனர். இருவருக்கும் அந்த கொலையைச் செய்ததில் பெரிய வருத்தமோ குற்றவுணர்வோ இல்லை. மெர்சோவின் எதிர்தரப்பு வக்கீல் ‘தங்களின் செய்கைக்கு நீங்கள் வருந்துகிறீர்களா?’ என்று கேட்டதற்கு,  ‘உண்மையில் வருத்தம் என்று சொல்ல முடியாது. ஒரு வகை மனச்சங்கடம் அடைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.’ என்கிறான் மெர்சோ. இது அப்படியே ரஸ்கோல்னிகோவுக்கும் பொருந்துகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது! எவன் ஒருவன், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதில் வெற்றி அடைகிறானோ அவனுக்குத்தான் குதூகலமான வாழ்க்கை சாத்தியம் ஆகிறது! என்று “குற்றமும் தண்டனையும்” நாவலில் ஒரு இடத்தில் வரும்.  இது அப்படியே மெர்சோவுக்குப் பொருந்துகிறது. தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ள முடியாத மனிதர்கள்தான் ரஸ்கோல்னிகோவும் மெர்சோவும்.  இருவருக்குமான மற்றொரு பெரிய ஒற்றுமை ரஸ்கோல்னிகோவ் மற்றும் மெர்சொவை நேசிக்கிற பெண்கள். தாம் நேசிக்கிற அளவிற்கு தங்கள் காதலர்களால் நேசிக்கப்படவில்லை என்பது தெரிந்திருந்தும், எந்த எதிர்பார்ப்புமின்றி தங்களின் அன்பைத் தருகின்றனர்.    

ஆங்கில மொழிபெயர்ப்பை விட தமிழ் மொழிபெயர்ப்பு இன்னும் சிறப்பானதாய் இருக்கிறது. இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு இடத்தில் “the smell of flowers on the night air was coming through the open door” என்று வரும். இதைத் தமிழில் “திறந்த கதவின் வழியே மிதந்து வந்த இரவின் மனம், மலர்களின் சுகந்தம்” என்று மொழிபெயர்த்திருக்கிறார். “இரவின் மனம்” என்ற வார்த்தைகள் இவ்வரிகளை இன்னும் அழகானதாய் ஆக்கி விடுகின்றன.  இந்நாவல் 1967ஆம் வருடம் “The Stranger” என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது.  புற அந்நியன்களை விட அக அந்நியன்களே கவனிக்கப்பட வேண்டியவர்கள். வெளியில் இருக்கும் அந்நியன்கள் என்ன செய்வார்கள் என்பதைக்கூட யூகித்து விட முடியும். நமக்குள் இருக்கும் அந்நியன்களை யூகிப்பதுதான் பல சமயங்களில் கடினமானதாய் இருக்கிறது. நெருங்கியவர்களைவிட அந்நியன்களே பல தருணங்களில்  சுவாரசியமான அனுபவங்களைத் தருகிறவர்களாய் இருக்கின்றனர். உங்கள் மனசாட்சியுடன் நீங்கள் உரையாடியிருப்பீர்கள். உங்களுக்கும் மனசாட்சிக்குமான உரையாடலை விலகி இருந்து ஒரு அந்நியனை போல் கேட்டதுண்டா?

Read more at: http://www.vasagasalai.com/anniyan-vasippu-anubavam/



3. வீழ்ச்சி
ஆல்பெர் காம்யு " வீழ்ச்சி " நாவலில் ஒரு காட்சி.
"சுவர்களால் கட்டப்பட்ட ஒரு பெட்டி போன்ற ஒன்று. அதற்குள் சிறைகைதிகள் ஆடாமல் அசையாமல் நிற்பது மட்டுமே சாத்தியம். கைதிகளின் முகங்கள் மேலே காணும்படி
கதவின் உயரம் தாழ உள்ளது. அந்த பாதையில் செல்லும் சிறை அதிகாரிகள் கைதியின் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு போவார்கள். சங்கிலியால் நன்கு பிணைக்கப்பட்ட கைதி
தன் முகத்தில் வழியும் எச்சிலை துடைக்க வழியேதும் கிடையாது. ஆனால் அதிகாரிகள் காறி உமிழும்போது கைதிகள் தங்கள் கண்களை மூடிக்கொள்ள அனுமதிக்கபட்டிருந்தார்கள் ."

போப் தன் சிம்மாசனத்தை விட்டு, வாடிகனை விட்டு கிளம்பி அயோக்கியர்கள் இடையில் வாழவேண்டும். நாம் சீக்கிரமாக ஒரு புது போப் தேர்ந்தெடுக்க வேண்டும். பரிசுத்தம், நீதி இரண்டுமே ஒன்று சேர முடியாதபடி பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பரிசுத்தம் சிலுவையில் அறையப்பட்டும் நீதி என்பது அலமாரியிலும் தெரிய கிடைக்கின்றது.
ஒரு மனிதன் தன் பொய்களைப் பற்றி ஒப்புக்கொள்ளாமல் மரணமடைய கூடாது.
சந்தோசம் உள்ளவனாக இருக்க வேண்டுமானால் அடுத்தவர்களை பற்றி ரொம்ப பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்.
க்ளமன்ஸ் சொல்கிறான்
" தூள் பிகரை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது நான் ஐன்ஸ்டீனுடன் பத்து சந்திப்பை ஒதுக்கியிருப்பேன். அந்த பெண்ணுடன் பத்து சந்திப்பிற்கு அப்புறம் தான் ஐன்ஸ்டீன் பற்றியோ அல்லது ஒரு நல்ல முக்கியமான புத்தகத்தையோ விரும்பி எண்ணுவேன். "



4. முதல் மனிதன்
ஆல்பர் காம்யுவின் கடைசி நாவல் “முதல் மனிதன்
’When you refuse to accept anything but the best, often you will get it’ ங்கறது உண்மை தான்.
"I know nothing more stupid than to die in an automobile accident." – Albert Camus.
அந்நியன் நாவலில் காம்யு சொல்வது போல
‘ வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை. முப்பதில் இறப்பதும் ஒன்று தான். எழுபதில் இறப்பதும் ஒன்று தான்.’

46 வயது ஆல்பர் காம்யு அந்த கார் விபத்தில் அகால மரணம் அடைந்தது தற்செயல் அல்ல. ரஷ்ய ஒற்றர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியென்று சொல்லப்படுவதுண்டு.
விபத்து நடந்த இடத்தில் அவருடைய முடிக்கப்படாத நாவலின் கையெழுத்துப்பிரதியும், ஒரு ட்ரெயின் டிக்கட்டும் கிடைத்தது.ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ, நீட்ஷேயின் ’ஆனந்த அறிவியல்’ புத்தகமும் கூட.
அவருடைய மற்ற படைப்புகளில் இருந்து வித்தியாசமான தன்மை ’முதல் மனிதன்’ கொண்டிருந்தது.
ஒரு கலைஞனின் குறைப்படைப்பு தான் எத்தனை சோகமானது.
கீட்ஸின் ஹைப்பீரியன்,
லார்ட் பைரனின் டான் ஹுவான்..
Perhaps, Life is a fear and a dream.. என்ற ஜோசப் கான்ராடின் வார்த்தைகள்.
அப்பாவின் சமாதியில் முதல் முறையாக நாற்பது வயதில் காம்யு நிற்கும்போது அவர் இருபத்தொன்பது வயதில் இறந்திருப்பதை அறியும்போது தன்னை விட இளையவரான தந்தை முன் நிற்பதாக உணர்கிறார்.
அவருடைய அம்மா காது கேட்பதில் பிரச்னை உள்ளவர். கல்வியறிவில்லாதவர்.
அம்மாவும் இவரும் பாட்டியின் கட்டுப்பாட்டில்.
அம்மா வேலைக்காரியாக.
இந்த ’முதல் மனிதன்’ கியான்னி அமெலியோ என்ற இத்தாலிய இயக்குனரின் நெறியாள்கையில் இட்டாலியன் ஃப்ரன்ச் திரைப்படமாக 2011ல் வந்திருக்கிறது.
பின் இணைப்பாக நாவலில் உள்ள குறிப்புகளை படிக்கும்போது சோகம் கவ்வுகிறது. ஆல்பர் காம்யுவுக்கு பெரிய திட்டம் இருந்திருக்கிறது.
'ஒடுக்குமுறையை எதிர்த்துப்போராடுவதில் தான் எழுத்தாளனின் மேன்மை அடங்கியுள்ளது. அதாவது தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை ஏற்றுக்கொள்வதில்' என்று நாவலுக்கான குறிப்புகளில் ஒன்றில் காம்யு சொல்கிறார்.
ஏனென்றால் பாசிசவாதிகள் தங்களைப் போலவே சிந்திப்பது தான், தாங்கள் சரியென்று நினைப்பது மட்டும் தான் எல்லோருக்குமான ’சுதந்திரம்’ என்று நினைக்கிறார்கள்.
வாழ்க்கையின் மீதான நேசம் மறைந்து விடும்போது எவ்வித உள்ளர்த்தமும் ஆறுதல் அளிக்காது என்று காம்யுவின் டைரி சொல்கிறது.
தன்னுடைய வாழ்க்கைக்கான் காரண- காரியரீதியான நியாயங்களைத் தனக்கு கொடுத்திருந்த அதே சக்தி, அதே சோர்வில்லாத தாராளத்துடன் தான் முதுமையடைவதற்கும், கிளர்ச்சி செய்யாமல் சாவதற்கான நியாயத்தையும் அளிக்கும் என்பது ஆல்பர் காம்யுவின் குருட்டு நம்பிக்கை தான்?


5. கொள்ளைநோய்
ஆல்பெர் காம்யு எழுதிய ‘கொள்ளைநோய்’ என்ற பிரெஞ்சு நாவல் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்று கூறுவது

காம்யுவின் நாவலில் வரும் மனிதர்களும் நிகழ்வுகளும் அவர் தத்துவம் எடுத்துக்கொள்ளும் உருவங்கள். கொள்ளைநோய் தொற்றிக்கொள்ளும் ஓரான் நகரத்தில் மக்கள் செக்குமாடுபோல் உழைக்கிறார்கள், காதலிக்கிறார்கள், செத்துப்போகிறார்கள். அவரவரே அவ்வப்போது முடிவெடுத்துச் செய்வதுபோல் அல்லாமல் எதையும் பழக்கமாகவே வளர்த்துக்கொள்கிறார்கள். எல்லாம் பழக்கமாகப் படிந்துவிட்டால் வாழ்க்கையில் மனக் கிளர்ச்சிக்கான புதுமை இருக்காதுதான். ஆனால், சமூகப் பதற்றமும் கிளர்ச்சியும் இருக்காதல்லவா!

ஓரான் நகரின் சாதாரணத் தன்மைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத பெரிய நிகழ்வாகக் கொள்ளைநோய் வருகிறது. இது வருமோ என்று எதிர்பார்த்து அஞ்சுவதற்கு அப்போது காரணமே இல்லை. இந்த விநோத நிகழ்வின் முழு வீச்சைக் கணிக்க முடியவில்லை. இது எப்படித் தோன்றியது என்று யாரும் கண்டறியவில்லை. அப்போதைய உண்மையான துயரத்தைச் சொல்லிக்கொள்ள, எப்போதோ உருவாகியிருந்த சராசரிச் சொற்களைத்தான் மக்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. தனிநபர்கள் அனுபவிக்கும் விதியாக எதுவும் இருக்கவில்லை. எல்லாமே சமூகத்தின் ஒட்டுமொத்தத் தலைவிதியாக இருந்தது. ஒரு நிரவலைச் செய்து, அவையும் அவையுமாக இருந்த தனித்த தன்மையை பிளேக் அழித்துவிட்டது. தொற்றைத் தாங்கள் அறிந்த வகையை மருத்துவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: ‘‘இருக்கலாம்; எதுவாகவும் இருக்கலாம். இப்போது எதையும் நிச்சயமாகச் சொல்ல இயலாது.” இந்தக் குழப்பம் ஓரான் நகர மக்களுக்கு மனக்கலவரமாகி, அது பீதியாக மாறி, பின்னர் ஆழ்ந்த சிந்தனையாகிறது.

கதை எழுதுபவர் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்பவர்களுக்கு காம்யு என்ன பதில் சொல்கிறார்? ‘‘இப்படி ஒரு சீமை நோய் நம் நகருக்கு வரும் என்று மக்கள் நம்பவில்லை. சிலர் இதெல்லாம் இயற்கைதான் என்று ஏற்கிறார்கள். கதைசொல்லி இந்தக் கருத்து வேறுபாடுகளைக் கவனிக்க முடியாது. உண்மையில் அப்படித்தான் நடந்தது என்று அவருக்குத் தெரிந்ததால், அது அப்படித்தான் நடந்தது” - வரலாறுகளின் உண்மையை இப்படி விமர்சிக்கும் காம்யு, “மனிதனுக்கு எல்லாமே சாத்தியம் என்று எல்லோரையும்போலவே நம்பும் ஓரான் நகர மக்களால் கொள்ளைநோய் சாத்தியம் என்று நம்ப முடியாது” என்று தன் பதிலை முடிக்கிறார்.

நிச்சயமில்லாத சூழலில் நிற்பவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாவலின் ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது: “இதை பிளேக் என்று எடுத்துக்கொண்டு நாம் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்படும்போது அந்த முடிவுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும்.” உலகத்தில் மனிதனின் நிலைமை பற்றியும், நாம் செய்யக்கூடியது பற்றியும் காம்யு இதையேதான் சொல்கிறார். நாம் செய்ய வேண்டிய முடிவுக்கு நமக்கு வெளியே ஒரு வழிகாட்டி இல்லை. மறைகளை, நெறிகளை, இறைவனையெல்லாம் நம் முடிவுக்குப் பொறுப்பாக்க முடியாது. எல்லாவற்றையும் தீர்மானித்துக்கொண்டிருந்த இறைவன் இருந்த இடம் இப்போது வெற்றிடம். நம் செயல் வழியாக நாமே தீர்மானிப்பதுதான் உண்மையாக வாழ்வதாகும். மரித்தவர்கள் கொள்ளைநோய்க்கும் வாழ்வுக்கும் இடையேயான போட்டியில் தோற்றிருப்பார்கள். பிழைத்தவர்கள் எதை வென்றிருப்பார்கள்? காம்யு இப்படிப் பதில் சொல்கிறார்: “பிளேக் நோயைத் தெரிந்துகொண்ட அனுபவத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை; அந்த அனுபவத்தை நினைத்துக்கொள்ளலாம். நட்பைத் தெரிந்துகொண்ட அனுபவத்தை அவர்கள் அடைந்திருப்பார்கள்; அதை நினைத்துக்கொள்ளலாம். அன்பைத் தெரிந்து கொண்ட அனுபவத்தை அடைந்திருப்பார்கள்; அதையும் ஒருநாள் நினைத்துக்கொள்ள அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும்.”



6.  ஆல்பெர் காம்யு நூற்றாண்டு நாயகன்
சா.தேவதாஸ்
ரூ.120

ஆல்பெர் காம்யுவின் நூற்றாண்டை ( 1913 - 2013 ) ஒட்டி தமிழ்மொழி சமர்ப்பிக்கும் அஞ்சலி இது. கட்டுரைகள், நேர்முகங்கள் மற்றும் கதை வாயிலாக காம்யுவின் பரிமாணங்களை அறிமுகப்படுத்துகிறது. காம்யுவுக்கும் சார்த்தருக்கும் இடையிலான முரண்பாடு விவாதிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான காம்யுவின் ஆவணத்தைத் தமிழில் தந்து, இன்றைக்குக் காம்யுவைப் பேசுவதற்கான நியாயத்தை முன்வைக்கிறது.

தமிழில் பரிசல் நிலையம் வெளியிட்டுள்ளது. வி நடராஜ் மொழிபெயர்த்திருக்கிறார். மிகச்சிறிய புத்தகம். வெ. ஸ்ரீராம் மொழிபெயர்ப்பைப் போலவே நன்றாக வந்திருக்கிறது. வாசிக்க வேண்டிய புத்தகம்.

1957ல் காம்யு மரணதண்டனை என்றொரு குற்றம் என்றொரு நீள் கட்டுரை ('Reflections on the Gillotine') எழுதியிருக்கிறார். மரணதண்டனை எந்தளவு அபத்தமான ஒன்று என்பதை அந்தக் கட்டுரை விவரிக்கிறது. மரணதண்டனையால் குற்றங்கள் எவ்விதத்திலும் குறைவதில்லை, அது ஒரு முன்னுதாரணமாக குற்றங்களைத் தடுக்கப் பயன்படுவதில்லை. மாறாக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளதை விளக்குகிறார். மரணதண்டனை விதிக்கப்பட்டதும் குற்றவாளி மனிதத்துவம் இழந்து ஒரு பொருளாகிவிடுகிறார். அதுவும் இந்த மரணங்கள் பொதுவெளியில் இன்றி தனியறையில் நிறைவேற்றப்படுகிறது. எப்போது தண்டனை நிறைவேற்றப்படும், அல்லது தனது கருணை மனு ஏற்கப்படுமா என்று தெரியாத நிலையின் மன உளைச்சல்கள், அவரது குடும்பத்தாரின் துயரங்கள் இவற்றோடு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாரின் துயரத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார். அந்நியன் நாவலில் கூட இந்தக் கருத்துநிலை உள்ளார்ந்து இருப்பதை உணரலாம்.  1977ல் பிரான்ஸ் மரணதண்டனை விதிப்பதை விலக்கிக் கொண்டது.


மரண தண்டனைக்கு எதிரான காம்யூவின் கில்லட்டின் கட்டுரை, ஓரான் பாமுக் எழுதிய கட்டுரை சார்த்தரின் அஞ்சலி கட்டுரை ஆகியவையும் இடம் பெற்றிருக்கின்றன. காம்யூ பற்றி தமிழில் இத்தனை முழுமையான நூல் வேறு எதுவும் வந்ததாக அறிய முடியவில்லை.
அல்ஜீரியாவில் பிறந்த காம்யு ‘அந்நியன்’ நாவல் மூலமாகத்தான் உலகத்தின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கிறார், அந்நியன் நாவலின் நாயகனைப்போலவே எளிதில் அணுகமுடியாத, புதிர்தன்மைக் கொண்ட மனிதராகவே காம்யுவும் வாழ்ந்திருக்கிறார். நான் பெரிய கதாநாயகனாகவோ, பற்றற்றவனாகவோ இருக்க விரும்பவில்லை மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்" என்ற காம்யு இருத்தலியத்துக்கும் அபத்தத்துக்கும் இடையேயான இடைவிடாத உரையாடலை தன் சொற்கள் வழியே நிகழ்த்தியபடியே இருந்தவர்
"எனது மனம் சிந்தனை வயப்பட்டதல்ல சொற்கள் வயப்பட்டது", "எந்தக் கலைஞனும் எதார்த்தத்தை சகித்துக் கொள்வதில்லை", "வாழ்க்கையின் மீதான நேசம் மறைந்துவிடும் போது எவ்வித உள்ளர்த்தமும் ஆறுதல் அளிக்காது" என்று விரியும் அவரது உரையாடல்கள் வாசகனுக்குள் விவாதங்களையும் கேள்விகளையும் இடைவிடாது எழுப்பியபடியே இருக்கின்றன
பிரெஞ்சு காலனியான அல்ஜீரியாவின் சுதந்திரப் போராட்டம் குறித்த காம்யுவின் அரசியல் நிலைப்பாடு, வலது சாரி, இடது சாரி என்ற இரு தரப்பிலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிறது. இந்தச் சூழலில்தான் 1957-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு காம்யுவுக்குக் வழங்கப்படுகிறது.
தான் சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை என்ற வருத்தம் அவரை தொந்தரவு செய்த படியே இருந்தது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மௌனமாகவே இருந்தவர் தனது 49வது வயதில் சாலை விபத்தொன்றில் இறந்து போகிறார்.
காம்யு இறந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளியான முதல் மனிதன் 50,000 பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது , இப்போது 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
முறைகேடானவள் என்கிற ஒரு கதையும் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது, எல்லாவற்றையும் வியாபாரமாக பார்க்கிற ஒரு மனிதனும் அவனுக்கு நேர் எதிராக இந்த உலகத்தை வேறு கண் கொண்டு பார்க்கிற ஒரு பெண்ணுக்குமான முரண்களை அபத்தங்களை பேசுகிற ஒரு கதை.
"சாம்பல் நிற பூமியில் புதிரான கையெழுத்தின் கருப்புக் குறிகளாக உருவம் கொண்ட ஒட்டக மந்தைகள்", " வீடின்றி உலகிலிருந்து துண்டிக்கப்பட்டு பரந்த பிரதேசத்தின் மீது அலைந்து திரிகின்ற கையளவு மக்கள்", "சூரியனுடன் போராட வேண்டிய தேவையற்ற இக்குளிர் இரவின் மீது படை எடுத்திருந்தது" என்று கதைக்குள் அவர் நிகழ்த்தும் உரையாடல்கள் நம்மை படைப்புக்கு பக்கமாக நிறுத்துகிறது, சிறுகதையில் இத்தனை அற்புதமான உரையாடலை நிகழ்த்த முடியுமா என்றாள் அது காம்யுவால் மட்டுமே முடியும். பாலைவன புழுதியையும் அரேபிய மனிதர்களையும் தெருக்களையும் அச்சு அசலாக பதிவு செய்கிறார்.
தொகுப்பில் குறை என்றால் நிறைய எழுத்துப் பிழைகள் இருப்பதுதான், மொழிபெயர்ப்பு நூலில் இத்தனை அச்சுப் பிழைகள் இருப்பது வாசகனை அயர்ச்சியுறச் செய்யும் அடுத்த பதிப்பில் சரி செய்து கொள்வார்கள் என்று நம்புவோம் மொத்தத்தில் காம்யு பற்றிய மிகச்சிறந்த முழுமையான தொகுப்பு நூல்
சா.தேவதாஸ் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் நூலை கருத்துப்பட்டறை வெளியிட்டிருக்கிறது


7. ஆல்ஃபர் காம்யுவின் வாழ்க்கை வரலாற்று நூல்

வஸந்த் செந்தில் என்பவரின் கடுமையான உழைப்பில் உருவாகியிருக்கும் இந் நூலின் விலை ரூ.125, புதுமைப்பித்தன் பதிப்பகம். தலைப்பு ஆல்பெர் காம்யு




க.நா.சு

ஆல்பெர் காம்யு பற்றி க.நா.சு வின் சில எழுத்துக்கள்;-
பிரான்ஸ் நாட்டின் சிந்தான வரலாற்றில் மறுக்க முடியாத ஓர் இடத்தைப் பெறுபவர் ஆல்பெர் காம்யு. ழான் பால் சார்த்தரின் இருத்தலியல் (Existentialism) கோட்பாட்டுடன் இவரது சிந்தனைகள் பெரிதும் பிணைக்கப்பட்டிருந்தாலும், "தான் ஒரு கலைஞன்' என்று மட்டும் இவர் உணர்த்திக்கொண்டேயிருந்தார். மனிதம் சிதைந்து தன் மேன்மையை இழந்து வந்த ஒரு காலகட்டத்தில் வாழ்வை அதன் சகல பரிமாணங்களிலும் தீவிரமாக வாழ்ந்துவிட முனைந்த இந்த மனிதன் ஒரு கலைஞனாகவும் ஒரு தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர்.
1913-ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் ப்ரெதன் - ஸ்பானிஷ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தார். முப்பது ஆண்டுகள் அல்ஜீரியா எனப்படும் வட ஆப்பிரிக்காவில் பல்வேறு தொழில்கள் செய்து (அல்ஜீரியர்ஸ் கால்பந்துக் குழுவிற்கு கோல் கீப்பராக இருந்ததும் இதில் அடங்கும்- வாழ்ந்து வந்தார்.
பிரான்ஸில் குடியேறிய பின்னர் ஜெர்மானிய ஆதிக்கத்தின் போது எழுந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிர பங்காற்றினார். "Combat' என்ற ரகசிய வெளியீட்டுப் பத்திரிகையின் ஆசிரியரானார். பின்னர் பத்திரிகைத் துறையை விட்டு விலகி முழுதுமாய் எழுத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1937}இல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. அந்நியன் (þThe outsider 1942) இவரது முதல் நாவல். தொடர்ந்து வீழ்ச்சி (þthe fall) "பிளேக்' (The plague) என்ற நாவல்களும், காலிகுலா (Caligula) முதலிய நாடகங்களும் சிசிபஸின் புராணம் (The myth of sysyphus) புரட்சிக்காரன்(The Rebel) போன்ற தத்துவக் கட்டுரைகளும் இவரது முக்கியமான படைப்புகளாகும்.
இன்றைய மனிதனின் மனசாட்சிப் பிரச்னைகளுக்கு தீர்மானமான கலை வடிவம் தந்தவர் என்ற அடிப்படையில் 1957-ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது நாற்பது.
இலக்கியவாதியாகவும், தத்துவவாதியாகவும் வாழ்ந்த காம்யு சிறந்த நாடக ஆசிரியரும், நாடக இயக்குநரும்கூட. 1940-ல் பாரிஸ் நகரில் அரங்கேறிய பல உன்னத நாடகங்களில் இவரது பங்கும் குறிப்பிடத்தக்கது.
ஆல்பெர் காம்யுவின் மொத்த சிந்தனா அமைப்பையும் புரிந்துகொள்ள நீண்ட தேடல் அவசியம். சில நேரங்களில் முரண்பாடுகளின் உச்சியில் தன் படைப்புகளில் காணக் கிடைக்கும் காம்யு சில நேரங்களில் அவநம்பிக்கை வாதியாகவும் (Pessimist) தோன்றுகிறார். என் பால்ய கால வறுமை எனக்குத் துரதிருஷ்டவசமாக இருந்ததில்லை என்று சொல்லியபோதும் வறுமை காம்யுவின் சிந்தனையைப் பாதித்த ஒரு முக்கியமான வாழ்நிலை உண்மை. இந்த வறுமைதான் அவரை அவநம்பிக்கைவாதியாக நமக்குக் காண்பிக்கிறது. எனினும் இதையெல்லாம் தாண்டி நிற்கும் இவரது தீவிரமான வாழ்வும், கலையும்தாண் இந்த நூற்றாண்டின் "மேற்கத்திய மனசாட்சி'யைப் பிரதிபலிக்கிறது.
*தமிழில் வெளியாகியுள்ள ஆல்பெர் காம்யு நூல்கள்:*
1. அந்நியன் - (தமிழில்: வெ.ஸ்ரீராம்) க்ரியா பதிப்பகம்
2. கொள்ளை நோய் - (தமிழில்: ச.மதனகல்யாணி) ஆனந்தா பதிப்பகம், புதுச்சேரி
3. நியாயவாதிகள் (நாடகம்) - சந்தியா பதிப்பகம்
4. மரண தண்டனை என்றொரு குற்றம் - (தமிழில் } வி.நடராஜ்) வெளியீடு: பரிசல்



சுட்டிகள்
If you are a visual learner and need a video: https://www.youtube.com/watch?v=vSYPwX4NPg4
https://www.youtube.com/watch?v=jQOfbObFOCw


குறிப்புகள்
via Wiki:
அல்பேர்ட் காம்யு (Albert Camus) (நவம்பர் 71913 - ஜனவரி 41960) நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர். 
நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் எழுதிய காம்யுவின் L'Étranger (The Stranger) நாவல் தமிழில் "அந்நியன்" என்ற பெயரில் வெ. ஸ்ரீராமால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இவர் தனது தந்தையை பார்க்கவேயில்லை.  இவருடைய ஆசிரியர் லூயி ழெர்மென் முதல் உலகப் போரில் ராணுவ சேவை செய்தவர். சிறுவன் காம்யுவின் அறிவாற்றலையும் நற்பண்புகளையும் இனம் கண்டுகொண்டு, ஊக்கமும் உதவியும் அளித்து அவனை முன்னேறச் செய்ததில் இவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. தனக்கு நோபல் பரிசு கிடைத்தவுடனேயே, தனக்கு அளிக்கப்பட்ட கௌரவத்துக்காகத் தன்னுடைய தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து, ஆல்பெர் காம்யு எழுதிய கடிதம் இன்று வரலாற்றுப் புகழ் பெற்றது.[1]

1930 ஆம் ஆண்டில், அவருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.[3] இது ஒரு பரவும் நோய் என்பதால், அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, தனது மாமா குஸ்டாவ் அகால்ட் என்ற கசாப்புக் கடைக்காரருடன் தங்கியிருந்தார், அந்த நேரத்தில்தான் காம்யு தனது தத்துவ ஆசிரியர் ஜீன் கிரெனியரின் வழிகாட்டுதலுடன் தத்துவத்திற்கு திரும்பினார். பண்டைய கிரேக்க தத்துவஞானிகள் மற்றும் பிரீட்ரிக் நீட்சே ஆகியோரால் அவர் ஈர்க்கப்பட்டார்.[3] அந்த நேரத்தில், அவர் பகுதி நேரப் படிப்பு மட்டுமே படிக்க முடிந்தது. பணம் சம்பாதிக்க, அவர் சில வேலைகளை செய்தார்: ஆசிரியர், எழுத்தர் மற்றும் வானிலை ஆய்வு நிறுவனத்தில் உதவியாளர் போன்ற பணிகளை செய்தார்.[4]

நீட்சே மற்றும் ஆர்தர் ஸ்கோபன்ஹவுர் ஆகியோர் அவநம்பிக்கை மற்றும் நாத்திகத்தை நோக்கி வழி வகுத்தனர்.

1938-லிருந்தே காம்யுவின் எழுத்துகள் வெளியிடப்பட்டாலும், 1942-ல் வெளியிடப் பட்ட ‘அந்நியன்’தான் முதல்முதலாக உலகத்தின் கவனத்தை காம்யுவின் பக்கம் திருப்பியது. அப்போது அவருக்கு வயது 29. அடுத்த ஐந்து ஆண்டுகளில், அடுத்தடுத்து வந்த புத்தகங்களால் அவருடைய செல்வாக்கும் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே போனது, பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. 1951-ல் வெளியான ‘கிளர்ச்சியாளன்’என்ற தத்துவச் சிந்தனை நூல் காம்யுவுக்கும் ழான் போல் சார்த்ருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

1957-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு காம்யுவுக்குக் கிடைத்தது. அவருடைய சிந்தனைப் போக்கின் நுணுக்கங்களும், தொலைநோக்குப் பார்வையும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாததால் மனமுடைந்த காம்யு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மௌனமாகவே இருந்தார். 1960 ஜனவரி 4-ம் தேதி சாலை விபத்தொன்றில் அவர் இறந்தார்.

அப்போது எழுதிக்கொண்டிருந்த, முற்றுப்பெறாத, ‘முதல் மனிதன்’ நாவலின் கையெழுத்துப் பிரதி. காம்யு இறந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய மகள் காதரினும் சில நண்பர்களும் சேர்ந்து, அவர் எழுதி வைத்திருந்த சில குறிப்புகளுடன் இந்த நாவலை வெளியிட்டார்கள். முதல் வாரத்தி லேயே 50,000 பிரதிகள் விற்றுச் சாதனை படைத்த அந்த நாவல், இப்போது 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (காம்யுவின் இந்தப் பிறந்த நூற்றாண்டில் இந்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘க்ரியா’பதிப்பகத்தில் 2013ல் வெளி வருகிறது).
தன்னுடைய தந்தையைத் தேடத் தொடங்கி, காலத்தில் பின்நோக்கிச் சென்று, 1848-ல் முதல் பிரெஞ்சுக் குடியேறிகள் அல்ஜீரியாவுக்கு வந்ததிலிருந்து ஆரம்பித்து, அல்ஜீரிய பிரெஞ்சு மக்களின் வரலாறு, தன்னுடைய குழந்தைப் பருவம், படிப்பறிவற்றவர்கள் குடும்பத்தி லிருந்து வந்த தனக்குக் கல்வியையும் நற்பண்புகளையும் புகட்டிய ஆசிரியர், ஏழ்மை கற்றுக்கொடுத்த மதிப்பீடுகள், இயற்கை அளித்த இன்பங்கள் இவற்றினூடாக உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் எழுதப்பட்டதே ‘முதல் மனிதன்’.

இரண்டாம் உலகப்போரில் 1940ம் வருடம் ஹிட்லரின் நாஜி ஜெர்மனி ஃபிரான்ஸை ஆக்கிரமிக்கிறது. ஃபாசிசம், நாசிசம் எதிர்த்து பலர் கலகச் செயல்களில் ஈடுபட்டனர். Combat என்ற ரகசிய நாளேடு தொடங்கப்பட்டது. ழான் பால் சார்த்தர், ஆல்பர் காம்யு தலைமறைவாக வாழ்ந்து இந்த நாளேட்டில் தொடர்ந்து எழுதி வந்தார்கள். காம்யு இந்த நாளேட்டின் ஆசிரியராக பொறுப்பேற்றார். ஃபாசிசத்திற்கு எதிராக இருவரும் எழுதிய கட்டுரைகள் ஃபிரான்ஸ் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இருவரும் தொடக்கத்தில் இடது சாரி பின்புலத்தில் அரசியல் கட்டுரைகளை எழுதினாலும், இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் சார்த்தருக்கும் காம்யுவுக்கும் கருத்து வேறுமை முற்றுகிறது. காம்யு ருஷ்யாவின் ஸ்டாலின் ஆட்சியை விமர்சித்தார். இதனால் இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் இதே நாளேட்டில் நடந்தது. காம்யு அறத்தையும் அரசியலையும் பிரிக்கமுடியாது என வாதிட்டார். இதன் பின்ணனியில் The Rebel என்ற நூலையும் வெளியிட்டார். கருத்து வேற்றுமை ஒருபுறம் இருந்தாலும், இருவருக்கும் ஒரே காதலி சைமன் தி பூவோவினாலும் பூசல் முற்றியது. ஆனால் இருவரும் பரஸ்பரம் தங்களுக்குள் உள்ள மரியாதையை வெளிக்காட்ட தவறவில்லை. காம்யு விற்கு 1957 இல், நோபல் பரிசு கிடைத்தவுடன் அவரைப் பாராட்டி “ என் முன்னாள் இனிய நண்பன்” என விளித்து சார்த்தர் எழுதினார்.


காம்யுவுக்கு ஆசிரியர் எழுதிய வரலாற்றுக் கடிதம்!


உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆல்பெர் காம்யுவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில தினங்களில் தன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ழெர்மெனுக்குக் கடிதம் எழுதுகிறார் காம்யு.
தனக்கு நோபல் அறிவிக்கப்பட்டதும் தாய்க்கு அடுத்தபடியாக ழெர்மென்தான் நினைவுக்கு வந்ததாகச் சொல்கிறார். ‘நீங்கள் இல்லாமல், ஏழைச் சிறுவனாக இருந்த என்னை நோக்கி நீங்கள் நீட்டிய உங்களுடைய கரங்கள் இல்லாமல், உங்களுடைய கற்றுக்கொடுத்தலும், உங்களுடைய முன்னுதாரணமும் இல்லாமல், இந்த மாதிரி எதுவுமே நடந்திருக்காது. இந்த விதமான கௌரவத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் என்னவாக இருந்திருக்கிறீர்கள், உங்களுடைய பள்ளி மாணவர்களில் ஒருவனாக இருந்து, வயதான பிறகும் உங்களிடம் நன்றியுணர்வு சற்றும் குறையாத மாணவனாக இருக்கும் ஒருவனிடம் உங்களுடைய முயற்சிகளும், உழைப்பும், அவற்றில் நீங்கள் ஈடுபடுத்திய தாராள மனமும் இன்னமும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன என்பதையும் உறுதியாகச் சொல்ல குறைந்தபட்சம் இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. நெஞ்சார உங்களைத் தழுவிக்கொள்கிறேன்’ என்று அக்கடிதத்தில் காம்யு எழுதியிருந்தார். அவரது கடிதத்துக்கு ழெர்மென் எழுதிய பதில் கடிதம் இது:
என் பிரிய குழந்தையே! ‘காம்யு’ என்ற புத்தகம், அதன் ஆசிரியர் ழான்-க்லோத் ப்ரிஸ்வில் அவர்களால் அன்புடன் கையெழுத்திடப்பட்டு உன்னுடைய கையெழுத்தில் எழுதப்பட்ட முகவரியுடன் எனக்கு வந்து சேர்ந்தது. உன்னுடைய கண்ணியம் மிக்க இந்தச் செய்கையால், நீ எனக்கு அளித்திருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவோ, உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றோ எனக்குத் தெரிய வில்லை. அது மட்டும் சாத்தியமாக இருக்குமென்றால், பெரிய மனிதனாக வளர்ந்துவிட்ட உன்னை, எப்போதும் எனக்கு ‘என் குட்டி காம்யுவாக’ இருக்கும் உன்னை கட்டித் தழுவிக்கொள்வேன்.
உன்னுடைய குணத்தையோ, உன் உணர்ச்சிகளையோ வெளிக்காட்டிக்கொள்ளாத இயல்பான ஒரு அடக்கம் உன்னிடம் எப்போதுமே தென்பட்டிருக்கிறது. எளிமையாகவும், ஒளிவுமறைவுமின்றியும் இருப்பதால் உன்னால் வெற்றி காணவும் முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேல், நீ நல்லவன்! வகுப்பில் இருந்தபோதே இந்த அபிப்பிராயங்களை என்னுள் உருவாக்கியிருக்கிறாய். தன்னுடைய தொழிலை முழு ஈடுபாட்டுடன் செய்ய விரும்பும் ஆசிரியர், தன்னுடைய மாணவர்களை, தன் குழந்தைகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு எதையுமே கவனிக்கத் தவற மாட்டார். முழுவதும் உன்னைப் பற்றியோ, அல்லது உன்னைக் குறிப்பிட்டோ வெளிவரும் புத்தகங்களின் பட்டியல் முடிவின்றி நீண்டுகொண்டே போவதைப் பார்த்தேன். உன்னுடைய புகழ் உன் தலைக்கேறவில்லை என்பது எனக்கு மிகப் பெரிய மனநிறைவைத் தருகிறது. நீ காம்யுவாகவே இருக்கிறாய்: சபாஷ்.
நம் பள்ளிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் பயங்கரத் திட்டங்களைக் குறித்து மதச்சார்பற்ற ஆசிரியர் என்ற முறையில் எனக்கு ஏற்படும் மனச்சங்கடத்தைப் பற்றி உன்னிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். என்னுடைய தொழிலில், குழந்தைகளிடையே மிகவும் புனிதமானதாகப் போற்றப்பட வேண்டிய ஒன்றை நான் எப்போதுமே மதித்து வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்: தனக்கென்று ஒரு உண்மையைத் தேடிக்கொள்ளும் உரிமை. கடவுளைப் பற்றிப் பேசும்போது (அது பாடத்திட்டத்தில் இருக்கிறது), சிலர் கடவுளை நம்புகிறார்கள் என்றும், சிலர் நம்பவில்லை என்றும் சொல்லியிருக்கிறேன். மேலும், தங்களுடைய உரிமையை முற்றிலுமாகப் பயன்படுத்தி, ஒவ்வொருவரும் தான் விரும்பியதைச் செய்தார்கள். அதைப் போலவே, மதங்கள் குறித்த பகுதியில், உலகில் பல மதங்கள் இருந்தன என்றும், ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய மதத்தைச் சார்ந்திருந்தார்கள் என்றும் மட்டுமே சுட்டிக்காட்டினேன். எந்த மதத்தையுமே பின்பற்றாதவர்கள்கூட இருந்தார்கள் என்றும் சொன்னேன். பள்ளி ஆசிரியர்கள் மதத்தின் விற்பனைப் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு நான் சொல்வது பிடிக்காது என்று எனக்குத் தெரியும். அல்ஜேயின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் என்னுடைய தந்தை, தன்னுடைய தோழர்களைப் போலவே, ஒவ்வொரு ஞாயிறும் வழிபாட்டுக்குச் சென்று திருவிருந்தில் பங்கேற்க வற்புறுத்தப்பட்டார். ஒருநாள், இந்தக் கட்டுப்பாட்டால் எரிச்சலடைந்த அவர் ‘புனித’ அப்பத்தை வழிபாட்டுப் புத்தகத்தில் வைத்து மூடிவிட்டார்! இதை அறிந்த கல்லூரி ஆசிரியர் என் தந்தையைக் கல்லூரியிலிருந்து விலக்கத் தயங்கவில்லை. இதுதான் ‘சுதந்திரப் பள்ளியின்’ ஆதரவாளர்கள் விரும்புவது. இப்போது இருக்கும் நாடாளுமன்றத்தைப் பார்க்கும்போது இந்தத் திட்டம் வெற்றிபெற்றுவிடுமோ என்று அஞ்சுகிறேன். ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மதச்சார்பற்ற பள்ளிகளில் கிட்டத்தட்ட நூறு வகுப்பறைகள் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சிலுவையின்கீழ் இயங்குகின்றன என்று ‘லெ கனார் ஆன்ஷெயினெ’ வார இதழ் சுட்டிக்காட்டியிருக்கிறது. குழந்தைகளின் மனசாட்சி மீதான கொடுமையான ஒரு தாக்குதலாக இதைப் பார்க்கிறேன். இந்த எண்ணங்கள் என்னைச் சோகத்தில் ஆழ்த்துகின்றன.
என் பிரிய சிறுவனே, இங்கு எல்லோரும் நலம். நான் கடிதம் எழுதாதபோதும், உங்கள் அனைவரையும் பற்றி அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன் என்பதை மறக்காதே. திருமதி.ழெர்மெனும் நானும் உங்கள் நால்வரையும் இறுகத் தழுவிக்கொள்கிறோம்.
அன்புடன்,
லூயி ழெர்மென்
மொழிபெயர்ப்பு: வெ.ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், இருமுறை செவாலியெ விருது பெற்றவர்.
காம்யு நோபல் பரிசு பெற்றதும் அவரின் பள்ளிக்கால ஆசானுக்கு இப்படிக்கடிதம் எழுதினார். :
அன்பு மிகுந்த மான்ஸர் ஜெர்மைன் அவர்களுக்கு,
என் இதயத்தின் அடியில் இருந்து உங்களுடன் பேச நான் சில நாட்கள் எடுத்துக்கொண்டேன். என் மனதில் பொங்கிக்கொண்டு இருந்த பதற்றம் தணியட்டும் என்று தான் இத்தனை காலம் காத்திருந்தேன். நான் நாடாத, தேடிப்போகாத மிகப்பெரிய மரியாதை எனக்கு தரப்பட்டிருக்கிறது.
இந்த நோபல் பரிசு கிடைத்தது என்கிற செய்தியை கேள்விப்பட்டதும் என் அன்னைக்கு அடுத்தபடியாக எனக்கு நினைவுக்கு வந்தது நீங்கள் தான். நீங்களில்லாமல், இந்த ஏழை சிறுவனை நோக்கி நீண்ட அந்த அன்பு மிகுந்த கரங்கள் இல்லாமல், உங்களின் வழிகாட்டுதல் இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்காது. இந்த விருதை பெற நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை.
இருந்தாலும் இந்த விருது உங்களிடம் நீங்கள் எனக்கு என்னவாக இருந்தீர்கள் இன்னமும் எப்படி என்னை நெகிழ வைக்கிறீர்கள் என்ற சொல்ல வாய்ப்பாக அமைந்தது என்று ஆனந்தம் அடைகிறேன். உங்களின் முயற்சிகள், ஓயாத
உழைப்பு, எங்களைப்போன்ற குட்டி பள்ளி குழந்தைகளிடம் நீங்கள் காட்டிய ஈடில்லா கருணை இத்தனை வருடங்கள் கடந்தாலும் எங்களை உங்கள் மீது நன்றி கொண்டிருக்க செய்கிறது என்று சொல்லிக்கொள்ள இந்த பரிசு உதவியது என்று நெகிழ்கிறேன்
இதயத்தால் தங்களை தழுவிக்கொள்ளும்,
ஆல்பர்ட் காம்யு  (நோபல் பரிசு பெற்றதும் காம்யு தன் ஆசானுக்கு எழுதிய கடிதம் இது )
மேற்கோள்கள்
அவரின் சில புகழ்பெற்ற வாசகங்கள் உங்களுக்காக
என் பின்னால் நடக்காதே ; வழிகாட்டாமல் போகலாம் நான் . முன்னே நடக்காதே ;பின்பற்றாமல் போகலாம் நான் . என் அருகே பிணைந்து நட .என் நண்பனாக இரு .
மகிழ்ச்சி எதை கொண்டிருக்கிறது என தேடினால் நீங்கள் மகிழ்ச்சியை கண்டடைய மாட்டீர்கள் ;வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று ஒவ்வொரு கணமும் தேடினால் ; நீங்கள் வாழவே மாட்டீர்கள்
நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு துரதிஷ்டம். இன்று நாம் எல்லோரும்
இந்தத் துரதிஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்
நாம் இறப்பதற்கு தகுதியான காரணங்கள் பல உண்டு; கொல்வதற்கு என்று தகுந்த
காரணங்கள் எதுவுமே இல்லவே இல்லை
வளையக்கூடிய, ஆனால், உடைபடா உள்ளங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை
இலையுதிர் காலம் இன்னுமொரு வசந்தம் அங்கே உதிரும் ஒவ்வொரு இலையும் இன்னொரு மலர்
எனக்குள்ள ஒரே கடமை எல்லாரையும் எப்பொழுதும் அன்பு செய்வது தான்
மனிதன் வாழ வேண்டும்; படைக்க வேண்டும் – கண்ணீர் துளிகள் அவன் நெஞ்சை
நிறைக்கும் வரை
எனக்கு இரண்டே தேர்வுகள் தான் ,”ஒன்று தற்கொலை செய்து கொள்ளவேண்டும்
அல்லது ருசித்து ஒரு கோப்பை காபி பருக வேண்டும் !”. எதை செய்யலாம் நான்
?
புரட்சிக்காரன் என்பவன் யார் தெரியுமா ? இது இப்படி இருக்கக்கூடாது என
உரத்துக்குரல் கொடுக்கிறவனே !
எப்பொழுதும் தனித்து தவறு செய்ய பழகுகிற பொழுது தான் நீங்கள்
முன்னேற்றத்தை அடைய ஆரம்பிக்கிறீர்கள்
கொலையாளிகளும் பலியாடுகளும் வாழும் ஒரு சமூகத்தில், சிந்திக்கத்
தெரிந்தவர்கள் கொலையாளிகளின் பக்கம் நிற்கக்கூடாது.
-பூ.கொ.சரவணன்


காம்யு நோபல் பரிசு பெற்றபோது தன்னுடைய படைப்புகளை மூன்று தளத்தில் தான் பார்ப்பதாகச் சொன்னார்:
“முதலில் அபத்தம். இதை மூன்று வடிவங்களில் எழுதினேன்: ‘அந்நியன்’ (நாவல்), ‘காலிகுலா’, ‘விபரீத விளையாட்டு’ (நாடகங்கள்), ‘சிசிஃபின் புராணம்’(தத்துவக் கட்டுரை). அடுத்து கிளர்ச்சி. அதன் மூன்று வடிவங்கள்: ‘கொள்ளை நோய்’(நாவல்), ‘முற்றுகை’, ‘நியாயவாதிகள்’ (நாடகம்), ‘கிளர்ச்சியாளன்’ (தத்துவக் கட்டுரை). அடுத்தது நேசம். இந்தக் கருவை அடிப்படையாகக்கொண்டு என் எழுத்து களை ஏற்கெனவே மனதில் வடிக்கத் தொடங்கியிருந்தேன்.”

கால் பந்தாட்டத்தில் தீவிர ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்த காம்யு, அது இவருக்குக் கற்றுக்கொடுத்த பாடம் என்று அவர் சொன்னது: “எந்தத் திசையிலிருந்து பந்து வரும் என்று எல்லா சமயங்களிலுமே சொல்ல முடியாது.”

ஒழுக்கநெறியையும் மனிதனின் கடமைகளையும் விளையாட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். “என்னுடைய அணியை நான் மிகவும் நேசித்தேன். முயற்சியையும் அடுத்து வரும் களைப்பையும் இவ்வளவு அற்புதமாக ஒன்று சேர்க்கும் வெற்றியின் மகிழ்ச்சிக்காகவும், தோற்றுவிட்ட மாலை நேரங்களில் அழ வேண்டும் என்ற அசட்டுத்தனமான ஆசைக்காகவும்.”

“என்னுடைய அடுத்தடுத்த புத்தகங்களில் வெவ்வேறு விதமான அழகியலையும் நடையையும் கையாண்டிருக்கிறேன். கலைஞன் என்ற முறையில் என்னுடைய தவறுகளும், போதிய திறமை இல்லாததும் எனக்குத் தடைகளாக இருப்பதைச் சில சமயம் நான் உணர்ந்தாலும், அழகியல் உணர்வில் எந்தக் குறையும் இல்லாததையும் உணர்கிறேன். வெவ்வேறு வடிவங்களைக் கலக்காமல் இருப்பதற்காக வெவ்வேறு தளங்களில் எழுதுகிறேன். ஆகவே, செயல்களின் மொழியில் நாடகங்களையும், பகுத்தறிவு வாதரீதியில் கட்டுரைகளையும், மனித இதயத்தின் புரிபடாத ரகசியங்களில் நாவலையும் எழுதினேன்” என்று தன்னுடைய இறுதி நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

ஆல்பெர் காம்யு, நோபல் பரிசு ஏற்புரை, 10 டிசம்பர் 1957.

எந்த ஓர் எழுத்தாளரும் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், தன் தொழிலின் உன்னதத்துக்கு அடித்தளமான இரண்டு பொறுப்புகளை அதாவது, உண்மைக்கும் சுதந்திரத்துக்கும் மட்டுமே சேவைசெய்வது என்ற பொறுப்புகளை - கட்டாயமாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவருடைய எழுத்தை ஏற்றுக்கொள்ளும் துடிப்புள்ள ஒரு சமூகத்தை அவருடைய வாழ்நாளிலேயே அவரால் காண முடியும்.
-----------------------------------

மொழிபெயர்ப்பு என்பது மொழி, இலக்கியம், பண்பாடு கடந்த செயல்பாடு! – வெ.ஸ்ரீராம் பேட்டி



நூற்றாண்டு கடந்த மொழிபெயர்ப்பு வரலாற்றில் வெ.ஸ்ரீராமின் இடம் தனித்துவமானது. தமிழ் வாசகர்களிடம் பரவலாகத் தாக்கத்தை ஏற்படுத்திய பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ நாவலின் மொழிபெயர்ப்பாளராகத் தமிழுக்கு அறிமுகமானவர். இவரது ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் மிகுந்த முக்கியத்துவமும் தனித்துவமும் கொண்டவை. இவர் மொழிபெயர்த்த ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ கவிதைத் தொகுப்பு 2000-களின் முற்பகுதியில் தமிழ்க் கவிதைகளின் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரெஞ்சு இலக்கியம், சினிமா, கலாச்சாரத்தை தமிழ் மக்களிடம் சீரிய வகையில் அறிமுகப்படுத்தியதற்காக பிரான்ஸ் அரசாங்கம் இவருக்கு இரண்டு முறை செவாலியே விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
பிரெஞ்சு கற்றுக்கொள்ள எப்படி நேர்ந்தது? நிறைய மொழிகளை ஒருவர் கற்றுக்கொள்வதில் உள்ள அனுகூலங்கள் என்னென்ன?
காம்யு, பால்ஸாக், விக்டர் ஹ்யூகோ என்று எண்ணற்ற பிரெஞ்சு இலக்கியங்களை ஆங்கிலத்தில் படித்திருந்தேன். இந்த அற்புதமான இலக்கியங்களெல்லாம் மூல மொழியில் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்த்துவிட நினைத்ததுதான் பிரெஞ்சு கற்றுக்கொள்ளக் காரணம். எந்தவொரு மொழியாக இருந்தாலும் அதை நீங்கள் எதற்காகக் கற்றுக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் அதன் அனுகூலம் இருக்கிறது. இன்று பிரெஞ்சு அல்லது வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் – ஆங்கிலம் உட்பட – இலக்கியத்துக்காகக் கற்றுக்கொள்ள விரும்புவதில்லை. வேலைக்குச் செல்வதை நோக்கமாகக் கொண்டு பயன்மதிப்புக்காக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதென்பது என்னை வருந்தச்செய்யும் விஷயம்.
காம்யுவின் ‘அந்நியன்’ நாவல் மூலமாக மொழிபெயர்ப்புக்குள் நுழைகிறீர்கள். ‘க்ரியா’வின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பும் அதுதான். முதல் புத்தகமாக காம்யுவைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
மவுன்ட் ரோடு எல்எல்ஏ கட்டிடத்தில் 1970-களில் நிறைய இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். ந.முத்துசாமி, திலீப் குமார், சா.கந்தசாமி என ‘நடை’ எழுத்தாளர்கள் நிறைய பேர் அங்கு வருவார்கள். அங்கேதான் ‘க்ரியா’ ராமகிருஷ்ணனும் அறிமுகமாகிறார். சி.சு.செல்லப்பா, சி.மணி, ஆனந்த், ஆத்மாநாம் என ஒரு பெரும் படையே இருந்தது. எல்லோருமே இளவட்டம். அந்த சமயத்தில் நான் தீவிரமாக பிரெஞ்சு இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். எனது பிரெஞ்சு இலக்கிய, சினிமா அறிவை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, ஆங்கிலக் கட்டுரைகள் மூலமாக அவர்கள் காம்யுவை அறிந்துவைத்திருந்ததற்கும், நான் நேரடியாக பிரெஞ்சிலிருந்து தெரிந்துவைத்திருந்த காம்யுவுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அப்போது வந்துகொண்டிருந்த ‘பிரக்ஞை’ சிறுபத்திரிகையில் இதைப் பற்றி எழுதச் சொல்லிக் கேட்டார்கள். காம்யுவின் உலகத்தைப் பேச வேண்டுமென்றால், அவரது படைப்பிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டியது அவசியம் இல்லையா? ஆங்கில மேற்கோள்களைக் காட்ட முடியாது; ஆங்கிலத்தில் திரிந்துபோயிருக்கிறது என்பதுதானே எனது வாதம். ஆக, எனது வாசிப்பைச் சொல்வதற்கு முன்னால் காம்யு என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அப்போதுதான் காம்யுவின் படைப்பைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
காம்யு, சார்த்ர், ப்ரெவெர் என நீங்கள் மொழிபெயர்த்த பலரும் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள். நீங்கள் மொழிபெயர்ப்பதற்கு முன்பாக இங்கே பிரெஞ்சு இலக்கிய வாசிப்பு என்னவாக இருந்தது?
‘அந்நியன்’ நாவல் மொழிபெயர்ப்பாகி அதன் பதிப்புக் குறிப்புக்காகத் தகவல்களைத் திரட்டத் தொடங்கினோம். என்னென்ன மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாகியிருக்கின்றன என்று நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா (என்பிடி) ஒரு விவரப் பட்டியல் வெளியிட்டிருந்தது. பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு வந்த புத்தகங்கள் என ஒரு 52 தலைப்புகள் இருந்தன. ஆனால், பெருவாரியான மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்திலிருந்து வந்தவை. பாண்டிச்சேரியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்த ஒன்றிரண்டு படைப்புகள் பிரெஞ்சிலிருந்து நேரடியாக வந்திருக்கலாம். பெரும்பாலான படைப்புகள் முழுமையானதாக அல்லாமல் சுருக்கப்பட்ட பதிப்பாக இருந்தது. அவை வெறும் கதைக்காக மொழிபெயர்க்கப்பட்டவை. எனவே, ‘அந்நியன்’ மொழிபெயர்ப்பானபோது ‘பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில்’ என்று ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். எங்கள் தலைமுறைக்குப் பின்பாக வரக்கூடியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்டதே தவிர பெருமிதத்துக்காக அல்ல. பின்னால் வருபவர்கள் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளலாம் இல்லையா? அதுபோக, எனக்குப் பிறகு நேரடியாக மொழிபெயர்க்க வருபவர்கள் அதில் மாற்றங்கள் செய்வதற்கும் உரிமை இருக்கிறது. ஏனென்றால், மொழிபெயர்ப்புக்கும் பரிணாம வளர்ச்சி இருக்கிறது.
உங்கள் மின்னஞ்சல் முகவரியில் காம்யு இருக்கிறார். எந்தக் கூட்டங்களில் பேசினாலும் காம்யுவின் பெயரை நீங்கள் உச்சரிக்காமல் இருந்ததில்லை. காம்யு மீது உங்களுக்கு மிகப் பெரும் அபிமானம் வருவதற்கு என்ன காரணம்?
காம்யுவின் சிந்தனை முறைகளும், அதிலிருந்து அவர் கண்டறிந்த விஷயங்களை இலக்கியமாக்கிய விதமும்தான் முக்கியமான காரணம். எழுதப் படிக்கத் தெரியாத பாத்திரம் கழுவும் பெண்ணுக்குப் பிறந்த காம்யுவின் வாசிப்புக் கதவு, கசாப்புக்கடை நடத்தும் மாமாவால்தான் திறக்கிறது. சிறு வயதிலேயே தந்தையை இழந்த காம்யு அவரது மாமா வீட்டில்தான் வளர்கிறார். காம்யுவின் முதல்கட்ட வளர்ச்சியில் கிரேக்கச் சிந்தனையின் தாக்கம் இருந்தது. மத்திய தரைக்கடல் சிந்தனை என்பார்கள். அதுதான் ஐரோப்பாவை உருவாக்கியது. இந்தியா உட்பட உலகம் முழுக்க அந்தச் சிந்தனை முறை தாக்கம் செலுத்தியிருக்கிறது. காம்யுவின் பள்ளிக்காலத்தில் அவரது ஆசிரியர் சில புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறார். அதில் முக்கியமான ஒரு புத்தகம் பகவத் கீதை. கீதையின் தத்துவச் சிந்தனைகள் காம்யுவை ஆக்கிரமித்திருக்கின்றன. காம்யுவின் படைப்புகள் அத்தனையிலும் கடமையைப் பற்றி பேசும் பகுதிகளிலெல்லாம் பகவத் கீதையின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருக்கும். ரிச்சர்ட் அட்டென்பரோ எடுத்த ‘காந்தி’ படத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி தன்னைத் தயார்படுத்துக்கொள்வதற்காக வாசித்த மூன்று பேர் யார் தெரியுமா? காந்தி, பகவத் கீதை, காம்யு!
அபத்தத்தை எதிர்கொள்ளும் புதுவிதமான பார்வையை முதன்முறையாக பிரெஞ்சு சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் காம்யு. அபத்தம் என்பது இந்த உலகத்தில் இருக்கும் அர்த்தமின்மை மட்டும் அல்ல; காரண, காரியரீதியாக விளக்கப்பட முடியாத செயல்கள் நடக்கக்கூடிய உலகத்தில், அதைக் காரண, காரியரீதியாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மனிதனுக்கும் அந்த உலகத்துக்கும் ஏற்படக்கூடிய முரண்பாடுதான் அபத்தம். அபத்தமான உலகத்திலிருந்து ஓட முடிவெடுப்பதென்பது தப்பித்தலாகிவிடும்; தற்கொலை செய்துகொள்வதுபோல. போராட முடிவெடுத்து இந்த உலகத்தைத் தாக்கத் தொடங்கினால் அப்பாவி மக்களும் இறந்துபோவார்கள். பிறகு, என்னதான் செய்வது? எதிர்த்து நிற்பதுதான் ஒரே வழி. இங்கேதான் சிஸிபஸ் வருகிறது. மலை மேல் பாறையை உருட்டிக்கொண்டுபோவதுதான் அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. அந்தத் தண்டனையைப் பாதியில் நிறுத்தினால் அவன் மேல் பாறை ஏறிச்சென்றுவிடும். அவன் வாழ்நாளில் அதை மலை உச்சிக்குக் கொண்டுபோய் சேர்க்கவும் முடியாது. பிறகு, என்னதான் செய்வது? அதை சந்தோஷமாக உருட்டிக்கொண்டுபோ என்கிறார் காம்யு. நீ இருக்கும் வரை மகிழ்ச்சியாகக் கிளர்ச்சிசெய் என்கிறார். இப்படியான பார்வையை அதுவரை யாரும் முன்வைக்கவில்லை.
இரண்டாம் உலகப் போர், ஐரோப்பியச் சூழ்நிலையின் பின்னணியில் நாம் ‘அந்நியன்’ நாவலைப் புரிந்துகொள்ள முற்பட்டால் அதற்கு வேறு பரிணாமம் கிடைத்துவிடும். வெறுப்பின் உச்சத்தில் இருக்கக்கூடிய சமூகம் அது. அந்தச் சமூகத்துக்குப் போலியான நம்பிக்கையைக் கொடுக்காமல், அதேசமயத்தில் அச்சமூகத்தை நாசக்கார வேலையிலும் இறங்கவிடாமல், பொறுமையாக இருந்து ஆக்கபூர்வமான வேலையைச் செய்ய வேண்டும் என்றும், அந்தச் சமூகத்துக்கு என்ன மாதிரியான பார்வையைக் கொடுக்க வேண்டும் என்றும் பிரெஞ்சு சமூகத்துக்கு காம்யு எடுத்துவைத்த முதல் அடிதான் ‘அந்நியன்’ நாவல்.
உங்கள் மொழிபெயர்ப்புகளின் பொது அம்சமாக இந்த ‘அபத்தம்’ இருக்கிறது. ‘அபத்தத்தால் இயங்கும் உலகம்’தான் உங்களது இலக்கிய மொழிபெயர்ப்புகள் எனலாமா?
உண்மைதான். நான் மொழிபெயர்த்த புத்தகம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அபத்தப் பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது. ‘குட்டி இளவரசன்’ நாவலில் வரும் அபத்தம் வெகுளித்தனமான ஒரு சிறுவனின் பார்வையிலானது. குற்றமறியாத அந்தச் சிறுவனின் கண்களுக்கு அபத்தங்களெல்லாம் தென்பட்டுவிடுகின்றன. சார்த்ரின் ‘மீள முடியுமா?’ நாடகத்தில் வரும் அபத்தம் சித்தாந்தரீதியிலானது. ‘எதிலும் ஏகபோக உரிமை இருந்தால் மாற்றுக்கருத்துகளுக்கு இடம் இருக்காது; சுதந்திரம் இருந்தால் மாற்றுக்கருத்துகளுக்கு இடம் இருக்கும் என்கிறார்கள். ஆனால், அதில் ஒரு முரண்பாடு இருக்கிறது’ என்கிறது பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகம். ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ தொகுப்பில் வரும் பல்வேறு கவிதைகளிலும், ழூல் ரோமேனின் ‘க்னோக்’ நாடகத்திலும் வெவ்வேறு விதமான அபத்தங்கள் வெளிப்படுகின்றன.

பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்ப்பதன் அனுகூலங்கள் என்னென்ன?
நீ, நீங்கள் என்ற வித்தியாசம் ஆங்கிலத்தில் இல்லை. தமிழிலும் பிரெஞ்சிலும் இருக்கிறது. ‘அந்நியன்’ நாவலில் முதலில் நீங்கள் என்று வருவது பிற்பாடு நீ என்று ஆவதாக இருக்கும். ஒருவேளை, இதை நாம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருந்தால் இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது சாத்தியமே இல்லை. நேரடி மொழிபெயர்ப்பில் கிடைக்கக்கூடிய அனுகூலத்தைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘அந்நியன்’ நாவலின் முதல் பத்தியில் ‘இதற்கு ஒன்றும் அர்த்தமில்லை’ என்பது ஆங்கில வடிவில் ‘விச் லீவ்ஸ் தி மேட்டர் டவுட்ஃபுல்’ என்று மொழிபெயர்ப்பாகியிருந்தது. வாழ்க்கையின் அர்த்தமின்மை என்ற கருத்தாக்கத்தை முதல் பத்தியிலேயே சுட்டிக்காட்டிய காம்யுவின் தனித்தன்மை இந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் அடிபட்டுப்போய்விடுகிறது. போலவே, ‘அந்நியன்’ நாவலில் ‘அம்மா’, ‘தாயார்’ என்ற இரண்டு சொற்களையும் சூழலைப் பொறுத்து மெர்சோ பயன்படுத்துகிறான். 1946-ல் வெளியான ஸ்டூவர்ட் கில்பெர்ட்டின் முதல் மொழிபெயர்ப்பில் கவனம் பெறாத இந்த அம்சத்தை மேத்யூ ஹார்ட் 1989-ல் வெளியிட்ட தனது மொழிபெயர்ப்பில் திருத்தியிருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பு 1980-ல் முதலில் வெளிவந்தது. நாம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருந்தால் இந்த நுட்பங்களையெல்லாம் தவறவிட்டிருப்போம்.
பிரெஞ்சு சமூக, கலாச்சாரச் சொல்லாடல்களை இன்னொரு கலாச்சாரத்துக்கு மொழிபெயர்க்கையில் நேரும் சிக்கல்களை எப்படிக் கையாள்கிறீர்கள்?
மொழிபெயர்ப்பானது சொற்களை மட்டுமே சார்ந்திருப்பதில்லை என்பதால், பிரெஞ்சு கருத்தாக்கத்துக்கும், பண்பாட்டு அம்சத்துக்கும் தமிழில் சரியான சொல் இல்லை எனும்போது, அங்கிருந்து அந்தச் சொல்லைக் கடன்வாங்கிக்கொள்ளலாம். இதுபோன்ற சமயங்களில் பதிப்பாளர் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மிகவும் உதவிகரமாக இருக்கிறார். நிறைய உரையாடி, குறைவான சுதந்திரத்தோடு ஒரு முடிவுக்கு வருவோம். ஒருவேளை ஏதேனும் வார்த்தைப் பயன்பாட்டால் பொருள் திரிவதாகத் தோன்றினால், அடிக்குறிப்புகள் கொடுத்துவிடுவோம். எனது எல்லா படைப்புகளுக்குமே எடிட்டர் ராமகிருஷ்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்கு பிரெஞ்சு தெரியாது. ஆனால், அதை அவர் ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுப்பார்ப்பார். சந்தேகம் வரும் இடங்களைக் குறித்து வைத்துக் கேள்விகள் கேட்பார். ஒரு வாக்கியம் சரியாக வர வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் வரைகூட உரையாடியிருக்கிறோம். முறையாகக் கலந்தாலோசிப்பதன் மூலம் மொழிபெயர்ப்பின் தன்மை வளம்பெறுகிறது.
உங்களது மொழிபெயர்ப்பு பாணி என்ன? ஒரு படைப்பை மொழிபெயர்க்கத் தொடங்கும்போது உங்களை எப்படித் தயார்படுத்திக்கொள்வீர்கள்?
ஒரு வாக்கியத்தைப் புரிந்துகொள்வதோ, கதையைப் புரிந்துகொள்வதோ மட்டும் இலக்கியம் அல்ல. சொல்லாடல், உள்வாங்கிக்கொள்ளும் மொழியின் அமைப்பு, தொனி இவற்றிலெல்லாம் என் முதன்மையான அக்கறை இருக்கும். வாக்கியங்களை உடைத்தாலும் அதன் தன்மை மாறாது என்றால் மட்டும் உடைத்துக்கொள்வேன். இல்லையென்றால், அதை அப்படியே மொழிபெயர்ப்பதுதான் சரி. நான் பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கிறேன் என்றால் இரண்டு மொழிகளிலும் எனக்கும் புலமை இருக்க வேண்டும். தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்க மிகவும் தயங்குவேன். ஒருவேளை அப்படி மொழிபெயர்க்க நினைத்தால் ஒரு பிரெஞ்சுக்காரரால் அதை சரிபார்க்காமல் வெளியிட மாட்டேன். அப்படி வெளியிட்டால் அது மொழிபெயர்ப்புக்குச் செய்யும் துரோகமாகிவிடும். அதுபோக, மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளை, ஆய்வுகளை வாசித்துக்கொள்வேன். பிரான்ஸில் உள்ள பல்வேறு தரப்பினர்களுடனும் – சாதாரண வங்கி ஊழியரில் தொடங்கி பேராசிரியர்கள் வரைக்கும் – உரையாட முற்படுவேன். அப்படிப் பேசும்போது படைப்புகளை இன்னும் நுட்பமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, முடிந்த அளவுக்கு மூலப் பிரதியின் நுட்பங்கள், உட்பிரதிகள், நுணுக்கங்களைக் கொண்டுவர முடிகிறது. வார்த்தைப் பயன்பாட்டைப் பொறுத்தவரை தற்காலத் தமிழைப் பயன்படுத்துகிறேன்.
அதனால்தான், நீங்கள் மொழிபெயர்த்தவற்றில் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’, ‘மெர்சோ: மறுவிசாரணை’ தவிர, பிற எல்லா படைப்புகளும் உங்களுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவையாக இருக்கின்றன எனலாமா? நீங்கள் க்ளாசிக்ஸ் பக்கமும் போகவில்லை, சமகாலப் படைப்புகள் மீதும் உங்கள் அக்கறை இருக்கவில்லை…
ஒருவகையில் அப்படியும் சொல்லலாம். பெரும்பாலான பிரெஞ்சு கிளாசிக் படைப்புகளில் அவர்களது பண்பாட்டுப் பின்புலம் வெகு ஆழமாக இருக்கிறது. அன்றைய அவர்களது அன்றாடமும் பழக்கவழக்கங்களும் பிரெஞ்சு சமூகத்துக்கே இப்போது அந்நியமாகிவிட்டன. அதைத் தமிழில் மொழிபெயர்த்தால் நிறைய அடிக்குறிப்புகள் கொடுக்க வேண்டியிருக்கும். அவை வாசிப்புக்கு சிரமம் தரக்கூடும். ‘பொன்னியின் செல்வன்’ போன்ற நாவல்களின் பண்பாட்டு அம்சங்களை இன்னொரு மொழியில் முழுமையாகக் கொண்டுவர அடிக்குறிப்புகள் தேவை. அதனால்தான், கிளாசிக் படைப்புகளை மொழிபெயர்க்கவில்லை.
‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ நாவலை மொழிபெயர்க்கும்போது பியரெத் ஃப்லுசியோ சமகாலத்தவர் என்பதால், அவரிடம் சில சந்தேகங்கள் கேட்க முடிந்தது. அவர் சில இடங்களில் தமிழுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளும்படி சொன்னார். அவர் அனுமதி கொடுத்தும் அதை நான் செய்ய விரும்பவில்லை. நான் வெறும் கூரியர்தான். அங்கிருப்பதைக் கொண்டுவந்து இங்கு சேர்ப்பவன். மூலப் பிரதியில் கைவைப்பதற்கு மொழிபெயர்ப்பாளனுக்கு எந்த உரிமையும் இல்லை.
தற்காலத் தமிழைப் பயன்படுத்துவதாகச் சொன்னீர்கள். ‘அமர்ந்தார்’ என்றுகூட நீங்கள் எழுதுவதில்லை. ‘உட்கார்ந்தார்’ என்றே பயன்படுத்துகிறீர்கள். எல்லா சொற்களும் நேரடியாக இருக்கின்றன…
எது மொழிக்கு இயல்பாக இருக்கிறது, எது இயல்பாக இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இலக்கியம் என்றில்லை; சினிமா, ஊடகம் என எல்லா இடங்களிலும் பொருத்தமில்லாமல் பயன்படுத்துகிறோம். அவையெல்லாம் நிச்சயம் கலையப்பட வேண்டியவை. ‘டவுண் பஸ்’ என்றொரு படம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இயக்குநரின் பெயரைப் போட்டு இயக்குநரின் ‘டவுண் பஸ்’ என்று எப்படி எழுத முடியும்? ‘இளம் வாலிபர் சுட்டுக் கொலை’ என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். ‘இளம் வாலிபர் சுடப்பட்டுக் கொலை’ என்பதுதான் சரி. ‘இளம் பெண் தூக்கிலிட்டு சாவு’ என்று எழுதுவார்கள். ‘இளம் பெண் தூக்கிட்டு சாவு’ என்று இன்னும் ஒருபடி மேலே போவார்கள். இரண்டுமே தவறு இல்லையா? சரியான சொற்களை, சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். இன்னொரு பிடிக்காத விஷயம் என்னவென்றால், தேவையில்லாமல் பெரிய பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது. ‘ஒரு நாள் விடுப்பு எடுப்பதை மறந்துவிட்டு, அந்தக் காரியம் செய்தேன்’ என்று எழுதுவதற்குப் பதிலாக ‘ஒரு நாள் விடுப்பு எடுப்பதை தியாகம் செய்துவிட்டு அந்தக் காரியம் செய்தேன்’ என்று எழுதுவார்கள். பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் சுருங்கிப்போய்விடும். பிறகு, உண்மையிலேயே பெரிய காரியங்களுக்காக அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அது சாதாரணமாகத் தோன்றிவிடும்.

காம்யுவை ஒரு நாவலாசிரியராகவும் நாடகாசிரியராகவும் அறிந்துவைத்திருப்பவர்கள் ஏராளம். ஆனால், அவரது பத்திரிகையாளர் முகம் அவ்வளவு பிரசித்திபெறவில்லை. பத்திரிகையாளர் காம்யுவை எவ்வளவு முக்கியமானதாகப் பார்க்கிறீர்கள்?
காம்யுவின் பத்திரிகையாளர் முகமானது மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. ஏனென்றால், இரண்டாம் உலகப் போரின்போது அவர் போராட்டத்தில் இறங்கவில்லை, துப்பாக்கி எடுத்துக்கொண்டு செல்லவில்லை. அவரது உடல்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை. காசநோய் பாதிப்பு, இரண்டு நுரையீரல் அறுவைச்சிகிச்சையின் காரணமாக ராணுவத்தில் அவரைச் சேர்க்கவில்லை. எனவே, கொள்கைரீதியான ஒரு ரகசிய இதழ் நடத்திக்கொண்டிருந்தார். ‘ஜெர்மானிய நண்பனுக்கு நான் எழுதும் திறந்த கடிதம்’ என அதில் எழுதினார். ‘சர்வாதிகார, அராஜக எண்ணம் கொண்ட சில தலைவர்கள் இருப்பதால் ஒரு நாட்டைச் சேர்ந்த அத்தனை பேரையும் என்னால் குற்றம்சொல்ல முடியாது. எனக்கும் ஜெர்மானிய நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நல்ல எண்ணம் கொண்ட நீங்களெல்லாம் சேர்ந்து உங்கள் அரசாங்கத்தைத் திருத்த வேண்டும்’ என்று கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஒரு சமூகத்தில் சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் காம்யுவின் முதன்மையான குறிக்கோளாக இருந்திருக்கிறது. அதில் இந்தப் பத்திரிகையாளர் பக்கமும் தவிர்க்க முடியாதது. ‘அநீதியை எதிர்க்க வேண்டும், ஆனால் வன்முறையால் அல்ல’ என்று காம்யு வலியுறுத்தினார். காந்தியின் தாக்கம் அவரிடம் காணப்பட்டது.
அறிவுஜீவிகளுக்கிடையேயான 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் போர் என்று சார்த்ர், காம்யுவுக்கு இடையேயான விவாதம் பேசப்பட்டது. நீங்கள் இதில் யார் பக்கம் நிற்பீர்கள்?
கம்யூனிஸத்திலிருந்து காம்யு வெளியேறியதுதான் அவர்கள் இருவருக்குமான முரண்பாட்டின் தொடக்கம். ஸ்டாலினின் ஒடுக்குமுறையை காம்யு விமர்சிக்கிறார். ‘ஒரு சமூகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால், புரட்சிகரமான செயல்பாடுகளால்தான் சாத்தியம். அந்தச் சமயங்களில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். அதற்காக நாம் இதை விட்டுக்கொடுக்க முடியாது. ஸ்டாலின் இல்லையென்றால் பழையபடிதானே சமூகம் செல்லும்’ என்பது சார்த்ரின் வாதம். காம்யுவைவிட சார்த்ர் ஆழமான தத்துவவாதியாக இருந்தாலும், அவரது அரசியல்ரீதியான கருத்துகள் பலவும் பிற்காலத்தில் அடிபட்டுப்போய்விட்டன. அதை அவரே ஒத்துக்கொள்ளவும் செய்தார். காரணம் என்னவென்றால் சித்தாந்தரீதியில், தத்துவக் கோட்பாட்டுரீதியில் சார்த்ர் வாழ்க்கையைப் பார்த்தார். காம்யுவோ மனிதாபிமானத்தோடு சேர்த்துப் பார்க்கிறார். அதனால்தான், காம்யுவின் படைப்புகள் இலக்கியமாகிவிடுகின்றன; சார்த்ரின் படைப்புகள் கோட்பாடுகளாகின்றன. நான் காம்யுவின் பக்கம்தான்.
காம்யுவின் ‘அந்நியன்’ குறித்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன என்றாலும், இன்னொரு நாவலாக அதை அணுகியிருந்தது காமெல் தாவுத்தின் ‘மெர்சோ: மறுவிசாரணை’. காம்யுவை மொழிபெயர்த்த நீங்கள் இந்த நாவலையும் மொழிபெயர்த்தது சுவாரஸ்யமானது. காம்யு இருந்திருந்தால் இந்நாவலை எப்படி எதிர்கொண்டிருந்திருப்பார்?
அப்படி யோசித்துப்பார்த்ததில்லை. ஆனால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார். காமெல் தாவுத்தான் காம்யுவைவிட காம்யுவை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பவர் என்று நினைக்கிறேன். மிகுந்த ஆர்வத்தோடு ‘மெர்சோ: மறுவிசாரணை’ நாவலை மொழிபெயர்த்தேன். ஒவ்வொரு பக்கத்திலும் காம்யுவினுடைய எழுத்தின் பிரதிபலிப்போ எதிரொலியோ மேற்கோளோ இருந்துகொண்டே இருக்கும். காமெல் தாவுத் பிறப்பால் ஒரு அரேபியர், அவரது தாய்மொழி அல்ஜீரியர், அவர் பிரெஞ்சு கற்றுக்கொண்டு, காம்யுவை உள்வாங்கிக்கொண்டு, பிரெஞ்சில் நாவல் எழுதுகிறார். அவரது பிரெஞ்சு அவ்வளவு அழகாக இருக்கிறது. நம்ப முடியாத அளவுக்கு நன்றாக இருக்கிறது. அது பெரிய அற்புதமாக எனக்குப் படுகிறது.
இந்த உரையாடலில் காம்யுவின் பெயரை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உச்சரித்துக்கொண்டிருக்கிறீர்கள். ‘ப்ளேக்’, ‘ஃபால்’ நாவல் மீது நீங்கள் கொண்டிருக்கும் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஏன் இந்த நாவல்களை நீங்கள் மொழிபெயர்க்கவில்லை?
காம்யுவுக்குப் பிறகு வேறு சில பிரெஞ்சு எழுத்தாளர்கள், திரைப்படங்கள் குறித்து மொழிபெயர்க்க முடிவெடுத்தேன். அதற்குள் காம்யுவின் சில மொழிபெயர்ப்புகள் தமிழில் வெளிவந்தன. பிறகு,  ‘முதல் மனிதன்’ நாவலை மொழிபெயர்த்தேன். ‘தி பிளேக்’ நாவலை மொழிபெயர்க்க ஆசைப்படுகிறேன் என்றாலும், ‘தி ஃபால்’ நாவலை மொழிபெயர்க்க ரொம்பவும் விருப்பம். பார்க்கலாம்.
காம்யுவின் ‘அந்நியன்’ நாவலை பிரெஞ்சு தேசத்தில் நாவலாக ஏற்றுக்கொள்வதில்லை. பிரெஞ்சு இலக்கியத்தில் நாவல் வடிவத்தை என்னவாக வரையறுக்கிறார்கள்?
நாவலுக்கென்று நிகழக்கூடிய களம் ஒன்று இருக்க வேண்டும். காலம் வேண்டும். களம், காலம், பாத்திரங்கள் இவற்றுக்கிடையே ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். அவர்களுக்கு இடையே ஒரு இடையூடல் இருக்க வேண்டும். இப்படி சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறார்கள். ‘அந்நியன்’ நாவலில் மெர்சோ கதைசொல்வதுபோல இருக்கிறது. அவன் எப்போது அந்த நாவலை எழுதினான்? சாவதற்கு முந்தைய நாள் சொல்கிறானா? அப்படியென்றால் ‘இன்று அம்மா இறந்துவிட்டாள்’ என்கிறானே, அது என்றைக்கு? ‘இன்று அம்மா இறந்துவிட்டாள்’ என்பது டைரிக் குறிப்பு மாதிரி இருக்கிறது. ‘நான் இங்கே வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது’ என்கிறான். கடைசியில் காலம் எதுவும் இல்லை. நேர ஒற்றுமை அந்நாவலில் இல்லை. காலத்துக்கும் மெர்சோவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதும் கிடையாது. எனவே, அதை ‘ரெஸி’ (narrative) என்று அழைக்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகிலேயே ‘அந்நியன்’ அதன் கட்டமைப்பிலும் தனித்து நிற்கிறது. பிற்காலத்தில் வெளிப்பட்ட சில சோதனை முயற்சிகளுக்கு முன்னோடியாகவும் இருக்கிறது.
பிரெஞ்சு தத்துவங்களுக்கும் நமது தத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடுகளாக எதைப் பார்க்கிறீர்கள்?
ஃபிலாஸபி என்பதற்குத் தமிழில் வார்த்தை கிடையாது. தத்துவம் என்ற வார்த்தையை நான் சரியானதாகக் கருதவில்லை. விதியையும் தத்துவம் என்கிறோம் (ஆர்க்கமிடிஸ் தத்துவம்). சரியான விளக்கம் எனக்குக் கிடைக்கவில்லை. சிலர் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தது என்கிறார்கள். ஃபிலாஸபி எனும் பிரெஞ்சு வார்த்தையில் ஸோபி என்பது விஸ்டம், ஃபிலோ என்பது லவ் – ‘லவ் ஆஃப் விஸ்டம்’ என்பது ஃபிலாஸபி. மேலை நாட்டுத் தத்துவத்தின் அடிப்படை மனிதன். நம்முடையது பிரபஞ்சம். அங்கே கிறிஸ்துவத் தத்துவம், அறிவுஜீவித் தத்துவம் என்று தனித்தனியாக இருக்கிறது. நம்மிடையே கடவுளும் தத்துவம் ஒன்றுகலந்துவிட்டது. ஆதி சங்கரரிடம் மதத்தைத் தாண்டிய ஒரு தத்துவம் இருக்கிறது. ஆனால், அவரை இந்து மதத்தோடு மட்டும் தொடர்புப்படுத்திப் பார்ப்பதால் அதன் முழு வீச்சும் தெரிவதில்லை. சித்தர்களையும் திருமூலரையும்கூட ஒரு குறிப்பிட்ட மதம், சைவம், வைணவம் என்று அதற்குள் அடக்க முடியாது. மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள உறவு குறித்து அவர்கள் பேசுகிறார்கள். பிரெஞ்சு தத்துவத்தை அங்கே அரசியலுக்குள் கொண்டுவரும் போக்கும் உண்டு. ‘அரசியலில் ஒழுக்க நியதியைக் கொண்டுவர முடியாது; ஆனால், ஒழுக்க நியதியால்தான் அரசியலைச் சரியாக்க முடியும்’ என்கிறார் காம்யு. அரசியல் என்பது நேரடியாகவே மறைமுகமாகவோ அதிகாரத்தின் பின்னால் இருக்கிறது. அந்த அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொள்வதற்கு எல்லோருக்குமே ஆசை இருக்கிறது. ‘தத்துவ சிந்தனை இலக்கியத்தில் இழையோட வேண்டும்’ என்றார் காம்யு. அது மனிதகுலத்தை மேம்படுத்த வேண்டும், அடிமைப்படுத்தக் கூடாது என்பது அவரது கருத்து.
1980-90களில் தமிழ்ச் சூழலில் பிரெஞ்சு அலை வீசியது. அதற்கு முன்பாக ரஷ்ய அலை, 90-களுக்குப் பிறகாக லத்தீன் அமெரிக்க அலை என்று சூழல் மாறுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எனக்கு இந்த ‘அலை’ என்று நம் சூழலில் சொல்வதன் மீது உடன்பாடு இல்லை. அயல் இலக்கியத்தின் சில பண்புகளை உள்வாங்கிக்கொண்டு, அதைத் தமிழில் பிரதி எடுப்பதையோ அல்லது அதில் ஊக்கம் பெற்று ஒரு படைப்பை உருவாக்குவதையோ என்னால் ‘அலை’ என்று சொல்ல முடியாது. நமது மொழியில், இலக்கியத்தில் தீவிரமாகப் பிரதிபலித்ததாக நான் நினைக்கவில்லை. அப்படியொரு அலை வீசும் அளவுக்கு இங்கே தீவிரமான வாசிப்பு நிகழவில்லை.
மொழிபெயர்ப்பு என்பதைப் படைப்புச் செயல்பாடாக நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அப்படி படைப்புச் செயல்பாடாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் ஏன் உங்களது பெயர் – மொழிபெயர்ப்பாளரின் பெயர் – புத்தக அட்டையில் இடம்பெறுவதில்லை?
ஓரளவுக்குப் படைப்புச் செயல்பாடுதான். ஆனால், அதில் சில தடைகளும் தயக்கங்களும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பாளர் தன்னைக் காண்பித்துக்கொள்ளக் கூடாது. எனது புத்தகத்தை நான்தான் மொழிபெயர்த்தேன் என்பது தெரியாமல் இருந்தால் நல்லது.
அது சாத்தியமா? அப்படி நீங்கள் ஒளிந்துகொள்ள முடியாது இல்லையா? நீங்கள் செய்த அதே மொழிபெயர்ப்பை இன்னொருவர் செய்தால் அது வேறொன்றாகத்தானே இருக்க முடியும்?
சாத்தியம் இல்லைதான். ஆனாலும், எனக்கென்னவோ என்னைக் காட்டிக்கொள்வதில் விருப்பம் இருப்பதில்லை. அதனால்தான், அன்றிலிருந்து இன்று வரை முன்னுரை எழுதுவதில்லை. பின்னுரைதான் எழுதுகிறேன். புத்தகத்தைத் திறந்தவுடன் ‘இன்று அம்மா இறந்துவிட்டாள்’ என்ற முதல் வாக்கியம் முகத்தில் அறைய வேண்டும். அது உங்களைக் கூட்டிச்செல்ல வேண்டும். அது பேத்தலாகவும் இருக்கலாம், பிரமாதமாகவும் இருக்கலாம். அது வாசகரைப் பொறுத்தது. நான் சொல்ல விரும்புவதை ஓரளவு பின்னுரையில் சொல்கிறேன். அவ்வளவே.

பார்வைகள்

0.

பு.வ. மணிக்கண்ணனும் ஆல்பெர் காம்யூவும்


சுகுமாரனின் கட்டுரை


1.

அமெரிக்காவில் ஆல்பெர் காம்யு- ஸெர்ஜ் தூப்ரோஸ்கி

காம்யு விமர்கரால் பிரெஞ்சு மொழியில் காம்யு நினைவாக எழுதப்பட்ட கட்டுரை இது. காம்யு என்ற புத்தகத்திற்காக ஜெர்மேன் ப்ரீ என்பவரால் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டது.
தமிழில் : தேனுக


தான் பிறந்த நாடான அல்ஜீரியாவில், காம்யு ஒரு தீர்க்கதரிசியாகக் கருதப்படும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார். எழுத்தாளர் என்று மக்களிடம் புகழ் பெற்றதோ பிரான்சு நாட்டில்தான். பிரான்சைவிட, காம்யு ஒரு தலைசிறந்த அமெரிக்க எழுத்தாளராகவே கருதப்பட்டார். காம்யு உருவாக்கிய கதாபாத்திரங்கள், படைப்புகள் பற்றிய இதுவரை வெளிவராத கருத்துக்கள் அல்லது எதிர்ப்புகள் அட்லாண்டிக் பகுதிக்கு இப்பால் ஏனோ இன்னும் தெரியப்படாமலேயே இருந்தது.
அமெரிக்காவில் காம்யுவின் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு மலிவு விலையில் பேப்பர்பேக் பிரதிகளில் எங்கும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் காம்யுவின் படைப்புகளின் மூலப்பிரதிகளைத் தேடி மாணவர்கள் ஒருவித வேட்கையுடன் அலைந்தவண்ணம் இருந்தனர்.

அமெரிக்காவில் காம்யுவைப் பற்றிய விரிவுரைகள், வகுப்புகள், புத்தகங்கள், கட்டுரைகள் உடனுக்குடன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கவே செய்தன. ஒரு பல்கலைக்கழக எல்லைக்குள்தான் காம்யு புகழ் பெற்றிருந்தார் என்றும் குறைத்துக் கூறிவிட முடியாது. அதனையும் மீறி பண்பாட்டில் ஆர்வம் கொண்ட கூட்டத்திலும், `சூழ்நிலை' யிலும் கூட இவர் பிரபலமடைந்தார்.
அமெரிக்காவின் மற்ற எழுத்தாளர்களும் தம் காலத்து கருத்துகளின் ஏகோபித்த கவனத்தைக் காம்யுவின் வழிக்கே திருப்பிவிட முனைந்தனர். இதுதவிர காம்யுவிற்கென்று சிறப்பாக அமையப் பெற்றது அமெரிக்க மக்கள் இவர் மீது பொழிந்த உளமார்ந்த அன்புதான்.

அமெரிக்காவில் சிந்தனை வயப்பட்ட ஒவ்வொரு மனிதனையும், காம்யுவின் மரணம் ஒரு சொந்த இழப்பாகவே எண்ண வைத்தது. காம்யு இறந்தவுடன் பத்திரிகைகள், தினசரிகளில் வெளிவந்த தலையங்கத்தை வைத்தோ, மரண அறிவிப்புகளை வைத்தோ நான் இதைச் சொல்லவில்லை. பத்திரிகை ஆசிரியர் தொழில், இலக்கியம் முதலியவற்றோடு சம்மந்தமில்லாத பலரும் அழுத கண்களோடு பேராசிரியர்களைக் காண வந்ததை நினைத்தும், காம்யுவின் மரணம் அறிவிக்கப்பட்டவுடன் பல நாட்கள் சாப்பிடாமலேயே இருந்த எனக்குப் பழக்கமான பல மாணவர்களின் உறுதிப்பாட்டினை நினைத்தே நான் இவ்வாறு சொல்கிறேன்.
அமெரிக்க நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், சாதாரணமானவர்கள், அசாதாரணமானவர்கள் ஆகிய இரு பிரிவினரின் பேனா முனைகளிலிருந்தும் காம்யுவைப் பற்றிய கவிதைகள் பிறந்தவண்ணம் இருந்தன. தெய்வப் பிரார்த்தனைக் கூட்டங்கள் அல்லது கண்ணீர்க் கவிதை அஞ்சலிகளில் மட்டுமல்ல, அன்றாட மனித பிதற்றல்களிலும்கூட அமெரிக்கக் கண்டம் முழுமைக்கும் காம்யுவின் மரணம் பற்றிய துன்ப உணர்வுகள் பீறிட்டெழுந்த வண்ணம் இருந்தன.
அமெரிக்காவில் ஆல்பெர் காம்ய
ஸெர்ஜ் தூப்ரோஸ்கி

அமெரிக்கர்கள் இலக்கியத்தை ஓர் இரண்டாம்பட்சச் செயலாகக் கருதும் இயல்பு கொண்டவர்கள். கலைகளில் சொற்பத் தொடர்பு கொண்டவர்கள் இவர்கள். இந்த அமெரிக்கர்களிடையே வேறு எந்த அன்னிய எழுத்தாளரும் இப்படிப்பட்ட உணர்வுகளை உண்மையில் எழுப்பியிருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஹேமிங்வேயின் விமான விபத்துச் சம்பவம் கூட யாருடைய கண்களிலிருந்தும் இவ்வளவு கண்ணீரைக் கொண்டு வந்து சேர்க்கவில்லை. ஃபாக்னரின் இறப்பில் கூட ஒரு பேஸ்பால் ஆட்டக்காரனின் பணி ஓய்வு நாளன்று எழும் வருத்தமே காணப்பட்டது. ஆனால் காம்யுவைப் பற்றிய அமெரிக்க மக்களின் தனிப்பட்ட இறுக்கமான உணர்வுகளையும், பிணைப்புகளையும் நாம் விவரிக்கவே இயலாது.
அமெரிக்க இலக்கியம் காத்திருந்து ஏங்கியும் கிடைக்கப் பெறாத ஓர் எழுத்தாளராக காம்யு விளங்கினார். ஃபாக்னர், டாஸ்பஸாஸ், ஹேமிங்வே முதலானோரின் தலைமுறைகள், கடந்த காலத்திற்கும் சரித்திரத்திற்கும் சொந்தமாக்கப்பட்ட நேரம் அது. அவர்களைத் தொடர்ந்து ஒரு சூன்யம் எற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இச்சூழ்நிலையிலும் திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் பலர் நூற்றுக்கணக்கில் அப்போது இருக்கத்தான் செய்தனர். இருப்பினும், அக்காலப் பிரச்னைகளை ஆழமாகச் சிந்தித்த எழுத்தாளர்கள் அமெரிக்காவில் யாரும் இல்லை என்றே கூறிவிடலாம்.
மகிழ்ச்சியால் திளைக்கும் மக்களுக்கு சரித்திரம் ஒன்றும் கைவரப் பெறவில்லை. அதுபோல் முன்னேறும் மக்களுக்கு இலக்கியமும் கிட்டுவதாயில்லை. சமூகவியலாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள் முதலானோர் கூர்ந்து கவனித்து வரும் இந்த இடைவெளியை நிரப்பும் ஆன்ம ஒளியோ, கலை வெளிப்பாடோ இன்னும் ஏன் அமெரிக்காவில் நிகழவே இல்லை என்ற வருத்தம் நிலவியது.
காம்யுவின் மனதோ நியதிவயப்பட்டு உலகளாவித் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் இயல்பினைக் கொண்டது. மனித வாழ்வியலுக்கு அர்த்தங்கள் தருவதன் மூலம் தேசியம் சார்ந்திராத அவனது படிமத்தை உருவாக்குவது காம்யுவுக்குத் தமது நாவல்களில் சாத்தியமாயிருந்தது. இதற்கு மாறுதலாக, போருக்கு முன்னும் பின்னுமுள்ள பிரான்சின் ஆழ்மனதில் வேர்விட்ட அவரது அறிவார்ந்த அணுகுமுறை அமெரிக்கர்களை வெறுப்பூட்டியது அல்லது கவர்ந்தது எனலாம். பொதுவாக சார்த்தர் அமெரிக்கர்களுக்கு அன்னியராகவே தென்பட்டார். காம்யுவோ ஆங்லோ சாக்ஸன் மனப்பான்மை கொண்ட அமெரிக்கர்களுக்குத் தேவையான நியதியைத் தன் இலக்கியம் வாயிலாக வழங்கினார். இந்நியதி வளர்வதற்கான வளமண் அமெரிக்காவில் இருக்கத்தான் செய்தது. வாழ்வை முழுமையாக ஏற்று அதனுடன் ஸ்பரிசிக்கத் தோன்றும் `சூர்ய மகிழ்வு' முதலான காம்யுவின் சிந்தனைத் தெளிவுகள் அமெரிக்கர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது என்று நான் சொல்லவில்லை.
ஹேமிங்வேயைப் போல், மெல்வில்லைப் போல் உலகினை எதிர்த்து நடக்கும் மனிதப் போராட்டம், காம்யுவின் பார்வைகள், `முதியவரும் கடலும்' எனும் நூலுக்குரிய பார்வைகள் முதலானவற்றை அமெரிக்கர்கள் மிகவும் ரசித்தனர். அமெரிக்காவின் ஆன்ம உணர்வுகளை வலியுறுத்துகின்ற மனித நியதிகளை மென்மேலும் விளக்கித் தொடர்ந்தார் காம்யு.
அமெரிக்காவில் ஆல்பெர் காம்ய
ஸெர்ஜ் தூப்ரோஸ்கி

மேலும், காம்யுவின் இழப்பைத் தொடர்ந்து வெளிப்பட்ட துன்ப உணர்வுகள் அமெரிக்காவின் இதயத்தைத் தொட்டு விட்டது எனலாம். மனிதனுக்கான சொர்க்கத்தை எதிர்த்த `பிளேக்'கின் ஆசிரியரான காம்யுவை சார்த்தர் எதிர்த்தார். இது நாசிச எதிர்ப்புக் கொள்கையை செயலாக்கியது. மனிதாபிமானம் வெற்றி கொள்வதற்காக நடத்தப்படும் போராட்டத்தை இது தடைபடுத்துவதாகவே சார்த்தர் உணர்ந்தார். தன் போக்கில் இயற்கையான வழித்தடங்களை ஏற்படுத்திக் கொண்டு அமெரிக்காவின் உள்ளார்த்தத்தில் பிளேக்கின் நியதி பரவியிருந்தது.
அமெரிக்கச் சமூகத்தில் வகுப்பு மோதல்கள் இல்லை. சமூக அமைப்பை இது ஒருபோதும் சந்தேகத்திற்குள்ளாக்கியதும் இல்லை. கூட்டு அமைப்புகள் உள் பிணக்குகளால் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளவுமில்லை. அன்புள்ளங்கொண்ட மனிதர்கள் தங்களை எதிர்கொள்ளும் தீமையின் முன்பாக ஒன்றாகச் சேர்ந்தனர். முனிசிபல் ஊழல்களும் கொள்ளைகளும் இருந்தாலும் நீக்ரோக்களின் நிலை உயர்த்தப்பட வேண்டிய ஒன்றே என்று எல்லோரும் உணர்ந்திருந்தனர். புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் போக்கடிக்கப் படமாலேயே இருந்தன. பல உருவங்களில் இது பற்றிய போராட்டங்கள் உலகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
காம்யுவைப் பற்றிய புகழாஞ்சலிகளில் அமெரிக்கப் பெண்கவி ஒருத்தி அவரை ஒரு மருத்துவரோடு ஒப்பிட்டது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். காம்யுவின் பிரதிநிதியான ரியா என்பவர் ஒரு மருத்துவர் என்பதால் இவ்வாறு அவள் புகழவில்லை.

காம்யுவிடம் நாம் காணும் மருத்துவ குணம் ஒவ்வொருவரும் உணரப்பட வேண்டிய ஒன்றாகும். தவிர்க்க முடியாத தோல்விகளை மென்மேலும் தாங்கிக் கொள்ளும் தைரியம், மனிதன் மீதுள்ள வாஞ்சை, அவன் மீதுள்ள நம்பிக்கை, மனிதனை நியதி சார்ந்து இயக்குவதில் அவருக்குள்ள அக்கறை - இவற்றில்தான் காம்யுவின் நியதி, அரசியலிலிருந்து தனித்து நிற்கிறது.
காம்யுவின் மனிதாபிமானம் அமெரிக்க குடியரசின் ஆன்ம முகமாகும். மனிதப் போராட்டம் ஒரு தற்காலிகமான வெற்றியோடு முடிந்துவிடுமேயானால், அதனால் சமூகத்தில் எழும் விளைவுகளுக்கு உயிரும் உடலும் கொடுக்க அமெரிக்க எழுத்தாளர்கள் காத்திருந்தனர். ஹேமிங்வேயும் ஃபாக்னரும் அமைதியாய் இருந்தவர்கள் பற்றிப் பேசினார்கள். காம்யுவும் இவ்வழியைத் தொடர்ந்தார். நாட்டிற்கும் எழுத்தாளர்களுக்கும் இருந்த ஒரு தொடர்பற்ற நிலைக்குக் காரணம் நமது தேசத்தவர்களுக்கு எதிரான எண்ணங்களை எழுத்தாளர்கள் வெளிப்படுத்தினார்கள் என்பதல்ல. மாறாக, தேசத்தவர்கள் தாம் ஒளிந்து கொள்ள நினைக்கும் எண்ணங்களை எழுத்தாளர்கள் வெளிப்படுத்தவே செய்தனர். காம்யுவின் படைப்புகள் இவற்றை உறுதிப்படுத்தின.
அமெரிக்காவில் ஆல்பெர் காம்ய
ஸெர்ஜ் தூப்ரோஸ்கி

அமெரிக்காவில் மதம் என்பது ஒவ்வொரு பொது நிகழ்ச்சியிலும் தவிர்க்க இயலாததாய் இருந்தது. நற்பண்பின் அடையாளமாகவும் இருந்தது. இவ்வளவில் எழுத்தாளர்களில் பலபேர் கடவுளைப் பற்றிக் கவலை கொள்ளாதவர்களாகவும், நாஸ்திகர்களாகவும் இருந்தது ஒரு முரண்பாடே. எல்லா இடங்களிலும் காணப்படும் விளம்பரப் பலகைகளிலும், இயக்கங்களிலும் எவ்வகைச் சூழ்நிலையிலும் பக்தி ரசத்தை ஒவ்வொருவரும் சந்தித்த போதிலும் அமெரிக்க நாடு உலகத்தில் மிகக் குறைந்தபட்ச மதச் சார்புடைய நாடாகவே விளங்குகிறது. இதுவே அதன் வலிமைக்குக் காரணம்.
அமெரிக்கர்கள் உலகை நோக்கியவர்கள். மனிதனுக்கான உலகை ஒரு படைப்புத் தளமாகவும் ஆக்கியவர்கள். இவர்களது நாஸ்திக மனப்பான்மைதான் இதற்கான காரணமாகும். பக்தி ஓர் ஏமாற்று வேலையாகும் நேரங்களில் மதச் சார்பின்மை நியதிகளை பட்டவர்த்தனமாக்குவதற்கென்றே அமெரிக்காவில் ஒரு சிலர் இருக்கத்தான் செய்தனர். அநாச்சாரமாய் தோன்றும் இவ்வுண்மைகளை வெளியிடுபவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கித்தான் ஆக வேண்டும்.
பிரான்சின் குடிமகனாய் இருந்து கொண்டே அமெரிக்காவில் மற்றவர்கள் கூறிட நடுங்கியதை காம்யு தைரியமாக எடுத்துக் கூறினார். நல்லவேளை எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

- - - - - - - - - - - - - - - - - - - -

ஸெர்ஜ் தூப்ரோஸ்கி என்ற காம்யு விமர்கரால் பிரெஞ்சு மொழியில் காம்யு நினைவாக எழுதப்பட்ட கட்டுரை இது. காம்யு என்ற புத்தகத்திற்காக ஜெர்மேன் ப்ரீ என்பவரால் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டது.
நன்றி : ஸெர்ஜ் தூப்ரோஸ்கி
தமிழில் : தேனுக
தொகுப்பு : மதிநிலையம




2. இரு நாவல்கள் இரு அந்நியர்கள்
எஸ்.வி.ராஜதுரை
உலகப் புகழ்பெற்ற ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ நாவலின் தொடக்க வரி ‘அம்மா இன்று இறந்துவிட்டாள்’ என்றால், காமெல் தாவுத் எழுதிய ‘மெர்சோ: மறுவிசாரணை’ நாவலின் தொடக்க வரியோ ‘அம்மா இன்னும் உயிரோடு இருக்கிறாள்’!
ஒரு செவ்வியல் படைப்பை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, அதன் கதையைப் புதிய முறையில் எடுத்துரைப்பதோ, அதன் கதாபாத்திரங்களில் வேறொன்றைத் தேர்ந்தெடுத்து அதன் கண்ணோட்டத்திலிருந்து கதையைக் கூறுவதோ பல புனைகதையாசிரியர்கள் கையாள்கிற உத்திகள். ஆனால், தாவுதின் நாவல் இவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. இது, ‘அந்நியன்’ நாவலின் எதிரொலி; அதனுடன் நடத்தப்படும் தீவிரமான உரையாடல்.
சரி, தாவுதின் நாவலுக்குள் போவோம். காம்யுவின் நாவலில் அதன் நாயகன் மெர்சோவால் கொல்லப்படுகிறான் அல்லவா, அடையாளமற்ற ஓர் ‘அராபியன்’. அவனுக்கு அடையாளம் தந்து அவனுக்கான அரசியல்களைப் பேசும் நாவல் இது.
இந்த நாவலின் நாயகனாக வரும் ஹரூன், காம்யுவின் ‘அந்நியன்’ நாவலைச் சுருக்கமாகக் கூறும் இந்தப் பகுதி தாவுத் நாவலின் மையத்தைச் சொல்லிவிடும். ஹரூன் கூறுகிறான்: “ஆளற்ற கடற்கரையில் படுத்திருக்கும் ஒரு அராபியனை பிரெஞ்சுக்காரன் ஒருவன் கொன்றுவிடுகிறான். அப்போது பகல் இரண்டு மணி, 1942. ஐந்து துப்பாக்கிக் குண்டு வெடிகளும் அதைத் தொடர்ந்து ஒரு விசாரணையும். கொலைசெய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது – தன் தாயாரின் சவ அடக்கத்தில் சரிவர நடந்துகொள்ளாததாலும், அவளைப் பற்றி மிக அலட்சியமான தொனியில் பேசியதாலும். பார்க்கப்போனால், கொலைக்குக் காரணம் வெயில், வெறும் சோம்பேறித்தனமும்தான். வேசி ஒருத்தியிடம் கோபத்தில் இருந்த ரேமோன் என்ற காட்டிக்கொடுப்பவன் கேட்டுக்கொண்டான் என்பதற்காக உன்னுடைய கதாநாயகன் மிரட்டல் கடிதம் ஒன்று எழுதுகிறான். இந்த விவகாரம் மோசமடைந்து ஒரு கொலையில் முடிகிறது. அந்த வேசிக்காக அராபியன் பழிவாங்கப்போகிறான் என்று கொலையாளி எண்ணியதோ, அந்த அராபியன் திமிர்பிடித்து பகல் உறக்கம்போடத் துணிந்தான் என்பதோதான் கொலைக்குக் காரணம். அதுதான் அப்பட்டமான உண்மை. மீதியெல்லாம் நகாசு வேலை. உன்னுடைய எழுத்தாளனின் மேதமை. அதன் பிறகு, அந்த அராபியனைப் பற்றியோ, அவன் குடும்பத்தைப் பற்றியோ யாரும் கவலைப்படவில்லை. அந்தக் கொலையாளி சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தான் எப்படி இறைவனையும், பாதிரியாரையும், அபத்தத்தையும் எதிர்கொண்டான் என்று விவரித்து அதன் மூலம் பிரபலமடையும் புத்தகம் ஒன்றை எழுதுகிறான். இந்தப் புத்தகத்தை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நியாயப்படுத்த முடியவில்லை. கொலைக் குற்றத்தைப் பற்றிய கதை இது. ஆனால், கதையின் இரண்டாவது முக்கியப் பாத்திரம் அராபியன். ஆனால், அவனுக்கென ஒரு பெயரோ, முகமோ, சொற்களோ இல்லை.”
எனினும், ஹரூனால் காம்யுவின் அற்புதமான மொழிநடையை சிலாகிக்காமல் இருக்க முடிவதில்லை: “...இரக்கமில்லாமல் செதுக்கப்பட்ட பாறைகளைப் போன்ற சொற்கள். கிரேக்க ஞானி யூக்லிடின் வடிவக் கணிதத்தைப் போல அலங்காரங்கள் எதுவுமற்ற மொழி. இவற்றின் கணத்தை அவன் அடைந்துவிட்டிருந்தான். பார்க்கப்போனால், முடிவில் ஒரு உன்னத மொழிநடை என்பது அதுதான்; உன் வாழ்க்கை உன் மீது சுமத்தும் இறுதிக் கணங்களைப் பற்றித் துறவுநிலைத் துல்லியத்துடன் பேசுவது… தன் சுவாசத்தின் சிக்கனத்துடன் சொற்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பதைப் போல உலகத்தை விவரிக்கிறான். உண்மையில் அவன் யோகி”.
காம்யுவின் நாவல் வெளிவந்த 1942-ம் ஆண்டு காலனிய ஆட்சியின் மீதும் காலனியப் பார்வை மீதும் உக்கிரமான, கூரிய, கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது இந்த நாவல். அதேபோல, காலனியத்துக்குப் பிந்திய, சுதந்திரமடைந்த பின் படிப்படியாக ராணுவ ஆட்சிக்கும் மத அடிப்படைவாதிகளின் மேலாதிக்கத்துக்கும் உட்பட்ட அல்ஜீரியா மீதும் உக்கிரமான, கூரிய, கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம். அந்த வகையில், இந்த நாவலின் நாயகன் ஹரூனும் இங்கு ஓர் ‘அந்நியன்’ ஆகிவிடுகிறான்.
வெ.ஸ்ரீராமின் அற்புதமான தமிழாக்கத்தில் ‘க்ரியா’வால் நேர்த்தியாக வெளியிடப்பட்டிருக்கும் தாவுதின் நாவலில் காம்யுவின் பிற படைப்புகளைப் பற்றிய மறைகுறிப்புகள் (ஹரூனின் உரையாடல்களில்) காணப்படுகின்றன. காலனியப் பார்வையுடைய மானுடவியலாளர் லெவி-ஸ்டராஸும்கூட விட்டுவைக்கப்படவில்லை. அது மட்டுமல்ல; காம்யுவின் தாயைப் போலவே ஹரூனின் தாயும் வீட்டு வேலைபார்த்து பிழைத்துவந்தவளாகக் காட்டப்படுகிறாள்! இந்த நாவலின் கட்டமைப்பு பற்றி வெ.ஸ்ரீராம் எழுதியுள்ள பின்னுரைக்கு மட்டும் தனியாக ஒரு விலை தரலாம்.
- எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய - பெரியாரிய அறிஞர். தொடர்புக்கு: sagumano@gmail.com
மெர்சோ:மறுவிசாரணை / காமெல் தாவுத் / தமிழில்: வெ.ஸ்ரீராம் / க்ரியா பதிப்பகம் / 72999 05950





3.

கரோனா காலத்து மனிதர்களுக்கு 'பிளேக்' வழியே காம்யு சொல்வது என்ன?

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குக் கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவி, அல்ஜீரியக் கடற்கரையில் அமைந்திருக்கும் ஓரான் என்றழைக்கப்பட்ட 'ஒரு சாதாரண நகர'த்தின் மக்கள்தொகையில் பாதிப் பேரைக் கொன்றழித்த நுண்கிருமியைப் பற்றிய கதையொன்றை ஜனவரி 1941-ல் எழுதத் தொடங்கினார் ஆல்பெர் காம்யு. 1947-ல் வெளியான 'பிளேக்' நாவலானது உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் தலைசிறந்த ஐரோப்பிய நாவல்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
புத்தகத்தைத் திறக்கும்போதே திகிலுக்கு ஆளாகிவிடுவோம். அந்நகரத்தில் வசிப்பவர்கள் பணத்துக்காக அலைபவர்களாகவும் இயல்புக்கு மாறானவர்களாகவும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். திகில் அடியெடுத்து வைத்தவுடன் அச்சமும் தொடங்கிவிடும். கதைசொல்லியான டாக்டர் ரியூ, ஒரு செத்த எலியைக் கடந்துவருவார். தொடர்ந்து ஒருவர் பின் மற்றொருவராக. அதைத் தொடர்ந்து, ஓரான் நகரத்தைத் தொற்றுநோய் கவ்விக்கொள்ளும்; ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவி, ஒவ்வொரு தெருவிலும் பீதியை உருவாக்கும்.
பிளேக் காலகட்டம்
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக, காம்யு தன்னை பிளேக் காலகட்டத்துக்குள்ளாக அமிழ்த்திக்கொண்டிருந்தார். 14-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஐந்து கோடி பேரைக் கொன்ற 'கருப்பு மரணம்' என்றழைக்கப்பட்ட பிளேக் நோய்ப் பரவலைப் பற்றியும், 1630-ல் இத்தாலியின் லம்பார்டி மற்றும் வெனிடோ பிராந்தியங்களில் 2,80,000 பேரைக் கொன்ற பிளேக் நோயைப் பற்றியும், 1665-ல் லண்டனில் ஏற்பட்ட பிளேக் நோயைப் பற்றியும், சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் 18, 19-ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பிளேக் பற்றியும் அவர் படித்துக்கொண்டிருந்தார்.
குறிப்பிட்ட ஒரு பிளேக் நோய்த் தாக்குதலைப் பற்றி மட்டுமே காம்யு எழுதவில்லை. அப்படிச் சுருக்கிப் பார்த்துவிடவும் முடியாது. சில பேர் குறிப்பிட்டதுபோல இந்த உருவகக் கதையானது பிரான்ஸ் நாட்டை நாஜிக்கள் ஆக்கிரமித்துக்கொண்டதைப் பற்றியது. எனினும், பிளேக் என்று நாம் அழைக்கும் இந்த வரலாற்று உண்மைச் சம்பவங்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும் என்றும், அதன் கதைத் திருப்பங்கள் சாஸ்வதமானவை என்றும் நம்பியே இந்தக் கதைக்கருவை காம்யு தேர்ந்தெடுத்தார்: அனைத்து மனித உயிர்களும் எந்த நேரமும் எந்த நோக்கமும் இல்லாமல் அடியோடு அழிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது, அது நுண்கிருமிகளால் இருக்கலாம், விபத்தால் இருக்கலாம் அல்லது நம்முடைய சக மனிதர்களாலேயே இருக்கலாம்.
ஓரான் நகரத்து மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களில் கால்வாசிப் பேர் இறந்துகொண்டிருந்தபோதும்கூட, மிச்சமிருந்தவர்கள் அவ்வாறு தங்களுக்கு நிகழாது என்பதற்கான காரணங்களைக் கற்பனைசெய்துகொண்டிருந்தார்கள். தொலைபேசி, விமானங்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றோடு வாழ்ந்த நாகரிக மனிதர்கள் அவர்கள். 17-ம் நூற்றாண்டின் லண்டன் அல்லது 18-ம் நூற்றாண்டின் கேன்டன் நகரத்தின் துரதிர்ஷ்டம் பீடித்த மக்களைப் போல அவர்கள் இறந்துபோக வேண்டியிருக்கவில்லை. 'அது பிளேக் ஆக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அது மேற்கிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று எல்லோருக்கும் தெரியும்' என்று ஒரு கதாபாத்திரம் கூறுகிறது. 'உண்மைதான், ஒவ்வொருவருக்கும் அது தெரியும்' என்று கூறும் காம்யு மேலும் சொல்கிறார்: 'மரணத்தைத் தவிர.'
காம்யுவைப் பொறுத்தவரையில், மக்களைக் கொல்வதற்காக மீண்டும் அது வரும்போது, வரலாற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை, நம்முடைய பலவீனங்களிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. உயிரோடு இருப்பது என்பது முன்பு எப்போதும் இருந்ததைப் போலவே, வருங்காலத்திலும்கூட எப்போதும் அபாயகரமானதாகவுமே இருக்கும். தப்பிக்க வழியே இல்லை என்ற உண்மைதான் 'அடிக்கோடிடப்பட்ட முன்நிபந்தனை'.
பிளேக் என்ற கருத்து
பிளேக் நோய் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால், எதிர்பாராதபடி உயிரைக் கொல்லும் வகையில் எளிதில் பாதிக்கத்தக்கது, நமது வாழ்க்கையை உடனடியாக அர்த்தம் இழக்கச்செய்துவிடுவதற்குக் காரணமான நிகழ்வு என்று நாம் பொருள்கொள்ளும்படி பிளேக் என்ற கருத்து எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. வாழ்வின் 'அபத்த'த்தைப் பற்றிப் பேசும்போது காம்யு உணர்த்த விரும்புவது இதைத்தான். இந்த அபத்தத்தை ஏற்றுக்கொள்வது நம்மை விரக்தியை நோக்கி இட்டுச்செல்லாது, அதற்கு மாறாக இன்பம், துன்பம் இரண்டிலிருந்தும் மீள உதவும். இதயத்தை இலகுவாக்கும். மகிழ்ச்சி, நன்றியுணர்ச்சி குறித்த முடிவுகளிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விலகியிருக்க வைக்கும்.
காம்யுவின் 'பிளேக்' நாவல் நம்மைப் பீதிக்கு ஆளாக்க முயலவில்லை; ஏனெனில், பீதி என்பது ஆபத்தான ஒன்றை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்துவதோடு, சிறிது காலத்துக்கு நாம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் நிபந்தனை விதிக்கிறது. எங்கேயும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது. காம்யு அதற்குச் சொல்லும் காரணம், நம்மிலும் தாழ்ந்துகிடக்கும் சக மனிதர்களின் மீது நாம் அன்புகாட்ட வேண்டும். துயரங்களிலிருந்து விடுபடுவது பற்றிய நம்பிக்கையோ விரக்தியோ இல்லாமல் உழைக்க வேண்டும். வாழ்க்கை என்பது விருந்தினர் இல்லம்; அது ஒருபோதும் மருத்துவமனை அல்ல. நோய்த்தொற்று உச்சத்துக்குச் சென்று வாரம் ஒன்றுக்கு 500 பேர் இறந்துகொண்டிருந்தபோது, மனிதர்களின் சீரழிவு காரணமாகக் கடவுள் அளித்த தண்டனைதான் பிளேக் என்று விளக்கி பனுல் என்றழைக்கப்படும் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். ஒரு குழந்தை இறப்பதைப் பார்த்த டாக்டர் ரியூ தெளிவாகவே புரிந்துகொண்டார்: துயரங்கள் இலக்குகள் இல்லாமலே பகிரப்படுகின்றன, அதற்கு எந்த அர்த்தமும் இல்லை, அது ஒரு அபத்தம் மட்டுமே, அது கனிவான அம்சம் என்றும்கூட ஒருவரால் சொல்ல முடியும்.
பிளேக் எப்போதும் சாகாது!
டாக்டர் அவரைச் சுற்றியுள்ளவர்களின் துயரங்களைப் பற்றி புரியவைப்பதற்காக ஓய்வின்றி உழைத்தார். எனினும், அவர் ஒரு கதாநாயகன் அல்ல. 'இந்த விஷயம் முழுமையுமே கதாநாயகத் தன்மையைப் பற்றியது அல்ல' என்கிறார் டாக்டர் ரியூ. 'இது நகைப்புக்குரிய கருத்தாகத் தோன்றலாம். ஆனால், பிளேக்கை எதிர்த்துக் கண்ணியமான முறையில் போராடுவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.' அந்தக் கண்ணியமான வழிமுறை என்னவென்று மற்றொரு கதாபாத்திரம் கேட்கிறது. 'எனது மருத்துவப் பணியைச் செய்வதுதான்' என்று டாக்டர் பதிலளிக்கிறார்.
ஓராண்டுக்குப் பிறகு, முழுமையாகவே பிளேக் நீங்கிவிட்டது. நகர மக்கள் கொண்டாடினர். துயரங்கள் முடிவுக்கு வந்தன. இயல்புநிலை திரும்பியது. எனினும், 'இந்த நிகழ்வுகள் இறுதி வெற்றியைப் பெற்ற கதையாக இருக்காது' என்று டாக்டர் ரியூவுக்குத் தெரியும் என்றே காம்யு எழுதுகிறார். 'உண்மையில் என்ன நடந்திருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது என்பதைப் பற்றிய பதிவாகவே இது இருக்கும். சந்தேகத்துக்கு இடமில்லாமல், மீண்டும் ஒருமுறை இந்த அபாயத்துக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கும்.' பிளேக், 'எப்போதும் சாகாது' என்று காம்யு தொடர்கிறார்; அது, மீண்டும் ஒருமுறை வருகிற நாளுக்காக 'படுக்கையறைகளில், நிலவறைகளில், ட்ரங்குப் பெட்டிகளில், கைக்குட்டைகளில், பழைய காகிதங்களில் காத்துக்கொண்டிருக்கிறது', 'எலிகளை எழுப்பி, திருப்திகரமான நகரங்களுக்குச் சென்று அங்கு சாகச் சொல்லி அனுப்பிக்கொண்டிருக்கிறது.'
காம்யு நம்மிடம் நாம் வாழும் காலகட்டத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை; வருவதை முன்பே உரைக்கும் ஒரு தீர்க்கதரிசியைப் போல நோயைக் கட்டுப்படுத்துதற்கான சிறந்த வழிமுறைகள் செயல்படாமல்போவதைப் பற்றியும், மனித இயல்புகளை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறார். அவருக்குத் தெரிந்ததும் நமக்குத் தெரியாததும் இதுதான்: 'ஒவ்வொருவரும் தனக்குள்ளே இந்த உயிர்க்கொல்லி நோயைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த உலகத்தில் எவரும், எந்த மனிதரும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராக இல்லை.'
© 'தி நியூயார்க் டைம்ஸ்', தமிழில்: புவி

4.
கலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு
கீழைதேசத்தைச்
சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம்   அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
   
       நாமெல்லாம் அறிவாளிகளல்லாதவர்களாக இருப்பதால், நமது தெய்வம் நமக்கு விலக்களிக்கவில்லை; அதனாலேயே ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டத்திலும் நாம் வாழ்கிறோம்.   இன்றைய படைப்பாளிகளுக்கு இது நன்கு தெரியும். அவர்கள் அதை வெளிப்படுத்தினால், உடனடியாக விமர்சிக்கப்படுவதோடு தாக்கவும் படுகிறார்கள். மனத்தாழ்மையினால் அவர்கள் மவுனம் காத்தால், அவர்களை இழித்தும் பழித்தும், அவர்களது மவுனம் குத்தலாக்கப் பேசப்படுகிறதே தவிர வேறு எதனைப் பற்றியும் எவரும் வாய்திறப்பதில்லை.  
           
             
      காதைக்கிழிக்கும் இந்தக் காட்டுக் கூச்சலின் நடுவே, படைப்பாளிகள் அவர்கள் மதித்துப் போற்றுகின்ற சிந்தனை மற்றும் வெளிப்பாடுகளையும் தனியொரு பாதையாக முன்னெடுத்துச்செல்ல இனிமேலும் இயலுமென நம்பமுடியவில்லை. ஓட்டமாக ஓடும் வரலாற்றிலிருந்தும் விலகி நிற்கும் சாத்தியமென்பது இதுவரையிலும் அதிகமோ, குறைவோ இயன்றேயிருக்கிறது. நிகழ்வுகளோடு உடன்பாடில்லாத எவரானாலும்   பொதுவாக மவுனமாகிவிடுகின்றனர்; அல்லது வேறு எதையேனும் பேசுகின்றனர். இன்று, எல்லாமே மாறிப் போய்விட்டிருக்கிறது: மவுனம் என்பதற்கு `எதிர்ப்பு` என்னும் புதிய பொருள் சூட்டப்பட்டுள்ளது. விலகியிருக்கும் அல்லது முடிவெடுத்த தருணமே அதனை ஒரு வாய்ப்பாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டதென்று கருதி, தண்டிக்கப்படுவதோ அல்லது பாராட்டப்படுவதோ நிகழ்வதுடன் கலைஞர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களும் அதில் ஈடுபட்டவர்களாக மாறிவிடுகின்றனர். மேலும், இதில் ஈடுபடுதல்` (involved) என்பது வெறுமனே `செயல்பட்டவர்` (committed) என்பதைக் காட்டிலும் மிகவும் துல்லியமானதெனத் தெரிகிறது. உண்மையில் இது கலைஞனின் வெறும் தன்னார்வச் செயல்பாடு என்பதல்ல, மாறாக கண்டிப்பாகச் செய்தேயாக வேண்டிய இராணுவப் பணி போன்றது.
   
       இன்று
            எல்லாக் கலைஞர்களும் காலத்தின் கப்பலில் ஏறிவிட்டுள்ளனர். அவர்களது கப்பல் அழுகிய மீன்களால் துர்நாற்றமடைந்திருப்பதை உணர்ந்தாலும், உண்மையில் அங்கே தேவைக்கு அதிகமான கொடுங்கோல் மேற்பார்வையாளர்கள் இருப்பதை, எல்லாவற்றிலும் மோசமாக, அவர்கள் நிகழ்போக்குக்குத் தடையாக இருப்பதைத் தெரிந்தாலும் கலைஞர்கள் தங்களைத் தாங்களே நொந்துகொண்டு ஒதுங்கிக்கிடக்கவேண்டியிருக்கிறது. நாம் கடலுக்குள் திசை தடுமாறித் தத்தளிக்கும் கப்பல்களாக அலைகிறோம். கலைஞர்கள், மற்ற எல்லோரையும் போலவே இறந்துவிடாமலிருக்க முடிந்தால், துடுப்புகளை ஏந்தவேண்டும் – அதாவது, உயிரோடு வாழ்வதையும், படைப்பதையும் தொடரவேண்டும்.  
             
       
   வெளியீடு ஒவ்வொன்றும் கருத்தூன்றி, வேண்டுமென்றே செய்த துணிகரச் செயலே. மேலும், அந்தச் செயல் எதையுமே மன்னிக்காத இந்த நூற்றாண்டின் வாய்திறந்த மிகு உணர்ச்சிகளுக்கு நம்மை இரையாக்குகிறது.
     

      உண்மையைச்
    சொல்வதெனில், இது எளிதல்ல என்பதுடன் கலைஞர்கள், அவர்களின் முன்னால் வசதியும் வாய்ப்புமான வாழ்வினை எந்த அளவுக்கு இழக்கவேண்டியிருக்குமென்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மாறுதல் கொடுமையானதே. இருப்பினும், வரலாற்றின் திறந்தவெளி அரங்கில் தியாகிகளும் அடித்துத் தின்னும் விலங்குகளும் நிலையாக இருந்தே வந்திருக்கின்றனர். தியாகிகள் நிலையான புகழ் என்ற சிந்தனையால் வலிமைபெற, விலங்குகள் குருதி படிந்த வரலாற்றுத் தீனி மீதான ஆர்வத்தால் தூண்டப்பட்டுள்ளனர். ஆனால், இந்தக் கணம் வரையிலும் கலைஞர்கள் எப்போதுமே ஓர்ப்பாதையிலேயே செல்கின்றனர். அவர்கள் எந்தக் காரணமும் இல்லாமலேயே, அவர்களது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக, அல்லது, உன்னத நேர்வுகளில் சிறந்ததாகத் தியாகிகளை ஊக்குவிக்கவும், விலங்குகளை அவற்றின் தீனி மீதான முயற்சியிலிருந்து திசைதிருப்பவுமாகப் படைத்தனர்; பாடினர்.
        ஆனால், அதற்கு மாறாக, கலைஞர்கள், திறந்தவெளி அரங்கினுள் தாமே மாட்டிக்கொண்டிருப்பதை இப்போது உணர்கிறார்கள். அவர்களது குரல்கள் இயல்பாகவே, தற்போது, முன்பு போலில்லை: அவற்றில் தன்னம்பிக்கை என்பது சிறிதளவுங்கூட இல்லை.  
         
      இதுபோன்ற தொடர்ச்சியான ஈடுபாட்டினால் கலைக்கு ஏற்படுகின்ற இழப்பினை – கலைஞர்களின் முன்னாள் வாய்ப்பு வசதி, முக்கியமாக மொசார்ட்டின் பாடல்களில் மூச்சுக்காற்றாக வாழ்கின்ற அந்தப் புனிதமான சுதந்திரம் – தெரிந்துகொள்வது எளிது.   நமது கலைப் படைப்புகளின் தொல்லைமிக்க விடாப்பிடியான சூழலோடு, அவற்றின் வடுப்பட்ட புருவங்களையும் திடீர் சரிவுகளையும் இப்போது நம்மால் நன்கு புரிந்துகொள்ளமுடிகிறது. அதுபோலவே, படைப்பாளிகளுக்குப் பதில் அதிக ஊடகவியலாளர்களும், செசன்னெசுக்குப் பதில் அதிக தொழில்முறை சாராத ஓவியர்களும்   இங்கே ஏன் நிறைந்திருக்கின்றனரென்பதையும் டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் அல்லது ஸ்டென்தாலின் ` சார்ட்டர்ஹவுஸ் ஆஃப் பார்மா`வின் இடத்தை குழந்தை இலக்கியங்களும், மர்மக்கொலைகளும் எப்படிக் கைப்பற்றியுள்ளன என்பதையும் நாம் புரிந்துகொள்வதை நமக்கு நாமே சொல்லிக்கொள்ளமுடிகிறது. இப்படியான நிலையினை, உரத்த மனிதநேயக் குரல்களோடு எப்போதுமே எதிர்க்கமுடிகிறது தான்.   அதன் மூலமாக நாம் தாஸ்தயெவ்ஸ்கியின் தி பொஸ்ஸெஸ்டு – ஆளுமைப்படுத்தப்பட்ட இடித்துரை – நாவலில் ஸ்டீபன் ட்ரோஃபினோவிச் நம்பிக்கையற்ற நிலையில் எதனை உருவகப்படுத்த முயல்கிறானோ, அப்படியானவர்களாக மாறுவதுடன், அந்த நாவல் மனிதன் உணர்கிற பொது விரக்தி வலைக்குள் நாமும் வீழ்கிறோம். ஆனால் அந்த விரக்தி அல்லது மனச்சோர்வு இயல்நிகழ்வு எதனையும் மாற்றப் போவதில்லை.  
 
      நமது காலத்தில் நாம் பங்கெடுத்துக்கொள்வது, எவ்வளவோ மேலானதென்பதே என் எண்ணம். நமது வயது நம்மை அவ்வாறு செய்யுமாறு கூச்சலிடுகிறது; அதுவும்   போற்றுதலுக்குரிய தலைமை வல்லுநர்கள், மேலங்கியின் சட்டைப் பையில் கேமிலியா ரோஜாக்களைச் செருகிய கலைஞர்கள் மற்றும் சாய்வு நாற்காலி மேதைகளின் காலம் முடிந்துவிட்டதென்பதை அமைதியாக ஒப்புக்கொள்வதன் மூலமாக முற்றிலும் உரத்த குரலில் நச்சரிக்கிறது. இன்று படைப்பதென்பதே அபாயகரமான ஒன்றினைப் படைப்பதெனப் பொருளாகிறது. வெளியீடு ஒவ்வொன்றும் கருத்தூன்றி, வேண்டுமென்றே செய்த துணிகரச் செயலே. மேலும், அந்தச் செயல் எதையுமே மன்னிக்காத இந்த நூற்றாண்டின் வாய்திறந்த மிகு உணர்ச்சிகளுக்கு நம்மை இரையாக்குகிறது. எனவேதான், நடவடிக்கை எடுப்பதா அல்லது கலைக்குத் தீங்கிழைக்காமலிருப்பதா என்பதை முடிவுசெய்வதற்காக அல்ல, தற்போது எழுகின்ற கேள்வி, கலை மற்றும் அது குறிக்கும் எதுவொன்றும் இல்லாமல்
   
       வாழமுடியாத ஒவ்வொருவருக்குமான கேள்வி, எண்ணற்ற சித்தாந்தங்களின் (பல் வகை வழிபாட்டு மரபுகள், எத்தகையதொரு தனிமை!)   கடுமையான கட்டுப்பாடுகளுக்கிடையில் படைப்புக்கான புதிர்நிறைந்த சுதந்திரம் உயிர்த்திருப்பதென்பது சாத்தியமா என்பதை அறிந்துகொள்வதற்கானதே.
         
      இன்றைய கலைஞர்கள், அவர்களது கலை மற்றும் அதன் மூலமான அவர்களது இருப்பு என்பது தேவையானதாவென ஐயுறுகின்றனர்.    
 
  ச.ஆறுமுகம்.
      இதைப் பொறுத்தவரையில், அரசின் அதிகார சக்திகளால் கலை மிரட்டப்படுகிறதென எளிமையாகச் சொல்லிவிடுவது போதுமானதல்ல. அது போன்ற நேர்வில் பிரச்சினை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிடும்: கலைஞன் போராட வேண்டும் அல்லது சரணடையவேண்டும். பிரச்சினை அதைவிடவும் அதிக சிக்கலானது; இது, கலைஞர்களுக்குள்ளேயே போரிட்டுக்கொள்ளப்படுகிறதென்பதை நாம் புரிந்துகொள்கிற கணமே, அது வாழ்வா சாவா என்பதைவிடவும் மோசமானதாகிறது. கலை மீதான வெறுப்பு என்பதற்கு மிகவும் அற்புதமான பல எடுத்துக்காட்டுகளைக் கொண்டது நமது சமூகம். தற்போது அந்த வெறுப்பு தழைத்தோங்குகிறது. ஏனெனில் அது கலைஞர்களாலேயே உயிர்ப்போடு வளர்க்கப்படுகிறது. நமக்கும் முந்தைய கலைஞர்களிக்கும் ஐயங்கள் இருந்தன. ஆனால், அவர்கள் ஐயுற்றது அவர்களது திறமையைத் தான். இன்றைய கலைஞர்கள் அவர்களது கலை மற்றும் அதன் மூலமான அவர்களது இருப்பு என்பது தேவையானதாவென்றல்லவா ஐயுறுகின்றனர். ரேசின், 1957 இல் நான்டெஸ் சட்டத்தை எதிர்த்துப் போரிடுவதற்குப் பதிலாக பெரெனிஸ் நூலை எழுதினோமேயென இப்போது வருந்துவார்.
 
      கலையைப் பற்றிய இப்படியான கலைஞர்களின் மறுமதிப்பீட்டுக்குப் பல காரணங்கள் உள்ளன; ஆனாலும் நாம் மிகவும் அதிமுக்கியமானவற்றை மட்டுமே கருத்தில் கொள்ளுவோம்.
 
      மிகச் சிறந்த உன்னத நேர்வுக் காட்சியில், சமகால கலைஞர்கள் பொய் கூறியிருக்கவேண்டும் அல்லது போதிய காரணம் ஏதுமில்லாமலேயே பாடியிருக்க வேண்டுமென வரலாற்றுக் கெடுவாய்ப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் விவரிக்கப்படுகிறது. நமது காலத்தின் சிறப்பியல்பாக உண்மையில் விளங்குவது சமகாலக் கூருணர்வுகளுக்கும் வறுமைக்குள்ளாகிய மக்களின் எழுச்சிக்குமிடையே எழுந்துள்ள பதற்றமாகும். அம்மக்களது இருப்பினை நாமறிகிற அதேவேளையில் அவர்களைப் புறக்கணிக்க முயல்கிறோம். அவர்களைப் பற்றிய உணர்வோடு நாமிருக்கிறோமெனில், அதற்கு மேல்தட்டினர், மேல்தட்டுக் கலைஞர்கள் அல்லது பிறர் இப்போது உயர்ந்திருக்கின்றனரென்பதல்ல, காரணம்.   இல்லை. நாம் அதைத் தெளிவாக்கிக் கொள்வோம். அது எப்படியென்றால், மக்கள் வலிமைபெற்றுள்ளதுடன் நாம், நமது நினைவிலிருந்தும் அவர்களை அகற்றிவிட அவர்கள் அனுமதிப்பதில்லை.
     
 
      இப்படிப் பொறுப்பினை உதறிவிடுவதற்கான வேறு பல காரணங்களில் சில மேன்மையானவை அல்ல. ஆனால் காரணங்கள் என்னவாக இருந்தபோதிலும், அவை அனைத்தும், படைப்புச் செயல்பாட்டின் அடிப்படைக் கூறாக விளங்குகின்ற ஆக்கபூர்வப் படைப்பாளியின் தன்னம்பிக்கையினைத் தகர்ப்பதன் மூலம் சுதந்திரமான படைப்புச் செயல்பாட்டினை முடக்குவதென்ற ஒரே இலக்கினைக் கொண்டுள்ளன.
 
          “ மனிதன் தனது சொந்தப் பேரறிவுக்குக் கீழ்ப்படிதலே, நம்பிக்கை என்பதன் இறுதி வரையறை” என எமெர்சன் சிறப்பித்துக் கூறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மற்றொரு அமெரிக்க எழுத்தாளர் மேலும் சிறப்பித்துக் குறிப்பிடுவது, “ மனிதன் ஒருவன் அவனுக்கே நம்பிக்கைக்குரியவனாக நீடிக்கும் வரையில், அரசு, சமூகம், மட்டுமல்லால், சூரிய, சந்திர,   நட்சத்திரங்களுங்கூட அவனது நன்மைக்காகப் பணிபுரியும்.” இத்தகைய மிக விரிந்த அளவிலான இனிய நன்னோக்கு இப்போது இறந்துவிட்டதாகவே தெரிகிறது. பெரும்பாலான நேர்வுகளிலும் கலைஞர்கள், கலைஞர்களாக இருப்பதற்கு தமக்குத் தாமேயாகவும், கலைஞரென்ற வகையில் ஏதேனும் குறிப்பிட்டுச் சிறுமதிப்பளித்தாலுங்கூட வெட்கம் கொள்கின்றனர். மிக முக்கியமாக, ` கலையென்ன அப்படியொரு வஞ்சக ஆடம்பரமா?` என்பதே அவர்கள் தமக்குள்ளாகவே பதிலளிக்கவேண்டிய கேள்வி        
       
   
   
     
  5.   


மூன்றாம் உலகத்தின் பார்வையில் ஆல்பெர் காம்யு
வ. கீதா

காம்யுவைப் பற்றி, அவரது இலக்கி  யப் படைப்புகள், சாதனைகள் ஆகியன பற்றிப் பேசுவது தயக்கத்தையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தக் கூடிய விஷயம் தான். காம்யுவின் மொழி அழகு, அவரது இலக் கிய நடையிலுள்ள லயம், சொற்களைக் கவனமா கவும் துல்லியமாகவும் அவர் கையாளும் விதம் ஆகியன வாசகரின் மனதைக் கவரக் கூடியவை. ஆனால் காம்யுவின் படைப்புகளின் சமூக, அரசி யல் பரிமாணங்களைக் கவனத்தில் கொள்ளும் போதும், காம்யு வாழ்ந்த வரலாற்றுச் சூழலை நினைவுகூறும் போதும் காம்யுவின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிய சில முக்கியக் கேள்வி களை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. இவ்வகை யில் நமது ரசனையையுமே நாம் விமர்சிக்க வேண்டியுள்ளது.

இன்றைய உலகில் ஏகாதிபத்தியமும் கால னித்துவமும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகச் சந் தையின் வடிவில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. நியூ காலடோனியா, மார்த்தினிக் போன்ற நாடுகளை பிரான்ஸ் இன்னும் தன் கால னிகளாகவே வைத்துள்ளது. பசிபிக் பெருங்கட லில், பிரான்சிலிருந்து வெகு தொலைவில், பிரெஞ்சு உயிர்களுக்குச் சேதம் ஏற்படாவண் ணம், பிரான்ஸ் தனது அணு ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் வாழும் மக்களின் வாழ்வும் அத்தீவுக ளின் இயற்கை வளமும் மிகுந்த சேதத்திற்கு உள் ளாகியுள்ளன. கடந்த ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சி நடந்து முடிந்த 200 ஆம் ஆண்டைக் கோலாகலமாகக் கொண்டாடிய பிரெஞ்சு அரசு, 'விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் பெயரில் நியூ காலடோனியாவில் தமது காலனி யாதிக்கத்தை உறுதி செய்து கொண்டது.

இந்தவொரு வரலாற்றுச் சூழலில், இருபதாம் நூற்றாண்டு பிரெஞ்சு இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான காம்யு பற்றி, அல் ஜீரியாவில் பிறந்து, அங்கேயே பல ஆண்டுகள் வாழ்ந்தும், அங்கு நிலவிய மிக மோசமான கால னியாதிக்கத்தை, அந்த ஆதிக்கத்தை எதிர்த்து எழுந்த அராபிய விடுதலை இயக்கங்களைப் பற்றி எந்த உணர்வையும், புரிதலையும் வெளிப்ப டுத்தாது எழுதிய காம்யு பற்றி நாம் பேசுவதென் றால் அதற்கு என்ன பொருள்?
ஏதோவொரு வகையில், நம்மில் பலர் ஐரோப்பா தன்னைப் பற்றித்தானே ஏற்படுத்திக் கொண்டுள்ள சுய-மதிப்பை விமர்சிக்காது ஏற்றுக் கொண்டு விட்டோம். ஐரோப்பாவின் தத்துவ, ஆன்மீக, உளவியல் பிரச்சினைகளை அவற்றிற்கு ரிய குறிப்பிட்ட வரலாற்று, சமூகச் சூழலில் வைத் துப் புரிந்துகொள்ள நமக்கு இன்னும் தெரிய வில்லை. இந்தக் காரணத்தினாலேயே காம்யு
காலச்சுவடு
283
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

ححص حجم جع:
போன்ற எழுத்தாளர்களின் இலக்கிய சாதனை கள் பற்றி நாம் பேசுகிறோம். இத்தகைய இலக்கி யப் படைப்புகளில் நிலவும் மெளனங்கள் பற்றி, அந்த மெளனங்களில் குடிகொண்டிருக்கும் அரசி யலைப் பற்றி, அப்படைப்புகளின் வடிவங்களில் தொக்கி நிற்கும் சித்தாந்தங்களைப் பற்றி நாம் பேசுவதே இல்லை.

ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் பலர் - படைப்பா ளிகள், விமர்சகர்கள் - கடந்த காலத்தில் காலனி யாட்சியையும் அதன் விளைவுகளையும் ஆழ மாக ஆராய்ந்து, நுணுக்கமான, சிக்கலான பல படைப்புகளை உருவாக்கியுள்ளனர். நவ - கால னியமாக அவர்களது சமூகங்களை ஆட்டிப்ப டைக்கும் புதிய, பொருளாதார, சிந்தாந்த அடக்கு முறைகளையும், நிர்ப்பந்தங்களையும் விமர்சித்து எதிர்த்து வருகின்றனர். காலனித்துவத்தால் ஆப் பிரிக்க பழங்குடி சமூகங்களில் ஏற்பட்ட விபரீத மான மாற்றங்கள், ஆப்பிரிக்க பண்பாடுகள் அழிந்தமை, ஆப்பிரிக்க வாழ்வுமுறைகள் சிதைந்த நிலை ஆகியவற்றைக் கருப்பொருட்க ளாகக் கொண்டு ஏராளமான சிறுகதைகள், புதி னங்கள், நாடகங்கள், கவிதைகள் படைக்கப்பட் டுள்ளன. ஆப்பிரிக்காவைப் பற்றி ஐரோப்பியர் கள் எழுதியவற்றிற்கு சவாலாக இன்று பல ஆப்பி ரிக்கர்கள் தமது படைப்புகளை முன்நிறுத்தியுள்ள னர். காம்யு, கான்ராட்போன்றவர்களின் படைப்பு களை நாம் புதிய வகைகளில் புரிந்துணர்வதற்கு இந்தப் புதிய ஆப்பிரிக்க இலக்கியப் படைப்புகள் உதவுகின்றன.

எனவே காம்யுவின் எழுத்துக்களை, இன் றைய சூழலில் நாம் படிக்கையில், வேறொரு குர லும் கூடவே ஒலிப்பதை நம்மால் உணர முடிகி றது. காம்யு சொல்ல மறந்ததை, சொல்லத் தயங்கி யதை சொல்லாமல் விட்டதை இன்று ஆப்பிரிக் கர்கள் சொல்கின்றனர். இவர்களில் பலர் ஐரோப் பிய மொழிகளில் எழுதுகின்றனர். சிலர் ஆப்பி ரிக்க மொழிகளில் எழுத துவங்கியுள்ளனர். ஐரோப்பிய இலக்கியக்கோட்பாடுகள், கொள்கை கள் ஆகியவற்றை உள்வாங்கி, இவற்றைத் தமது கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தியுள்
www.padippakam.com
ளனர் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள். இவர்கள் ஆப் பிரிக்க வரலாற்றிற்கும் வாழ்வுமுறைக்கும் சாட்சி யமாக இருக்கக்கூடிய ஒரு அழகியலையும் உரு வாக்கியுள்ளனர் என்றே நாம் கூறலாம். பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய அந்நிய, ஆதிக்க மொழிக ளைத் தமதாக்கிக் கொண்டு ஆப்பிரிக்க உலகைப் பற்றி எழுதும் இந்தப்புதிய படைப்பாளிகள் பற்றி இன்று நாம் பேசுவதுதான் நியாயமானது. ஆனால் இன்று நாம் விவாதிக்கப்போவது காம்யு வைப் பற்றிதான். எனினும், காம்யு சொல்ல வந்த தைக் கொண்டு அவர் சொல்லாமல் விட்டதை, அவரது படைப்புகள் சாதிக்கும் மெளனங்களைப் பற்றி இங்கு நாம் பேசுவதே பொருத்தமானது.

காம்யுவின் முக்கியப் படைப்புகள் அல்ஜீரி யாவையும் அங்கு வாழ்ந்த பிரெஞ்சு மக்களின் வாழ்வையும் மையமாகக் கொண்டுள்ளன. காம்பு, அல்ஜீரியாவை பிரான்சின் ஒரு பகுதியா கவே கருதினார் என்பதற்கு ஏராளமான சான்று கள் உண்டு. காம்பு அல்ஜீரியாவின் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தவர் மாத்திரம் அல்லர். காலனியத்துவத்திற்கு முன் நிலவிய அல்ஜீரிய வரலாற்றையும் சமூகத்தையும் ஒதுக்கி நிராகரித்த வரும் கூட அவர் எழுதுகிறார்:
 
    'அல்ஜீரியாவைப் பொறுத்தவரை, தேசிய விடுதலை என்பது வெறும் உணர்ச்சிகளால் உந்தப்படும் ஒரு சூத்திரமேயன்றி வேறல்ல. இதுவரைக்கும் அல்ஜீரிய தேசம் என்று ஒன்று இருந்ததே இல்லை. யூதர்கள்.  துருக்கியர்கள், கிரேக்கர்கள், இத்தாலியர்கள், பெர்பெர்கள் ஆகியோரும்கூட உருவாகவிருக்கிற அல்ஜீ ரிய     தேசத்தின் தலைமைக்கு உரிமை கொண்டாடமுடியும். இப்போது உள்ள நிலையில் அராபியர்கள் மட்டுமே     அல்ஜீரியாவாக அமைவதில்லை. அல்ஜீரியாவிலுள்ள பிரெஞ்சுக்காரர்களும் ஒரு ஆழமான அர்த்தத்தில் சுதேசிகள்தான். மேலும், அராபியர் களை மட்டுமே கொண்ட ஒரு அல்ஜீரிய பொருளாதார சுதந்திரத்தை பெற்றுவிட முடியாது; பொருளாதார சுதந்திரமின்றி அரசியல் சுதந்திரம் என்பது வெறும் மாயையே.
காலச்சுவடு
284
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
    பிரெஞ்சு நாட்டின் முயற்சிகள் எவ்வளவு தான் குறைபாடு உடையனவாக இருந்த போதிலும், வேறு எந்த நாடும்     அல்ஜீரியாவுக் கான பொறுப்பை ஏற்க இசையாத அள விற்கு, அம்முயற்சிகள் அமைந்துள்ளன'

இவ்வாறு காம்யுவின் சிந்தனை ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு அல்ஜீரிய, அராபிய எதிர்ப்புச் சிந்தனையாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

காம்யுவின் படைப்புகளில் அல்ஜீரியாவின் அராபியர்களோ, அவர்களுடைய தனிப்பட்ட, சமூகப் பிரச்சினைகளோ இடம் பெறுவதில்லை. 'அந்நியன்', 'கொள்ளைநோய் ஆகிய இரண்டு புதினங்களிலும் வரும் சம்பவங்கள் அல்ஜீரியா வில் நடைபெறுவனதான். ஆயினும் இவ்விரு புதினங்களிலும் அராபியர்கள் குறிப்பிடத்தக்கப் பாத்திரங்களை வகிப்பதில்லை. அந்நியனில் வரும் அராபியர்களுக்கு பெயர்களைக் கூட கதா சிரியர் வழங்குவதில்லை. இங்கு அராபியனின் தனிப்பங்கு - ஒரு சவமாக அவன் விழுந்து கிடப் பதுதான். நாடுகடத்தலும் சாம்ராஜ்யமும்' என்ற தொகுப்பில் இடம் பெறும் 'விருந்தாளி', 'சோரம் போனவள் ஆகிய இரண்டு கதைகளிலும் அராபி யர்களைப் பற்றி, வழக்கத்தைவிட அதிகமாக காம்பு குறிப்பிட்டாலும், அவர்களுக்குமே ஒரு தனித்தன்மையை அவர் அளிப்பதில்லை. அராபி யர்களின் பார்வையில் உலகம் எவ்வளவு வித்தி யாசமாக இருந்திருக்கும் என்பதையும், அராபி யர்களுக்கென்று ஒரு வரலாறு, வாழ்வுமுறை இருக்கக் கூடும் என்பதையும் காம்யு உணர வில்லை. பல சமயங்களில் உணர மறுத்தார். காம் யுவின் விசுவாசிகள் கூறலாம்: காம்யு பிரெஞ்சு மக்களைப் பற்றியோ அராபிய மக்களைப்பற் றியோ பேச முற்படவில்லை. மாறாக 'மானுட நிலைமைப் பற்றிதான் அவர் அக்கறை கொண்டி ருந்தார் என்று. ஆனால் இங்கு 'மானுடம்' என் பது பிரெஞ்சு மக்கள் என்பதாகக் குறுக்கப்பட்டி ருப்பதை நாம் காணவேண்டும். குறிப்பாக ஐரோப்பிய சமூகத்திலிருந்தும், பண்பாட்டிலிருந் தும் துண்டிக்கப்பட்டு அல்ஜீரியப் பாலைவன
காலச்சுவடு
285
வெப்பத்திலும் தமது 'ஆளுமை'யை இழக்க விரும்பாது வைராக்கியத்துடன் வாழ்ந்த பிரெஞ்சுக் காலனியர்களுக்கு மானுடம் குறுக்கப் பட்டுள்ளதை நாம் காண வேண்டும்.

அல்ஜீரியாவில் வாழவந்த பிரெஞ்சுக் காலனி யாளர்களுக்கு ஏற்பட்ட மனச் சஞ்சலங்கள், தார் மீக நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக அவலச்சுவையோடு சித்திரிக்கும் காம்யு, இந்த குழப்பமான 'மானுட நிலைமைக்கு அடிப்படை யாக விளங்கிய பிரெஞ்சுக் காலனித்துவத்தைப் பற்றி, அதன் அடக்கு ஒடுக்குமுறைகள், ஆதிக்க நெறிகள், அதிகார மையங்கள் பற்றி மெளனம் சாதிக்கிறார். ஆனால் மெர்சோவின் தர்மசங்க டம், ரியூவின் விரக்தி கலந்த கருணை, டாருவின் தனிமையுணர்வு - இவையாவற்றையும் காலனித் துவத்தின் இந்த மற்ற அம்சங்களிலிருந்து நாம் பிரித்துப் பார்க்க முடியாது.

மெர்சோ ஒரு அராபியனைக் கொல்கிறான். மெர்சோவைக் கொலை செய்யத் தூண்டியது எது? தற்காப்பு உணர்வா? பயமா? அல்லது அந்த அல்ஜீரிய வெப்பமும், உப்புக்கலந்த அந் தக் கடல் காற்றுமா? அராபியன் கத்தியை உருவு கிறான். மதிய வெய்யிலில் அது தீப்பிழம்பாக ஒளிர்கிறது. மெர்சோ தெளிவற்ற நிலை யில் தகிக்கும் கடற்கரை மண்ணில் தன்னிலை குழம்பி அராபியனைச் சுடுகிறான். முதல் தோட்டாவே அராபியனின் உயிரைப் பறித்துவிடுகிறது. மெர்சோ தொடர்ந்து ஐந்து முறை சுடுகிறான். ஒரு அபத்தமான உலகில் நடைபெறும் ஒரு அபத்த மான செயலாகவே விமர்சகர்கள் மெர்சோ செய்த கொலையை விளக்குவது வழக்கம். மெர் சோவைப் பொறுத்தவரையில் அவனது செயல்க ளுக்கு அவனால் காரணங்காட்ட முடியாது. உல கின் வழக்கமான மதிப்பீடுகளை அவன் அங்கீக ரிப்பதுமில்லை. நிராகரிப்பதுமில்லை. சகமனிதர் களுடன், அவனைப் பிணைப்பன அன்பும் ஆசை யுந்தான். ஆனால், இவற்றின் அடிப்படையில் தனது சகமனிதர்களுக்காக, அவர்களின் பொருட்டு, தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதை யும் அவன் விரும்புவதில்லை. பிரபஞ்சத்தின்
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
தணிவான அக்கறையின்மையை, தனது கண நேர அனுபவங்களில் லயித்தவனாய் மன அமை தியுடன் அவன் எதிர்கொள்கிறான். ஒருவன் தனது கணநேர அனுபவங்கள், ஆசைகள், வேட் கைகள், உணர்வுகள் ஆகியவற்றில் மடடும்தான் மனநிறைவு பெறமுடியும் அபத்தமான உலகில் ஒரு தனிமனிதனின் வாழ்வை உறுதிசெய்வதும் இவைதான்-இந்த நினைப்பில் மெர்சோ துக்கு மேடைக்குச் செல்ல ஆயத்தமாகிறான்.

 மெர்சோவின் தனிமை, அவனை அந்நிய னாகப் பிரித்துக்காட்டும் அவனது செய்கைகள், நடத்தை ஆகியன மானுட உலகத்தில் உள்ளார்ந்த அபத்தத்தை உணர்ந்து வாழ்பவனின் செயல்கள் மாத்திரம் அல்ல. இச் செயல்களும் இவை மேற் கொள்ளப்படும் அபத்தமான இந்த மானுட உல கமுமே வரலாற்று விளைவுகள். இவ்வரலாறு இரண்டு உலகப் போர்களுக்கும் இடையே நில விய ஐரோப்பிய சமூகத்தின் அவலமான அபத்த மான வரலாறு மாத்திரம் அல்ல. இது முதலாளித் துவத்தின், காலனித்துவத்தின் வரலாறும் கூடத் தான். எந்த அல்ஜீரியச் சூழலில் மானுட உலகின் அபத்தத்தை, மானுடனின் அந்நியமாதலை காம்யு நிலைநாட்ட விரும்புகிறாரோ, அந்த அல் ஜீரியச் சூழல் காலனித்துவத்தால் வடிவமைக்கப் பட்ட ஒன்று. அல்ஜீரியாவின் அராபியர்களும் ஒருவித அபத்தமான உலகில்தான் வாழ்ந்து வந் தனர் - தமது வரலாற்றை இழந்தவராய், தமது அடையாளம் குழம்பியவராய், மனவளம் குன்றி யவராய். ஆனால் ஃப்ரான்ஸ் ஃபேனோன் விளக் கியுள்ளது போல, அல்ஜீரியாவின் அராபியர்கள் இந்த அபத்த உலகின் ஆதிக்க நெறிகள், அதிகார மையங்கள் ஆகியன பற்றி அனுபவரீதியாக நன் றாகவே உணர்ந்திருந்தனர். தமக்கு ஏற்பட்டிருந்த கொடுரமான அந்நியமாதலுக்கு யார் காரணம் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால் காம்யுவின் கதாநாயகர்களோ தாம் அனுபவித்த அந்நியமாதலை பிரபஞ்சத்தின் விதியாகப் புரிந் துகொண்டனர். ஐரோப்பிய மனசாட்சியின் அங்க லாய்ப்புகளைத் தமது கதாநாயகர்களின் வாழ் வில் உருவகப்படுத்திய காம்யு தனது உலகக் கண்
காலச்சுவடு
|286
ணோட்டத்தை அல்ஜீரிய அரபு சூழலுடன் பொருத்திப் பார்க்கவில்லை.

ரேமோ தனது அராபியக் காதலியை அடித் குத் துன்புறுத்துவதை, பிறகு ரேமோவைப் பின் தொடர்ந்த அவளது சகோதரனை தான் கொல்ல நேர்ந்தது ஆகியன மெர்சோவுக்கு வேண்டுமா னால் அபத்த நிகழ்வுகளாக, தொடர்பற்ற விஷ யங்களாக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு கால னித்துவச் சூழலில், அடிமைகளாக வாழ்ந்து வரு பவர் இந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை அறி வர் இவற்றை நியாயப்படுத்தும் சித்தாந்தங்க ளையும் அவர்கள் அறிவர். மெர்சோவுக்கும், அவனது வெள்ளைத்தோல் சகாக்களுக்கும் அரா பியர்கள் வெறும் உடல்கள், பெயரற்ற பிறத்தியார் கள். அராபிய பெண்மணிகள் அவர்களது ஆசை வெறியைத் தணிப்பதற்கென்றே இருப்பவர்கள். அராபிய ஆண்களோ, வெள்ளையரின் கண் னோட்டத்தில், முதுகெலும்பு இல்லாத, ஆண் மையற்ற பேடிகள். ஃப்ரான்ஸ் ஃபேனோன் தனது 'கருப்புத் தோல்கள், வெள்ளை முகமூடிகள் என்ற நூலில் இதை மிகத் தெளிவாக விளக்கியுள் ளார். அதாவது அராபியப் பெண்ணைத் தனது அதிகாரத்தின் துணைக்கொண்டு தனதாக்கிக் கொள்ளும் ஐரோப்பிய வெள்ளையன், இதன் மூலம் தான் அராபியனின் தன்மான உணர்வைக் குலையச் செய்வதாகவே எண்ணுவான். இப்பொ ழுது, அராபியன் தன்மானம் இழந்தவனாகி விடுகிறான்.

 தனது உடமைகளை, தனது மண்ணைக் காத்து இவற்றிற்காகப் போராடும் உரிமையையும் கூட அவன் இழந்தவனாகி விடுகிறான்.மெர்சோ தான் கொலை செய்த அராபியனை எண்ணி வருந்துவதில்லை. தான் துக்கு மேடைக் குச் செல்வதற்கு முன் மரணத் தண்டனை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து, அது குற்றவாளிக்கு எந்த வொரு சந்தர்ப்பத்தையும் தர மறுக்கும் பூரண தண்டனை என்று அங்கலாய்க்கும் மெர்சோ, அந்த அப்பாவி அராபியனை ஒரு கண நேரமே னும் நினைவு கூருவது இல்லை. வெள்ளை உல கம் என்றும் கருப்பு உலகம் என்றும் காலனிய
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
உலகம் இருகூறாகப் பிளவு பட்டிருப்பதைப் பற்றி யும், இவ்விரு உலகங்களுக்கிடையே உள்ள உறவை ஒழுங்கமைப்பது துப்பாக்கியும் வேலி யும்தான் என்பதையும் குறிப்பிடுகிறார் ஃப் ரான்ஸ் ஃபேனோன். பிளவுபட்டுக் கிடக்கும் இந்த உலகில் மெர்சோவினால் அராபியர்களை 'அந்நியராக', 'பிறத்தியாராகவே காண முடிகி றது. செலஸ்ட்டுடனும் மாரியுடனும் . ஏன் தன் நாயை அன்றாடம் உதைக்கும் சாலமானோவு டன் கூட - ஏதோவொரு உறவை அவனால் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் தான் கொல்ல நேர்ந்த அராபியனோ, மெர்சோவின் கண்களுக்கு ஒரு சடலமாக மட்டுமே தெரிகிறான். அராபியர்களைப் பற்றி ஐரோப்பாவில் ஒரு வழக் குண்டு; "செத்துப்போய்விட்ட அராபியனே நல்ல அராபியன்' என்பதுதான் அது (The only good Arab is a "dead Arab). 905 Birşāsāść" இனவெறிக்குச் சான்றாக விளங்குவது இந்த வழக்கு. இனவெறி, காலனித்துவம் ஆகியன விதித்திருந்த விதிகளை, வரையறுத்த எல்லைக் கோடுகளை - மானுடருக்கிடையில் நிலவக் கூடிய பரஸ்பர உறவை நிர்ணயிக்கும் எல்லைக் கோடுகளை - கடந்து மெர்சோ, என்றென்றும் சாசுவதமான மானுட நிலைமையின் அவலத்
தைப் பிரதிநிதித்துவம் செய்கிறான் என்று கொள் வது எவ்வளவு அபத்தம்; மெர்சோவின் செயல் காலனியாட்சியின் துப்பாக்கி - வேலி அரசிய லின் வரம்பிற்குள் மேற்கொள்ளப்பட்ட ஒன்றே தவிர அர்த்தமற்ற உலகில் நிகழ்ந்த அபத்தமான செயல் அல்ல. காலனிய உலகில் வாழ்ந்தும், அவ் வுலகின் அடிப்படையாக விளங்கி அதனை இயக்கிய ஆண்டான் அடிமை, வெள்ளையன்)அராபி யன் உறவுபற்றி காம்யு சாதிக்கும் மெளனம் அவ ரது சிந்தனையின் வரம்புகளை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. இந்த மெளனம் எவ்வளவு கண்ட னத்துக்குரியது என்பதைப் பின்வரும் செய்திகள் நிரூபிக்கும். கொலைச் செயலுக்கு அபத்த உல கில் அர்த்தம் இல்லை என்று கூறிய காம்யு, இரண் டாம் உலகப் போர் நடந்து முடிந்தபின், ஸ்டாலி னிச சோவியத் யூனியன் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கிய பின், கொலை என்பதை' ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். அபத்த உலகில் ஒருவன் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன என்ற நினைப்போடு நம்மைத் தற்கொ லைக்கு உந்தியிருக்க வேண்டும் என்றும், அவ் வாறு நாம் தற்கொலை செய்து கொள்ளாது அபத்த உலகின் அபத்தத்தை நினைத்து வாழ்க் கையை ஒட்டுவது தர்க்கரீதியாக சரியானதல்ல என்றும் அவர் கூறினார். ஒருவன் தான் வாழ்வ தென்று முடிவு செய்தபின், பிறர் கொலை செய் யப்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்று வாதாடிய காம்யு, இந்த முரணான சூழலில் கலக மனப்பான்மையுடன் வாழ்வதில்தான் அர்த்த முண்டு என்றார். 1956 இல் வெளியிடப்பட்ட 'கலகக்காரன்' என்னும் நூலில் இந்த நிலைப் பாட்டை அவர் முன்வைக்கிறார். ஆனால் இதே காலகட்டத்தில் அல்ஜீரிய அராபியர்கள், திட்ட மிட்டமுறையில், பிரெஞ்சு ராணுவத்தால் படு கொலைச் செய்யப்பட்டதை அவர் கண்டிக்க வில்லை; மாறாக பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்துக் கிளம்பிய அல்ஜீரிய விடுதலைப் போராட்டத் தைக் கண்டித்தார். அராபியர்களைப் பற்றிய அவ ரது புரிதல்கள் பிரெஞ்சு இனவாதமும் காலனித்து வமும் வகுத்திருந்த சித்தாந்த சட்டகத்திலிருந்து
காலச்சுவடு
287 ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
பிரிந்து, அராபியர்களின் சமகால வீர வரலாற்றை அங்கீகரிக்கும் வகையில் வளர்ச்சியடையவே இல்லை.

அல்ஜீரியாவில் நிறுவப்பட்ட மிகமோசமான காலனித்துவத்தை காம்யுவினால் எவ்வாறு சகித் துக் கொள்ள முடிந்தது? காலனித்துவத்தின் தீய விளைவுகளைப் பற்றி அதிகம் எழுதவில்லை அவர் என்றாலும் தாம் வாழ்ந்த சூழல் அதர்மச் சூழல் என்பதை உணர்ந்திருந்தார். கொள்ளை நோய் என்ற புதினத்தில், அதர்மச் சூழலில் தார் மீக உணர்வுடன் ஒருவர் வாழ்வது எப்படி என்ற பிரச்சினையை அவர் எழுப்பவே செய்கிறார். ஆனால் அல்ஜீரியாவின் அரசியல் பிரச்சினையு டன் தொடர்புடைய விஷயமாக அவர் அதைக் காண்பதில்லை. இதுபற்றி எட்வர்ட் சய்த் கூறுகி றாா.
 
'காம்யு இங்கு போற்றுவது மனிதர்கள் தம் மைத் தாமே அறிந்து கொள்வதைத்தான்; அதா வது ஒரு மோசமான சூழ்நிலையில், மாயை நீங் கிய முதிர்ச்சியும் தார்மீக உறுதியும் இணைந்த நிலையில் ஒருவர் இருப்பது என்பதைத்தான்'
(Edward Said – "Narrative Geography and Interpretation", NLR 180, March/April 1990, Page 87)

இந்த மோசமான சூழ்நிலையும் ஒரு வர லாற்று விளைவு மானுடர்களின் செயல்பாட்டி னால் ஏற்பட்டுள்ள ஒன்று என்பதை காம்யு ஏற்ப தில்லை. அவரைப் பொறுத்தவரை மானுட வாழ்வு என்பதே ஒரு அவல நிலை; எல்லையற்ற பிரபஞ்சத்தின் அசைக்கமுடியாத அமைதியை, மெளனத்தை எதிர்கொள்ளும் மானுட முயற்சி கள் தோல்வியில்தான் போய் முடிவடையும். இந்த சூழலில் வாழ மானுடர் எத்தகைய நெறிக ளைப் பின்பற்ற வேண்டும், எப்படி வாழ வேண் டும் என்பதைப் பற்றிய ஒரு ஆய்வே கொள்ளை நோய்',

கொள்ளைநோய் இன் கதாநாயகன் மருத்து வன் ரியூ கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டுள்ள
ஒரான் நகரத்தில் பிணிதீர ஓயாது உழைக்கிறான். நோயின் முதல் கட்டங்களிலேயே அதை இனங் கண்டு கொண்டு, மக்களின் நலம் கருதி, ஒரான் நகராட்சியை அவசரகால சட்டங்களை இயற்றும் படி செய்கிறான். ஓரான் நகரத்தின் அன்றாட வாழ்வு படிப்படியாக பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. வெளி உலகுடன் அந்நகரத்துக் குள்ள தகவல், பயணத் தொடர்புகள் துண்டிக்கப் படுகின்றன. ஒரான் நகரம் ஒரு சிறைச்சாலை போல் ஆகிவிடுகிறது. கொள்ளைநோய் ஏற்படுத் தும் மரணத்தைத் தடுப்பதென்பதோ மிகவும் கடி னம். ஒரான் நகரத்தை மரணம் முற்றுகையிடுகி றது. தொடர்ந்து ஏற்படும் சாவுகள், ரியூவையும் அவனுக்கு உதவியாக இருக்கும் டர்ருவையும் பத்திரிகையாளன் ராம்பெர்வையும் வெவ்வேறு விதங்களில் பாதிக்கின்றன.

பாரீஸில் தனக்காகக் காத்திருக்கும் காதலிக் காக ஏங்கும் ராம்பெர், ஒரான் நகரத்திலிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்ற எண் ணத்தில் நகரக்காவல்காரர்கள் இருவரை நாடுகி றான். ஆனால் தப்பிப்போகத் தக்க தருணம் வரும்போது தனது மனதை மாற்றிக் கொண்டு ரியூவிற்கு உதவி செய்வது என்று முடிவு செய்கி

காலச்சுவடு
288
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
றான். நோயினால் அவதியுறுவோருக்குத் தன்னா லான உதவியைச் செய்யாது தப்பியோடினால் அந்த நினைவு தன்னை வாட்டியெடுக்கும் என் றும், தான் சந்தோஷத்தைத் தேடிப் போக, அது வுமே குற்றவுணர்வால் களங்கப்படுத்துவதை தன் னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும் ராம் பெர்கருதுகிறான். இது காதலா, கடடிையா என்ற பிரச்சினைதான் என்றாலும் எக்காரணத்தைக் கொண்டும் காதலைத் துறப்பது நியாயமல்ல என்று ரியூ கூறுகிறான். எனினும் ரியூவுமே தனது மனைவியைப் பிரிந்து வாழ்பவன்தான். மனைவி வேறொரு நகரத்தில் காசநோய்க்காக சிகிச்சைப் பெற்று வந்தாள். ரியூ, ராம்பெர் இருவருமே நோய்வாய்ப்பட்டுள்ள மக்களுக்குப் பணி செய் வதைத் தவிர தம்மால் வேறு எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்திருந்தனர்.

இவ்வகையில் ரியூவின் நிலைப்பாடு இது தான்.தனது மருத்துவப்பணிகள் மூலம் நோயால் வாடிக்கிடப்போருக்கு ஆறுதல் வழங்குவதையே தனது கடமையாகக் கண்டான். தன் தொழிலை அவன் பணிவுடனேயே அணுகுகின்றான். ஒரு வீரனாகவோ மகானாகவோ தன்னை அவன் கரு திக் கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்டுள்ள உலகின் ஒரு நிச்சயம், மரணமும் அது ஏற்படுத் தும் துயரமும்தான். இவற்றை அடக்கத்துடனும் தன்மானத்துடனும் எதிர்கொள்வதையே ரியூ விரும்பினான். மானுடகுலத்தின் துயரத்தில் ஒரு வன் தன்னைத் கரைத்துக் கொள்வதன்மூலம் மர ணத்தைப் பற்றிய பயத்தை நீக்கலாம். மேலும் துயரம் என்பது சாசுவதமானது அல்ல. பழையன வற்றை மறந்து, அவற்றிலிருந்து மீண்டு, எப்பொ ழுதும் போல வாழத் தயங்கமாட்டார்கள் மனிதர் கள் என்பதை ரியூ அறிந்தவன்தான். அவனுக்கு இதுவும் தெரிந்த ஒன்றுதான். மறுபடியும் கொள் ளைநோய் தாக்கும்; கொள்ளைநோய்க் கிருமி முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்று. தனது காலம் வரும் வரை காத்திருந்து மறுபடியும் அது தன் கைவரிசையைக் காட்டும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். இவ்வகையில் பிணி, நோய், மரணம் முதலியன மக்களுக்கெதிராகக் கிளம்பியுள்ள அநியாயங்கள், அநீதிகள் என்பது அவனது புரிதலாக இருந்தது. மரணத்துடன் போராடும் மக்களின் வாழ்விற்கு ஒரு சாட்சியாக ரியூ தன்னைக் கருதிக் கொள்கிறான். அவர்க ளுக்கு ஏற்பட்ட கொடுரத்தை மானுட நினைவில் நிறுத்துவதைத் தனக்கு விதிக்கப்பட்ட பணியாகக் கொள்கிறான்.

கொள்ளைநோய் என்பது மனிதரால் அகற்ற வேமுடியாத ஒன்று என்று கருதுபவன் டர்ரு. தனது இளமைக் காலத்திலிருந்தே மரணத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியவன் அவன். மனி தனே மனிதனின் உயிரைப் பறிப்பதென்பது என் னென்றும் நடந்துள்ளது என்றும், இதுதான், உண் மையில் மனித ஆன்மாவை ஆட்டிப்படைக்கும் கொள்ளைநோய் க்கிருமி என்றும் டர்ரு கருதி னான். இந்த உலகில் கொள்ளை நோயால் பாதிக் கப்படாதவர் மிகச் சிலரே என்பதும் டர்ரூவின் கருத்து. அவன் கூறுகிறான்.

    "நம்மில் ஒவ்வொருவனுக்குள்ளும் கொள் ளைநோய் இருக்கிறது. இந்த உலகில் ஒரு வன் கூட அதிலிருந்து விடுபட்டிருக்க வில்லை. நான் அறிவேன் - நாம் நம் மீது முடிவில்லாத   கண்காணிப்யைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்; இல்லாவிடில் ஒரு நொடி நேர  அஜாக்கிரதையில் நாம் யாரோ ஒருவரது முகத்தில் நமது மூச்சை விட்டு அவ ருக்கு நோயைத்     தொற்ற வைத்துவிடுவோம். இயல்பானது நுண்கிருமி மட்டுமே. மற்றவை அனைத்தும் -  ஆரோக்கியம், நேர்மை, தூய்மை (வேண்டுமானால் இதையும் சேர்த் துக் கொள்வோம்) -   மானுட சித்தத்தின் விளைபொருள்கள்தான்,ஒரு போதும் தடுமா றக் கூடாத உஷார் நிலையின்   விளைபொருள் கள்தான். யாருக்குமே நோயைத் தொற்ற வைக்காத ஒரு நல்ல மனிதன், மிக    அற்புத மான அளவிலேயே கவனக்குறைவு உடைய வன். இந்த கவனக் குறைவைத் தவிர்க்க    மகத் தான மனோதிடமும் எப்போதும் விழித்திருக் கும் மனமும் தேவை. ஆமாம் ரியூ கொள்ளை
காலச்சுவடு
289
ஆண்டுமலர் 19911
படிப்பகம்
________________

www.padippakam.com
    நோயால் பீடிக்கப்பட்டிருப்பது என்பது சோகமான விஷயம்தான். ஆனால் மேலும் சோர்வு         தரக்கூடியது கொள்ளைநோயால் பீடிக்கப்பட்டிருப்பதை மறுப்பதுதான். இத னால்தான் உலகத்தில்         எல்லோரும் அவ்வ ளவு சோர்வடைந்திருக்கிறார்கள். எல்லோ ருமே கொள்ளை நோயால்         அனேகமாக சலிப்படைந்துவிட்டனர். எனவேதான் கொள்ளைநோயை நம்மிடமிருந்து வெளி         யேற்ற விரும்பும் நம்மைப்போன்ற ஒரு சிலர் மனக்கசப்பூட்டும் சோர்வை உணர்கிறோம்.     இச்சோர்விலிருந்து விடுதலை என்பது மர ணத்தின் மூலமே தவிர வேறு வழியில் இல்லை."
    (Albert Camus, Collected Fiction of Albert Camus. P. 218)

ராம்பெர், ரியூ டர்ரூ ஆகிய மூவரும் காம்யு வின் சிந்தனையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றனர். மரணம், மரணத்தை சலனமின்றி, எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி எதிர்நோக்கும் மானுடன் அநீதி, அநீதியால் பாதிக்கப்பட்டோருடன் தன்னை ஐக்கியப்படுத் திக் கொள்ளும் மானுடன் துயரம், துயரத்தைப் போக்குவதை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ளும் மானுடன்.டர்ரு. ரியூ, ராபெர் ஆகிய மூவரும் காம்யுவின் "கலக மனிதனின் வெவ்வேறு அம் சங்களைப் பிரதிநித்துவம் செய்கின்றனர்.

காம்யு கொள்ளைநோய் என்பதை ஒரு ஆன் மீக, தத்துவ, மெய்ப்பொருள் (Metaphysical) பிரச்சினையாகவே சித்தரிக்கிறார். கொள்ளை நோயின் தன்மை, இதனால் பாதிக்கப்பட்ட உடல் படும் அவதி, நோயைப்போக்கமேற்கொள்ளப்ப டும் மருத்துவம், நோய் பரவுவதைத் தடுக்க எடுக் கப்படும் முயற்சிகள், இயற்றப்படும் சட்டங்கள், நிறுவப்படும் தற்காலிக நோய்த்தடுப்பு முகாம் கள், ஒரான் நகரத்தின் போக்குவரத்தும் பரஸ்பரத் தொடர்பும் கறாராக வரையறுக்கப்பட்டிருந்த விதம் ஆகியன பற்றிய செய்திகளும் பெளதீக விவரங்களும் இங்குத் தரப்பட்டுள்ளன என்பது உண்மைதான். ஆனால் கொள்ளைநோய் ஏற்ப டுத்தும் வேதனை, முடிவில் ஆன்மீக வேதனை யாகவே விளக்கப்படுகிறது. நகர நீதிபதி ஒத் தோனை எடுத்துக் கொள்வோம். சட்டம், ஒழுங் கைக் காப்பவர் அவர் ஒரானில் குற்றவாளிகள் யார், குற்றமற்றவர்கள் யார் என்பதை முடிவு செய்ய அவருக்கு உரிமையுண்டு. மரணத்தீர்ப்பு அளித்து நீதி' யை நிலைநிறுத்த அவருக்கு அதி காரம் உண்டு. கொள்ளைநோயால் அவரது மகன் இறந்துவிடுகிறான். மரணத்தை இனி தன்னால் வெல்ல முடியாது, இனி தான் மரணத்தின் அதிப தியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தவ ராய் அவர் நோய்த்தடுப்பு முகாம்களில் சேவை செய்வதென்று முடிவு செய்கிறார். ஓதோனின் மனமாற்றம் அவரது தனிப்பட்ட வேதனையி னால் ஏற்பட்ட ஒன்றுதான் என்றாலும், நீதிபதி யான அவர் சமூகத் தொண்டராக மாறுவதையே குறிக்கிறது. தீர்ப்பு வழங்குபவன் வாழ்க்கை வழங்கக் கூடிய இறுதித்தீர்ப்பை எதிர்நோக்கி வாழ்கிறான். கொள்ளைநோயில் வரும் மற்ற கதாபாத்திரங்களுங்கூட கிறித்தவப் பாதிரியார், அரசு குமாஸ்தாக்கள், கோத்தார் ஆகியோர் - கொள்ளைநோயை ஒரு மருத்துவப் பிரச்சினை யாகப் பார்ப்பதில்லை. சமூகத்துடன் தமக்குள்ள உறவைப் பற்றிய உணர்வை கொள்ளை நோய் மிகத் தெளிவாக தமக்கே படம்பிடித்துக் காட்டி யுள்ளதாகவே இவர்கள் கருதினர்.

ஆனால், நாம் இங்கு கேட்க விரும்பும் கேள்வி இதுதான் கொள்ளைநோய் என்பது 'மானுட நிலைமை யை விளக்குவதற்கான ஒரு உருவகமாகச் செயல்பட்டாலும், இந்த கதை நிகழ் வதோ ஒரு குறிப்பிட்ட அல்ஜீரிய நகரத்தில்தான். ஆனால் இந்நகரத்தின் தனித்தன்மை பற்றி நமக்கு எதையும் ஆசிரியர் தெரியப்படுத்துவதில்லை. 'மரங்களற்ற, கவர்ச்சியற்ற, ஆன்மாவற்ற ஒரு நகரமாக ஓரான் சித்தரிக்கப்படுகிறது. இதற் கென்று விசேஷ அம்சங்கள் எதுவும் இல்லை.சதாசர்வகாலமும் ஒய்ந்துகிடக்கும் இந்நகரம் பெயரளவிலும் தட்பவெப்ப ரீதியாகவும் மட்
காலச்சுவடு
290
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
டுமே ஒரு அல்ஜீரிய நகரம். ஆனால் இங்கு அரா பியர்களும் ஆப்பிரிக்கர்களும் வாழ்கின்றனர் என்பது எங்குமே சொல்லப்படுவதில்லை - ஒரு இடத்தில் தவிர ரியூவைச் சந்திக்க வரும் ராம் பெர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, நகரத்தில் அராபியர்கள் வாழும் பகுதியி லுள்ள வீட்டு வசதிகள், வாழ்க்கை நிலைமைகள் ஆகியன பற்றி அறிந்து கொள்வதற்காக தான் ஒருமுறை ரியூவை அணுகி உதவி கோரியதாகக் கூறுகிறான். ஆக, ஒரானில் 'அராபியர் பகுதி' ஒன்று இருந்தது என்பது இப்படித்தான் நமக்கு தெரியவருகிறது. ஆனால் ஒரானை ஒரு பிரெஞ்சு நகரமாகவே கதாசிரியர் சித்தரிப்பதால், "ஒரான் ஒரு அராபியப்பெயர், அது ஒரு அராபிய நகரம்' என்ற எண்ணம் வாசகருக்கு 'சட் டென்று உதிப்ப தில்லை.

ஒரான் ஒரு அராபிய நகரம் என்பதை காம்யு திட்டவட்டமாகச் சொல்லாததற்குக் காரணம், அல்ஜீரியச் சூழலை இங்கு அவர் ஒரு குறியீடா கப் பயன்படுத்துவதால்தான். இதன் காரணமா கவே அவர் நகரத்தின் பொருண்மை அம்சங் களை, குறிப்பாக அங்குவாழ்ந்த அராபியர்களின் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி மெளனம் சாதிக்கிறார். அவற்றைப் பற்றி அவர் எழுதியிருந் தால் ஒரான் ஒரு ரத்தமும் சதையுமான, வரலாற்று வெளியில் அமைந்துள்ள ஒரு நகரமாய் மாறியி ருக்கும். இருத்தலியல் பிரச்சினைகளை எழுப்பு வதற்கு தகுந்த களமாக இருந்திராது என்றாலும் இங்கு அராபியர்களும் இருந்தனர் என்பதற்கு கொள்ளைநோய் புதினத்திலேயே ஒரு சான்று இருப்பதால், நாம் சில கேள்விகளை முன் வைப் போம்:
 
    -கொள்ளை நோய், அராபியர்களையும் பாதித்ததா? பாதிக்கப்பட்ட அராபியர்கள், உடல்     வேதனையுடன் மன உளைச்சலையும், தர்ம சங்கடங்களையும் அனுபவித்தனரா?

    - கொள்ளைநோய் பரவுவதைத் தடுக்க மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள், இயற்றப்பட்ட     சட்டங்கள், நிறுவப்பட்ட கட்டாய நோய்த்தடுப்பு முகாம்கள் அராபியர்களின் அன்றாட வாழ்வை         எவ்வகையில் பாதித்தன?

    - ரியூவின் மருத்துவம் அவர்களுக்கும் ஆறு     தல் அளிக்கக் கூடியதாக இருந்ததா?

காம்யுவைப் பொறுத்தவரை கொள்ளை நோய் ஒரு மனவியாதியும் கூட அல்லவா? அது அராபியர்களையும்கூடப் பாதிக்கத்தான் செய் தது. ஆனால் அராபியர்கள் அனுபவித்த வேதனை ஒரு மனவேதனை மாத்திரம் அல்ல. காலனித்துவம் மிக கொடுரமான கொள்ளை நோய். அது ஏற்படுத்திய மரணமும் துயரமும் அராபியர்களின் வாழ்வுடனும் உடலுடனும் இரண்டறக் கலந்துவிட்டவை. டர்ரூவைப் போல் மரணத்தை ஒரு தத்துவப் பிரச்சனையாக அராபி யன் பார்க்கவில்லை. அது அவனுக்கொரு அன் றாடப் பிரச்சினை. காலனி ஆட்சியையும் அதன் அதிகார மையங்களையும் வெறுக்கப் பழகியி ருந்த அராபியர்கள், அவர்களின் நன்மை' க்காக ஏற்படுத்தப்பட்ட விதிகளையும் நியதிகளையும் சந்தேகக் கண்கள் கொண்டே பார்த்தனர். வெள் ளையனால் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் தமது தனி வாழ்வை, குடும்ப அமைப்பை, தமது பண்பாட்டை, தமது வாழ்வு முறையை மாற்றிய மைக்கக் கூடியவை, தனது அடிப்படை உரிமைக ளைப் பறிக்கக் கூடியது என்பதை அராபியர்கள் அறிந்திருந்தனர். காலனியாளர்களின் சேவைப் பணிகளையுமே அராபியர்கள் தமக்கெதிராக செயல்படுவனவாகக் கண்டனர். அவர்கள் ரியூ வின் மருத்துவ சிகிச்சையை வேதனை தீர்க்கும் சுயநலமற்ற பணியாகக் கருதி அதைப் பாராட்டி யிருக்க மாட்டார்கள். ஃபிரான்ஸ் ஃபேனோன் எழுதுகிறார்:
 -
    'அல்ஜீரியாவில், ஒரே சமயத்தில், இனவா தம், அவமானம் ஆகியவற்றுடன் மேற்கத் திய         மருத்துவமும் புகுத்தப்பட்டது. அது ஒரு ஒடுக்குமுறை அமைப்பின் பகுதியாக இருந்த         காரணத்தால், சுதேசியின் மனதில் எப்போ தும் குழப்பமான அபிப்பிராயத்தையே அது         உருவாக்கியது. இந்தக் குழப்பத்தை உண்மை
| காலச்சுவடு
29 |
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com
    யில் ஆக்கிரமிப்பாளரின் ஆதிக்க வடிவங்க ளுடன் தொடர்புபடுத்தியே புரிந்து கொள்ள முடியும்.       
    காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டவன் காலனித்துவ ஆட்சியாளர்களின் எல்லா சாத         னைகளையுமே ஒரு இழிவான பொருளிலும் ஒரு அதீதமான கண்ணோட்டத்திலும் மட் டுமே         பார்க்கும்படியான வகையில் காலனி யச் சூழல் செயல்படுகிறது. காலனித்துவ         ஆட்சிக்குட்பட்டவன் மருத்துவரையும், பொறியியலாளரையும், பள்ளி ஆசிரியரை யும் தன்னோடு ஒன்றிவிட்ட குழப்பம் என்ற மங்கலான திரையினூடாகவே காண்கிறான். கிராமத்திற்கு மருத்துவர் மேற்கொள்ளும் கட் டாயமான வருகைக்கு முன்னர் போலீஸ் அதி காரிகள் மூலம் கிராம மக்கள் பொதுவான இடத்திற்குக் கொண்டுவரப்படுகின்றனர். இத் தகையதொரு பொதுவான நிர்ப்பந்தம் நில வும் சூழ்நிலையில் இங்கு வந்து சேரும் மருத் துவர், நிச்சயமாக நாட்டு மருத்துவராக இருக் கமாட்டார். மாறாக, அவர் ஆதிக்க சமுதாயத் தைச் சேர்ந்த மருத்துவராக அநேகமாக ராணுவ மருத்துவராக இருப்பார்.

 சுகாதார மேம்பாடுகள் பற்றிய புள்ளிவிவரங் கள் நோய்க்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த வெற்றியாக சுதேசிகளால் கருதப்ப டவில்லை. மாறாக, தமது நாட்டின் மீது ஆக்கி ரமிப்பாளர்களின் பிடிப்பு விரிவடைந்ததற் கான சான்றுகளாகவே அவற்றை அவர்கள் பார்க்கிறார்கள்(Franz Fanon, "Medicine and Colonialism, “in A Dying colonialism". p. 12 1)

ஓரினின் அராபியர்கள் பற்றி மெளனம் சாதிக்கும் காம்பு, ஒரானை அங்கு வாழ்ந்து வந்த பிரெஞ்சு மக்களின் இயல்பான 'தாயகமாக சித்த ரிக்கிறார் கொள்ளைநோய் ஏற்படுத்திய பீதி நீங் கிய பின் தாங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது எண்ணிய எண்ணங்கள், அனுபவித்தஏக்கங்கள், வேட்கைகள் முதலியவற்றை நினைவு கூர்ந்தும், நாடு கடத்தப்பட்டவர்கள் தமது தாயகத்திற்குத் திரும்பிவருபவர் போல குதூகலித்துமே, ஒரான் நகரவாசிகள் தமது தற்காலிக சிறைச்சாலை'யின் வரம்புகளைக் கடக்கின்றனர். அவர்கள் ஒரான் நகரத் தெருக்களில் வளைய வந்து தமது மனங்க ளில் இதுநாள் வரைக்கும் முடங்கிக் கிடந்து அன் பையும் ஆசையையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்தக் காட்சியுடன் தன்னை இணைத்துக் கொள் ளும் ரியூ அவர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பி வந்து விட்டார்கள் என்று கருதுகிறான். கொள் ளைநோயால், பாதிக்கப்பட்டவரின் நினைவும் வேட்கையும் தமது ஆசைக்குரியதை அடையும் தருணத்தில் ஒரான் நகரம் உயிர்பெறுகிறது. ஒரான் நகரம் மாற்றானின், அராபியனின் இல்லம் என்ற உணர்வுக்கு இங்கு இடமில்லைதான். பிரெஞ்சு காலனியாளர்கள் வாழும் ஒரு வெளி' யாகவே சித்தரிக்கப்படும் ஒரான் காலனியாளர்க ளின் கற்பனையில், வேட்கைகளில் ஒரு தாயக மாக காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில், ஒரான் யாருடைய இல்லம்? தாயகம்? அராபியர் கள், அயலானின் ஆதிக்கத்திற்குட்பட்ட தமது மண்ணை நினைவிலும் நெஞ்சிலும் நிறுத்தியே அம்மண்ணின் விடுதலைக்காகப் போராடத் துணிந்தனர். ஆனால் தமது தாயகத்தை மீட்டு எடுக்க அன்பும், ஆசையும், நினைவும் மாத்திரம் அவர்களுக்குப்போதுமானதாக இருக்கவில்லை. ஏனெனில் அராபியர்கள் விரும்பிய தாயகம் அவர்கள் கற்பனையில் மலர்ந்து நினைவில் பூத்த மலர் அல்ல. காம்யுவின் பார்வையில் அல்ஜீ ரியா, ஆப்பிக்கக் கண்டத்தின் வரைபடத்திலுள்ள ஒரு பெயர் அல்ஜீரியா, அதன் கடல், கடற்கரை கள். அதன் மத்தியதரைக் கடல் பண்பாடு (இது வுமே கிரேக்க மோகம் கொண்டிருந்த காம்யுவின் கற்பனையில் வளர்ந்த ஒன்று) இங்கு ஒருவன் மேற்கொள்ளக்கூடிய சிற்றின்ப வாழ்க்கை - இவை அல்ஜீரியாவை பிரெஞ்சு பூர்ஷவா உலகத் திற்கு ஒரு மாற்று உலகாக காம்யுவிற்குக் காட் டின. ஆனால் காம்யு காணத் தவறியது இதைத் தான் ஐரோப்பியர்கள் வரைபடங்கள் தயாரித்து அவற்றில் அல்ஜீரியா என்ற பெயரை பொறித்த தற்கு முன்னும் (அதற்குப் பின்னும்) ஒரு அல்ஜீ ரிய நாடும், நாகரிகமும், பண்பாடும் இருந்தன, இருந்து வருகின்றன. ஆகையால் அராபியர்கள்
காலச்சுவடு
292
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________

www.padippakam.com

தேடிய தாயகம் ஐரோப்பியக் கற்பனைக்கு அப் பால் நிலவிய தனித்தன்மையுடைய வேறொரு
உலகம்.

அல்ஜீரியாவின் தனித்தன்மையை, அதற்கே வுரிய வாழ்வுமுறைகளை அங்கீகரிக்காத காம்யு அல்ஜீரியாவின்பால் வெள்ளையர்களுக்கு இருந்த அலாதியானக் காதலைப் பற்றி மாத்திரம் குறிப்பிடுகிறார். 'விருந்தாளி' அவரது சிறுகதைக ளில் ஒன்று. இதில் இடம்பெறும் முக்கிய கதாபாத் திரம், பள்ளி ஆசிரியன் டாரு. மெர்சோவைப் போன்றவன்தான் அவனும். தனிமையில் வாழ்ந்து வந்தவன். ஒரு நாள் இரவு அல்ஜீரிய விடுதலைப்போர்துவங்கியப் பின்னர், ஒரு அரா பியன் டாரூவின்பொறுப்பில் ஒப்படைக்கப்படுகி றான். டாரு அவனைப் பொழுது விடிந்ததும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண் டும். பொழுது விடிகிறது. அராபியனின் வாழ்க் கையிலும் அவனது பிரச்சினைகளிலும் தலையிட விரும்பாது டாரு அராபியனைத் தனியே காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கிறான். அராபி யன் செல்லும்முன் பள்ளி அறையொன்றின் கரும் பலகையில் எழுதிவிட்டு செல்கிறான், நீ உனது சகோதரனை கைவிட்டு விட்டாய். இதன் பயனை நீ அனுபவிப்பாய்' என்று. ஆனால் சிறிதும் சலன மடையாத டாரு அல்ஜீரியப் பாலைவனத்தின் பரந்த வெளியை வெறித்துப் பார்க்கிறான். அரா பியன் சிறை நோக்கிச் செல்கிறான். யார் இங்கு வேண்டாத விருந்தாளி - டாரூவா, அராபியனா? அபத்த உலகம் பற்றிப் பேசும் காம்யுவின் அரசி யல் நிலைப்பாட்டில் எந்தவொரு குழப்பமும் இல்லை. இந்தக் கதையிலுமே அராபியனின் மண் உரிமையை அவர் அங்கீகரிப்பதில்லை. மாறாக டாரூவுக்கு அம்மண்ணின் மீது இருந்த காதலைப் பற்றி மட்டுமே பேசுகிறார். -

காம்யு சாதிக்கும் மெளனங்கள் தனிப் பட்ட மனிதனின் சிந்தனையின் வரம்புக ளைக் குறிப்பன மட்டும் அல்ல. அவர் சொல் லாமல் விட்டவை காலனித்துவ சிந்தாந்தங்க ளாலும் மூடி மறைக்கப்பட்டவைதான். கால னித்துவம் தான் ஆதிக்கம் செலுத்தி வந்த நாடுகளை கன்னி நிலங்களாக, அதாவது, நாகரிகம் இன்னமும் குடியேறாத இடங்க ளாகக் கண்டது. வெள்ளைக்காரர்கள் இந்நா டுகளை வேறு நாகரிகங்களின், பண்பாடுக ளின் உறைவிடமாகக் காணவில்லை. மாறாக, தமது ஏகாதிபத்தியத் தாபங்களும், வேட்கை களும் கற்பனையும் நிறைவு பெறுவதற்கான களமாகவே அவற்றைக் கண்டனர். காம்யு வின் சிறுகதைத் சோரம் போனவளி'ல் வரும் யானின் என்ற பிரெஞ்சுப்பெண்மணி அல்ஜீரி யப் பாலைவனத்தின் பரப்பில் தனது ஆளு மையை, பெண்மையை உறுதி செய்து கொள் கிறாள். யானின் ஒரு சராசரிப் பெண். அவ ளுக்கு திருமணமாகி இருபது வருடங்க ளுக்கு மேல் ஆகியிருந்தன. அவளது கண வன், அவள் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒருவன், ஒரு விற்பனையாளன். ஒருமுறை யானினின் கணவன் ஊர் ஊராகச் சென்று தனது சரக்குகளை விற்கப் புறப்படு கையில், யானினும் அவனுடன் செல்கிறாள் - அவளது வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்கள் பாலைவனத்தின் விளிம்பில் உள்ள ஒரு சிற்றுரில் ஒரு இரவு தங்க வேண்டிவருகி றது. பயணக் களைப்பு யானினை தளரச் செய் தாலும் அவ்வூரிலிருந்த ஒரு பழங்கோட் டையை அவள் பார்க்க விரும்புகிறாள். பய ணம் முழுவதிலும் இனந்தெரியாத சோகமும், பயமும் யானினை ஆட்கொண்டிருந்தன. மாலைநேர வெய்யிலில் அவளும் அவளது கணவனும் கோட்டைக்குச் செல்கின்றனர். கோட்டையின் உச்சியை அவர்கள் அடை கின்றனர். கீழே அவர்கள் பார்வைக்கென்றே
|
விரிந்து கிடந்தாற்போல் ஒரு பரந்தபாலைவ னக் காட்சி, யானின் உடலும் உள்ளமும்பதை பதைக்க அக்காட்சியை ரசிக்கிறாள்.
 
 'பொழுது சாயச்சாய வெளிச்சம் தளர்ந்து மென்மையானது; அது படிகநிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறியது. அதே சமயத்தில் தற்செயலாக அங்கு வந்து சேர்ந்த பெண் னின் மனத்தில், காலம், பழக்கம், சலிப்பு ஆகியவை உருவாக்கியிருந்த முடிச்சு மெல்ல அவிழத் தொடங்கியது. நாடோடிக ளின் முகாமை அவள் பார்த்தவண்ணம் இருந் தாள். அங்கு வாழ்ந்து வருபவர்களை அவள் பார்த்தது கூட இல்லை. கறுப்புக் கூடாரங்க ளில் சலனம் ஏதும் இல்லை. எனினும் அவர்க ளைப் பற்றிதான் அவளால் நினைக்க முடிந் தது - இந்த நாள் வரை அவள் தெரிந்து கொள் ளாதிருந்த அவர்களைப் பற்றித்தான். வீடற்ற வர்களாய், உலகத்திலிருந்து துண்டிக்கப்பட் டவர்களாய், அவளது கண்களுக்குத் தெரிந்த பரந்த நிலப்பரப்பில் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஒரு சிலரே அவர்கள். இந்தப் பரந்த நிலப்பரப்போ இன்னும் பெரியதொரு வெளியின் மிக அற்பமான பகுதியே. இந்தப் பெரிய வெளி நெளிந்து சுளிந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தென் பகுதியில், நதி யொன்றினை அனைத்துள்ள காடொன்றில் போய் முடிகிறது.

 காலம் தோன்றிய முதல், முற்றிலும் சுரண்டி யெடுக்கப்பட்ட இந்த எல்லையில்லாத நிலத் தின் காய்ந்த மண்ணில், ஒரு சில மனிதர்கள் விடாது பயணம் செய்து வந்துள்ளனர் -உடைமைகள் ஏதுமின்றி, யாருக்கும் அடிப ணியாதவராய், வறுமையால் பீடிக்கப்பட்டு, ஆனால் ஒரு வினோதமான ராஜ்யத்தின் சுதந் திர மன்னர்களாய் இந்த எண்ணம் ஒரு இனிய, பெரிய சோகத்தை தன்னுள் ஏற்படுத் தித் தனது கண்களை மூட வைத்தது ஏன் என் பது யானினுக்குத் தெரியவில்லை.'(AlbertCamus, The collected Fiction of Albert Camus, P. 321)

யானினின் மனதை நெகிழச்செய்யும் இக்காட்சியில் அராபிய நாடோடிகளும் இடம்பெறுகின்ற னர். ஆனால் அவர்கள் மாறாத தன்மையுடைய வர்களாய், வரலாற்றிற்கு வெளியே வாழ்பவர் கள். யானின் மனதில் மென் உணர்வுகளைத் துண் டும் இந்தப் பாலைவன நாடோடிகள் அவளது கற்பனையில் சஞ்சரிக்கும் அவளது வேட்கையின் பிரதிபிம்பங்களே தவிர ரத்தமும் சதையுமான மனிதர்கள் அல்ல. யானின் நள்ளிரவில் மீண்டும் கோட்டைக்குத் தனியாக வருகிறாள். கோட்டை உச்சிக்குச் சென்று மலையில் அவள் கண்டு ரசித் தக் காட்சியை நினைவில் நிறுத்தி பாலைவனத் தின் பரப்பில், அதன் அமைதியில் இரண்டறக் கலந்து விடுகிறாள். மாலையில் அவளை வாட் டிய 'இனிய பெரிய சோகம் பீறிட்டு வெளிவருகி றது:
 
“பயத்திலிருந்து, பித்துப் பிடித்தவளாய், போவது எங்கு என்று தெரியாதவளாய் பல் லாண்டுகாலமாக ஓடிய பிறகு அவள் ஒரு நிலைக்கு வந்தாள். அதே சமயம் தனது மூலா தாரங்களை தான் திரும்பப் பெறுவது போல அவளுக்குத் தோன்றியது. அவளது உடலில் புத்துயிர் பாய்ந்தது. அவளது உடல் நடுக்கம் நின்றது. மதில் சுவர் மீது தனது வயிற்றை அழுத்திய அவள் நகரும் வானத்தை நோக் கித்தனது உடலை நீட்டிநிமிர்த்தினாள். தனது படபடக்கும் இதயம் அமைதியடைந்து தன் னுள் மெளனம் குடிகொள்ளவே அவள் காத் திருந்தாள். நட்சத்திர மண்டலங்களின் கடைசி நட்சத்திரங்கள் பாலைவனத்தின் தொடுவானத்தில் சற்றுத் தாழ்வாக, அசைவற் றுக் கிடந்தன - தமது ஒளியைச் சிந்தியவாறு. பிறகு, தாங்கொணாத மென்மையுடன் இர வெனும் தண்ணீர் யானினினுள் பாய்ந்தது. குளிரை மூழ்கடித்தது. அவளது ஜீவனின் மையத்திலிருந்து மெல்ல மெல்ல எழுந்தது அது அலை அலையாகப் பொங்கி வழிந்து, முனகும் அவளது வாய்வரைக்கும் எழுந்தது. அடுத்தகணம், வானம் முழுவதுமே அவள் மீது கவிழ்ந்து கிடந்தது. அவளோ குளிர்ந்த மண்ணில் மல்லாக்காக விழுந்து கிடந்தாள்.' (Albert Camus, The Collected fiction of Albert camus, p. 324-325)

ஒரு குட்டி பூர்ஷ்வாதாம்பத்திய வாழ்வு அவ ளுக்கு வழங்க இயலாத இன்பங்களை இந்தக் கன்னி நிலத்திடமிருந்து அவள் பெறுகிறாள். இது எவ்வாறு சாத்தியமாகிறது? வெள்ளையர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் காலனித்துவ சூழலில், வெள்ளை இனப் பெண்ணும் இந்த ஆதிக்கத்தின் பயன்களைப் பெறுகிறாள். குடும்ப வாழ்வில் ஒரு மனைவியாக, கணவனைச் சார்ந்தே வாழ வேண்டிய அவள், காலனியச் சூழ லில், காலனி ஆட்சிக்கு அடிபணிந்து கிடக்கும் சுதேசிகளின் மீது தன்னால் அதிகாரம் செலுத்த முடியும் என்பதை உணர வருகிறாள். இந்த உணர்வு அவளது ஆளுமையை அவள் உறுதி செய்து கொள்ள உதவுகிறது. இவ்வாறு செய்வ தால் பூர்ஷ்வாக் குடும்ப உறவுகளைக் கடந்து தனது தனித்தன்மையை வெளிப்படுத்தும் போதும், கணநேரமே நீடிக்கும் இவளது விடு தலை உணர்வு பிறத்தியானின் அடிமைத்தனத்தி னாலேயே சாத்தியமாகிறது.

காம்யு சொல்லாமலே விட்டவற்றை நாம் தொகுத்துக் கூறுவதென்றால்:

மெர்சோ வழும் அபத்தமான உலகம், ரீயூ வின் சாதாரண நகரம், யானின், டாரு ஆகி யோரின் உலகம், ரீயூவின் சாதாரண நகரம், யானின், டாரு ஆகியோரின் மனதுக்கு போதையூட்டும் பரந்த பாலைவனம்; அல்ஜீரி யக் கடற்கரைகள் - இவை வேறொரு நாகரி கத்தின் உறைவிடங்கள். வேறு வரலாறுகளின் க்ள்ங்கள்.காம்யுவின் கதாபாத்திரங்களின் கற் பனை சிறகடித்துப் பறக்கக் காத்திருக்கும் கன்னி நிலங்களோ, வெற்று வெளிகளோ அல்ல. மெர்சோ செய்த கொலை அர்த்தமற்ற செயல் அல்ல. காலனித்துவச் சூழலில் வெள் ளையனின் ஒவ்வொரு செயலும் அவனை ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளனாகவே காட்டு கிறது. மெர்சோ செய்த கொலை வெள்ளைய னின் அதிகாரத்தின் ஒரு வெளிப்பாடே. கொள்ளைநோய், அதற்கான சிகிச்சை - இவற்றைக் கொண்டு ஒரு தார்மீகப் பிரச்சி னையை காம்யு எழுப்புவதாக அவரது விசு வாசிகள் கூறலாம். ஆனால் காம்யு எழுப்பும்
பிரச்சினை மானுடகுலம் முழுவதற்கும் பொதுவான ஒரு தார்மீகப் பிரச்சனையல்ல. தனது செயல்களுக்கு பொறுப்பு ஏற்க விரும் பாது, தமது காலனித்துவ அரசியல் உருவாக் கிய நிர்பந்தங்களை தார்மீக நிர்பந்தங்களாக மட்டுமே காண முயற்சி செய்தவரின் பிரச் சினை மாத்திரமே இது.

ஒருவர் சொல்லாததைக் கொண்டு அவர் சொல்ல வந்ததை மதிப்பீடு செய்வது எந்த அள வுக்கு நியாயமானது என்ற கேள்வி எழலாம். ஆனால், பேச்சும் மெளனமும், ஒன்றை ஒன்று நிர்ணயிப்பதை நாம் காண வேண்டும். ஒரான் ஒரு அராபிய நகரம் என்று காம்யு சொல்லாததால் தான் அதனை ஒரு பிரெஞ்சு நகரம்ாக அவரால் காணமுடிகிறது. தனது அராபியக் கதாபாத்திரங்க ளுக்கு ஒரு பெயரைக்கூட காம்யு வழங்காததால் தான் அவர்களை பிறத்தியார்களாக, வெறும் உடல்களாக சித்தரிக்க முடிகிறது. அல்ஜீரியாவை பிரெஞ்சு காலனித்துவம் வலுக்கட்டாயமாக தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது என்ற வரலாற்று உண்மையை காம்யு வெளிப்படையா கச் சொல்லாததால்தான் அவரது கதைகளில் பொதிந்திருக்கும் இனவாத அரசியல், மனிதநேய மாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

காம்யுவின் படைப்புகளுக்கு புதிய அர்த்தங்க ளைக் கற்பித்து, அவரது எழுத்துக்களில் காணப்ப டும் இடைவெளிகளை நிரப்பிவிடலாம் என்ப தல்ல நாம் சொல்ல வருவது. காம்யுவின் மனித நேயம், அது சாத்தியப்படுத்திய கலை - இவற்றை ஏன் நாம் கடும் விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காட் டவே நாம் இங்கு முயற்சி செய்துள்ளோம். ஐரோப்பா தனது மிகச் சமீபகால வரலாற்றை மறந்து, ஜனநாயகம், மனிதநேயம், சமத்துவம் முதலியவற்றின் இயல்பான உறைவிடமாகத் தன்னை பிரதிநிதித்துவம் செய்து வரும் ஒரு சூழ லில், ஐரோப்பாவின் குற்றங்களை நாம் நினைவுப டுத்திக் கொள்வது அவசியமாகிறது.
காலச்சுவடு
295 ஆண்டுமலர் 1991



6. மெர்சோ மறுவிசாரணை - காமெல் தாவுத்


ந்நியனை வாசித்துவிட்டு என்னை மெர்சோவாக உருவகப்படுத்திக்கொண்டு வெயில் தகிக்கும் கோடையின் பகற் பொழுதுகளில் கை விரல்களைத் துப்பாக்கியாகக் கருதியபடி கடற்கரை மணலில் பெயரற்ற அந்த அரேபியனைத் தேடி அலைந்த பொழுதுகளை நினைத்துப் பார்க்கிறேன். இருத்தலியத்துக்கும் அபத்தத்துக்கும் கிளர்ச்சிக்கும் இடையேயான இடைவிடாத உரையாடலாக காம்யுவின் வார்த்தைகளில் சிக்குண்டு, வாழ்வின் அபத்தங்களை இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறேன்.

‘அந்நிய’னைத் தொடர்ந்து ‘வீழ்ச்சி’, ‘முதல் மனிதன்’, ‘கிளர்ச்சியாளன்’ என்று நீண்ட காம்யு மீதான தேடல் வாழ்வின் அபத்தம் குறித்த தேடலாகத் தொடர்கின்றது. காம்யுவை விட்டு விலகி ஓடுவதென்பது எத்தனை முயற்சி செய்தும் இயலாத ஒன்றாகவே  இருக்கின்றது. காரணம், காம்யு எனும் வார்த்தை ஒரு தனிமனிதனையோ எழுத்தாளனையோ குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல, அது அபத்தவாதத்தின், கிளர்ச்சியின், வாழ்க்கை பற்றிய தேடலின் குறியீடு. வாழ்வின் அல்லது வாழ்க்கை என்று சொல்லப்படுவதின் அபத்தங்களை அதன் படிநிலைகளை இடைவிடாது உடைத்து விசாரிக்கும் காம்யுவின் பிரதிகள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே நிகழும் பயணமான ‘இருப்பு’குறித்தான விசாரணைகளாகவும், அந்த இருப்பு எப்படி ஏதுமற்றதாகவே இருந்து மறைகின்றது என்பதையும் தொடர்ந்து பேசுகின்றன.  இந்த சூன்ய நிலைக்கும் கிளர்ச்சி நிலைக்கும் இடையே ஊடாடுபவையாகத்தான் காம்யுவின் படைப்புகள் இருக்கின்றன. 

கொலை என்பது சமூகக் கட்டமைப்பின்படி குற்றம். ஆனால் அதே கொலை ஓர் இடத்தில் அதாவது போர்ச் சூழலில் வீரமாகவும் குற்றமற்றதாகவும் இருக்கின்றது; இன்னும் சொல்லப்போனால் போரில் வென்றவர்களின் கொலைகள் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. அந்தக் கொலைகளைச் சமூகம் கொலைகளாய்ப் பார்ப்பதில்லை; கொலைக்காரர்கள் தண்டிக்கப்படுவதில்லை; நகைமுரணாக அவர்கள் கொண்டாடப்படுகின்றனர். ஆனால் போர் இல்லாத அமைதிச் சூழலில் ஒரு கொலை கொலையாகவும் குற்றமாகவும் கருதப்படுகின்றது; அதுவும் பல நேரங்களில் கொலை செய்தவரின் அதிகாரங்களைப் பொறுத்து அது கொலையா அல்லது இல்லையா என்று முடிவு செய்யப்படுகின்றது. அநேக நேரங்களில் அரசு செய்யும் கொலைகளைத் தண்டனை எனும் வரையறைக்குள் அணுகும் தன்மையாகவே சமூகம் கொண்டுள்ளது. கொலைச் செயலின் இம்மாறுபட்ட பார்வைகளை காம்யூ அபத்தம் என்கிறார்.

வாழ்வினை அபத்தமென்று கருதும் மெர்சோ தன் தாயின் மரணத்தை அதாவது கதறித் துடிக்கவேண்டிய செய்தியை “இன்று அம்மா இறந்துவிட்டாள்” எனும் மிக அசட்டையான வரியில் கடக்கின்றான்.  அவனது அம்மாவை வெறுக்கவில்லை அல்லது அவள் மீது எந்தக் கோபமும் இல்லை. ஆனால் அவனுக்குத் தெரிகின்றது, மரணம் இன்றியமையாத ஒன்று என்று. அதனால்தான் அவன் மரணத்தை எந்தவித அலங்காரங்களுமின்றிச் சந்திக்கின்றான். காதலும் வாழ்தலும் சாவும் எல்லாமும் அவனுக்கு ஏதுமற்றதாகத்தான் இருக்கின்றன.

வாழ்வின் அபத்தங்களை நிராகரிக்கும் மெர்சோ கொலைக் குற்றத்துக்காய் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைபடும் வேளையில் சுதந்திரத்தைத் தேடி அலைகிறான், அவனுக்குச் சிறையை விட்டு விடுதலை ஆவதென்பது சுவாசத்தைப் போல், இதயத் துடிப்பைப் போல் அடிப்படைத் தேவையாக மாறுகிறது. அதே நேரம் அவன் அபத்தத்தால் சிக்குண்டு மரணத்தின் வாசலில் நிற்கிறான்.

மெர்சோ எனும் ஒரு பிரஞ்சு அல்ஜேரியன் ஒரு அரேபியனைக் கொல்லுதல் - கொலையாக மாறுகிறது. அதே நேரம் காலனிய அரசு மெர்சோவின் மீது திணிக்கும் கொலை, சட்டரீதியான தண்டனையாக உருக்கொள்கின்றது. வேறு சமயத்தில் அதே காலனிய அரசு அல்ஜீரிய அரபிகளைக் கொல்வது கொலையாகக் கருதப்படாமல் தீவிரவாதத்துக்கு எதிரான அரசு செயல்பாடாகக் கருதுகிறது. காம்யு தன் வாழ்நாள் முழுவதும் அரசுக் கொலைகளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர். அவரின் எழுத்துகள் எதைக் கொண்டும் மனிதர்கள் கொல்லப்படுவதை, குறிப்பாக அரசின் பெயரில், சட்டத்தின் பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை முற்றிலும் எதிர்க்கின்றன.  இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான பிரெஞ்ச் சமூகத்தில் காம்யுவின் இருப்பு என்பதே கிளர்ச்சியாகத்தான் இருந்தது.

தத்துவவாதி - எழுத்தாளன் எனும் இரட்டை அடையாளங்களையும் ஒன்றுசேர்த்து காப்காவைப் போல், தஸ்தாயெவ்ஸ்கியைப் போல் தத்துவ எழுத்தாளனாகத்தான் காம்யு இருந்தார். இதை காம்யு தன்னுடைய எழுத்துகளிலே குறிப்பிட்டும் இருக்கிறார். எழுத்தாளர்களிலே மிகவும் உயரிய எழுத்தாளர்கள் தத்துவ எழுத்தாளர்கள்  என்று குறிப்பிடும் காம்யு, அவர்கள் தங்கள் கருத்துகளை வாதங்களாய் முன்வைக்காமல் காட்சிகளாய் முன்வைக்கின்றனர் என்கிறார். காம்யுவின் தத்துவம் என்பது மேலே சொன்னதைப் போல் திரும்பத்திரும்ப அபத்தம் குறித்தே பேசுபவை, வாழ்வின் அபத்தம் குறித்துப் பேசுபவை.

அவர் வார்த்தைகளிலே சொல்வதென்றால் “வாழ்க்கை என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதை அழுத்தமாக நம்புகிறேன். ஆனால் அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கின்றது, அது மனிதன். ஏன் என்றால் மனிதன் மட்டுமே வாழ்வின் அர்த்தம் குறித்து வலியுறுத்தும் ஒரே உயிரினம்.”

என்னைப் போலான பலப்பல வாசகர்கள் காம்யுவின் எழுத்துகள் குறித்து இப்படியான பல ஆயிரம் பிரதிகளை எழுதிக் கொண்டாடியிருக்கக் கூடும். ஆனால் காம்யுவின் நூற்றாண்டில் யாருமே எதிர்பார்க்காதபோது ஒன்றில் “இன்னும் அம்மா உயிரோடுதான் இருக்கின்றாள்” எனும் வரியினைத் தன் கதையின் முதல்வரியாகக் கொண்டு ஒரு கதைப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஆம்! சார்த்தர் கூட செய்ய முடியாத அற்புதமான விமர்சனம் ஒன்றை  காமெல் தாவுத், மெர்சோவை விசாரிப்பதன் மூலம் காம்யுவைக் கேள்வி கேட்கின்றார். தாவுத் காம்யுவின் பிரதியைக் கேள்வி கேட்கும் அதே நேரத்தில்,  மெர்சோவால் கொலைசெய்யப்பட்ட பெயரற்ற அந்த அரேபியனின் குரலாக அதன் வாசகர்களிடமும் தன் கேள்வியினை முன்வைக்கிறார்.

ஒருவன் கொலை செய்யப்படுகிறான், இறந்துபோனவன் குறித்து எவ்வித அக்கறையுமற்று, அவனை மனிதன் என்று கூடக் கருதாமல் அந்தப் பிரதியின் செழிப்பான எழுத்துகளின்பால் மையலுற்று இறந்தவன் ஒரு மனிதனா என்றுகூட அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களாகத்தான் அந்நியனின் பெரும்பான்மை வாசகர்கள் இருந்தோம். அவர்களை நோக்கித்தான் தாவுத் தன் விமர்சனத்தை முன்வைக்கிறார். இறந்தவனுக்கு ஒரு பெயரைச் சூட்டி, அவனுக்குத் தாய், தம்பி, வீடு, காதலி என்று அனைத்தையும் உருவாக்குகிறார். பெயரற்ற அந்த அரேபியனான மூசாவின் தம்பியான ஹாருனின் குரலாக ஒலிக்கிறார் தாவுத். இந்தப் புத்தகம் பற்றிய மிகச் சரியான அறிமுகமாக இந்த ஒற்றை வாக்கியமே போதும் “அவன் துப்பாக்கி வெடிச் சப்தத்தைப் பற்றிப் பேசுகிறான், ஆனால் அதைக் கவிதையைப் போல் ஒலிக்கச் செய்கிறான்.” இந்த ஒற்றை வரியைக் காட்டிலும் மேல் அதிகமான விமர்சனம் எதுவாக இருக்க முடியும்?

‘அந்நிய’னும் ‘மெர்சோ மறுவிசாரணை’யும் ஆரம்பம் முதல் முடிவுவரை ஒரே தளத்தில், ஒரே வடிவத்தில் பயணிக்கின்றன. ஆனால் இரண்டுக்குமான வேற்றுமை என்பது இரு வேறு வாழ்க்கை முறையின், கலாச்சாரத்தின், அதன் பார்வையின் வேற்றுமையாகத்தான் இருக்கிறது. காம்யு எனும் பிரஞ்சு எழுத்தாளனுக்கு அல்ஜீரியா எனும் நாடு இருத்தலியல் குறித்தான தன் விசாரணைக்கான ஒரு காட்சிக் களமாக / அமைப்பாக மட்டுமே இருக்கின்றது. அதுவே தாவுத் எனும் அரேபியனுக்கு அல்ஜீரியாவே இருத்தலியலின் கேள்வியாக இருக்கிறது. இந்த வேற்றுமையே  மெர்சோ மறுவிசாரணைக்கான கதைக்களம். இந்த இடைவெளியைத்தான் தாவுத் தன் பிரதி முழுவதிலும் விசாரிக்கிறார். இந்த இடைவெளி என்பது வெள்ளை நிறத்துக்கும் மற்ற அனைத்து நிறங்களுக்குமான இடைவெளியாக, மேற்கு நிலத்துக்கும் மற்ற நிலங்களுக்குமான இடைவெளியாக, மையத்துக்கும் விளிம்புக்குமான இடைவெளியாகவே இருக்கிறது.

காலனியர்களின் பழைய வீடுகளிலிருக்கும் கற்களை எடுத்துத் தங்களின் புதிய வீடுகளை அல்ஜீரியர்கள் கட்டுவதைப் போல் கொலைகாரனான மெர்சோவின் வார்த்தைகளைக் கொண்டு கொலை செய்யப்பட்ட தன் சகோதரனின் கதையைச் சொல்லும் ஹாருனால், எப்படி தன் சகோதரனுக்கு ஒரு பெயரைக்கூட சூட்ட முடியாமல், அவன் வெறும் நிகழ்வாக மாறிப்போனான் எனும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெயரற்றதால் மூசாவின் சடலம்கூட அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் இறுதிவரை கிடைப்பதில்லை. அவன் சகோதரன் குறித்தான அழுத்தம் அவன் வாழ்க்கையுடன் எப்போதும் உடன் வருகின்றது நிழலைப் போல். அந்த நிழலை அவன் தாய் அழியாமல் பாதுகாக்கிறாள். அந்த நிழல் இறுதியில் ஹாருனினூடே கொலைக்குப் பழியாக இன்னொரு கொலை செய்கின்றது, அல்ஜீரிய விடுதலையின் ஆரம்ப நாட்களில், ஒரு பிரஞ்சுக்காரனை. இந்தக் கதைக்களத்தில் மெர்சோவின் மீதான விசாரணையாகத் தொடங்கும் பிரதி, தன்னியல்பில் விடுதலை அடைந்த அல்ஜீரியச் சமூகம், ஆட்சியாளர்கள் மீதான விமர்சனமாய் உருக்கொண்டு இருத்தலியல், அபத்தம் குறித்தான விசாரணையாக காம்யுவின் தத்துவத்துடன் ஒன்றிணைந்து முடிவுகொள்கின்றது.

தாவுத் அந்நியனையும் மெர்சோவையும் மட்டும் எடுத்தாளாமல் காம்யுவின் அநேக பிரதிகளையும் எடுத்துக்கொண்டே இந்த கதைப் புத்தகத்தை உருவாக்குகிறார். ‘வீழ்ச்சி’யில் வரும் ஓரான் நகரத்தில் இருந்தபடி அக்கதையின் நாயகனைப் போல் மதுவிடுதியில் அமர்ந்தபடிதான் ஹாருன் இந்தக் கதையினைச் சொல்கிறான். இப்படி கதை முழுவதிலும் காம்யுவும் அவரின் எழுத்துகளும் நிரம்பியே இருக்கின்றன. எழுத்துகள் முழுவதிலும் கொலை குறித்தும் மரணம் குறித்தும் அரச கொலைகள் குறித்தும் காம்யு பேசியதைப் போன்றே தாவுத்தும் கொலை குறித்து, அதன் அபத்தம் குறித்துப் பேசுகிறார். ஜான் எனும் பிரஞ்சுக்காரனை அல்ஜீரியா விடுதலை அடைந்த அடுத்த நாட்களில் ஹாருன் கொலை செய்கிறான்; தன் சகோதரனின் கொலைக்குப் பழி வாங்கவோ அல்லது தாயின் வற்புறுத்தலினாலோ அவன் கொன்று விட்டான் என்றாலும் அவன் ஒரு கொலையைச் செய்துவிட்டான்.

அதற்காக விசாரணை அதிகாரியால் விசாரிக்கப்படுகிறான். அதிகாரி அவன்மீது சுமத்தும் குற்றம், அவன் கொலை செய்துவிட்டான் என்று அல்ல, அவன் ஏன் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதாக இருக்கின்றது. இதே கொலை காலனிய அரசின் கீழ் நடந்திருந்தால் அவன் பிரஞ்சுக்காரனைக் கொன்ற காரணத்துக்காய் உடனடியாகத் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அவன் விடுதலை அடைந்த அல்ஜீரியாவில் ஒரு பிரஞ்சுக்காரனைக் கொலை செய்கிறான். விசாரணை அதிகாரியின் கவலை எல்லாம் அவன் ஏன் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் அவன் இதே கொலையை விடுதலைக்கு முன் செய்திருந்தால் அது தியாகத்தின், வீரத்தின் குறியீடாக மாறியிருக்கும் என்பது மட்டுமே. அபத்தத்தின் வடிவங்களைப் பேசும் தாவுத் அதே இடத்தில் அல்ஜீரிய ஆட்சியாளர்கள், விடுதலைப் போராட்டம் மீதான விமர்சனத்தையும் முன்வைக்கிறார். கதை முழுவதும் ஹாருன் நாத்திகனாகவும் அனைத்து மதங்களையும் நிராகரிப்பவனாகவும், அல்ஜீரிய ஆட்சியாளர்களை - சமூக அமைப்பைக் கேள்வி கேட்பவனாகவுமே வருகிறான். ஓர் இடத்தில் அந்தக் காலத்தில் எங்கள் பெண்கள் இன்று இருப்பதைப் போல் தலையைக் கூட மூடியவர்களாய் இருக்கவில்லை என்கிறான். கதை முழுவதிலும் குடிப்பவனாக, மதத்துக்கு எதிரானவனாக இருக்கிறான்.

“சுதந்திரமற்ற இந்த உலகை அணுகுவதற்கான ஒரே வழி  உன் ‘இருப்பு’ என்பதே கிளர்ச்சியானதாக இருக்க வேண்டும்” என்ற காம்யுவின் வார்த்தைகளைக் கொண்டே தன் பிரதியின் இருப்பு என்பதே கிளர்ச்சியானதாக, ஒட்டுமொத்த இலக்கிய உலகமும் கொண்டாடிய பிரதியைக் கேள்வி கேட்பதாக, அதனூடே தன் சமூகத்தின் அடக்குமுறைகளுக்கும் பழைமைகளுக்கும் எதிரான குரலாக ஒலிக்கிறார் தாவுத்.  அதனாலே “பேசினாலும் இறக்கப் போகின்றாய். பேசவில்லை என்றாலும் இறக்கப் போகின்றாய். எனவே பேசிவிட்டுச் சாவு” என்ற அல்ஜீரிய எழுத்தாளர் Tahar Dajaout வார்த்தைகளின் வடிவமாய் நிற்கிறார் காமெல் தாவுத்.
மின்னஞ்சல்: elavenhil@gmail.com

நன்றி : காலச்சுவடு இதழ்


7. காற்றுவெளி       மின்சஞ்சிகை,              நவ.       2013      
  
   அண்மையில்,       மூன்றாவதாக       இப்போது       அமைந்துவரும்    என்       நூலக       அடுக்கிலிருந்த       அல்பேர்       காமுவின்     மரணத்தையொட்டி       ழீன்       போல்       சார்த்தரும்,       செர்ஜி       துப்ரோவ்ஸ்கியும்     வெளியிட்ட       பிரெஞ்சு       மொழியிலான       இரங்கல்       செய்திகளின்        ஆங்கிலம்       வழியிலாக       நண்பர்       தேனுகா       தமிழில்     மொழிபெயர்த்து       ‘அகரம்’       வெளியிட்டிருந்த       ஒரு       கையடக்கமான     சிறுநூல்       மறுபடியுமான       எனது       வாசிப்புக்குத்       தட்டுப்பட்டது.      
 
                வாசிப்பின்       பின்னூட்டமாய்       தொடர்ந்து       விளைந்த        யோசிப்புக்களின்       காரணமாக,       தமிழ்ப்       பரப்பில்       அல்பேர்     காமு       என்கிற       பேராளுமைபற்றிய       அறிகை       பெரிதாக        ஏற்படவில்லையோ       என்று       தோன்றத்       தொடங்கியது.       ஓரளவு     ஏற்பட்டிருந்தாலும்,       விமர்சகர்கள்       படைப்பாளிகள்       வாசகர்களென       பலராலும்     புரிந்தும்       புரியாமலுமே       அவர்       இருந்திருக்கிறாரோ       என்று     பிறகு       பட்டது.       ஒரு       புதிய       ஆர்வத்தின்        காரணமாய்க்கூட       எனது       எண்ணம்       இப்படி       மிகைபடத்     தோன்றியிருக்கலாம்       எனக்       கொண்டாலும்,       ‘பெரிதாக       இல்லை’     என்னும்       அளவுக்காவது       அந்நிலைமைகள்       இருப்பதை       தீர்க்கமான     சிந்தனையின்       பின்       என்னால்       வந்தடைய       முடிந்தது.      
 
                அல்பேர்       காமுவின்       வாழ்நாள்       அதிக       காலமில்லை.     1913       இல்       அல்ஜீரியாவில்       பிறந்த       காமு,       பிரான்ஸ்     நாட்டில்       வாழ்ந்து,       பின்       அமெரிக்காவில்       குடியேறி        1960       ஜனவரி       4இல்       ஒரு       விபத்தில்     மரணமாகும்வரையான       நாற்பத்தேழு       ஆண்டுகளே       இவ்வுலகில்       இருந்திருக்கிறார்.     பிரான்ஸில்       வாழ்ந்த       காலத்திலேயே       அவரது       பல்வேறு     இலக்கிய,       சித்தாந்த,       அரசியல்       ஆளுமைகள்       வெளிப்பட்டிருப்பினும்,     பிரான்ஸின்       சமகால       இலக்கிய,       சித்தாந்த,       நாடக     ஆளுமைகளுக்கு       இணையாக       அவர்       இருந்திருந்தார்       என்பது,     சாமான்யமானதில்லை.       பிரான்ஸிய       இலக்கிய       விமர்சகர்களாலேயே       ‘Representative     of       non-metropolitan       French       Literature’       என்று     கூறப்படும்படியான       தகைமையை       அவர்       கொண்டிருந்திருக்கிறார்.      
 
                அமெரிக்காவில்       காமுவின்       இலக்கிய       ஆளுமையை,        ‘அமெரிக்கர்கள்       இலக்கியத்தை       ஓர்       இரண்டாம்       பட்சச்     செயலாகவே       கருதும்       இயல்புகொண்டவர்கள்.       கலைகளில்       சொற்பத்        தொடர்புகொண்டவர்கள்       இவர்கள்.       இவ்       அமெரிக்கரிடையே       வேறு     எந்த       அந்நிய       எழுத்தாளரும்       இவ்வளவிலான       உணர்வுகளை        உண்மையில்       எழுப்பியிருக்க       முடியாது’       என்றும்,       ‘பிரான்ஸின்     குடிமகனாய்       இருந்துகொண்டே       அமெரிக்காவில்       மற்றவர்கள்       கூறிட     நடுங்கியதை       காம்யு       தைரியமாக       எடுத்துக்கூறினார்’       என்றும்,     ‘அமெரிக்க       இலக்கியம்       காத்திருந்து       ஏங்கியும்       கிடைக்கப்பெறாத     ஓர்       எழுத்தாளராக       காம்யு       விளங்கினார்’       என்றும்     நான்       மேலே       குறிப்பிட்டுள்ள       அவரின்       மரண     இரங்கற்       செய்தியில்       செர்ஜி       துப்ரோவ்ஸ்கி       கூறியதிலிருந்து     உய்த்துணர்ந்துகொள்ள       முடியும்.        புலம்பெயர்தல்       என்பது       எதன்       பொருட்டாகவும்        இருந்திருக்கட்டும்,       ஆனால்       அதிலுள்ள       பெயர்தலெனும்       செயற்பாடு,     மண்ணைவிட்டு       வேரொடு       பெயர்தல்       என்கிற       மகத்தான       வன்முறையின்     கொடுமுடியாகும்.       தனது       இருபத்தைந்தாவது       வயதில்       சொந்த        மண்ணைவிட்டு       பிரான்ஸ்       பெயரும்       அல்பேர்       காமு,  
             
                   அங்கிருந்தும்தான்       அமெரிக்கா       பெயர       நேர்வதும்,       செல்லுமிடங்களிலெல்லாம்     இலக்கியம்,       தத்துவம்       சார்ந்து       கியாதி       பெறுவதும்     துயரங்களைச்       சகித்துக்கொண்டும்       நிகழ்த்தப்படும்       சாதனையாகும்.       தளராத     உறுதியும்,       தன்னம்பிக்கையும்,       கூர்த்த       அவதானிப்பும்       இல்லையேல்     பெயர்த்து       நடப்பட்ட       மண்ணிலேயே       உலர்ந்து       சருகாகிவிடக்கூடிய     செடியாக       வாழ்க்கை       ஆகிவிடக்கூடிய       சாத்தியங்கள்       மலிந்திருந்தன     அதில்.       ஆனால்       காமு       சென்றவிடங்களிலெல்லாம்       தன்     பேராளுமையின்       சுவடுகளைப்       பதியவைத்தார்.        நானுமே       ஒரு       புலம்பெயர்வாளனாய்       இருப்பதில்,        அல்பேர்       காமுவின்       பேராளுமைகள்       என்னை       வியக்க     வைப்பன.  
         
 
                ‘It       is       not       the       struggle     which       makes       us       into       artists,       but     the       art       which       compels       us       to     join       the       struggle’.       அல்பேர்       காமுவே        சொன்ன       வாசகம்தான்       இது.       அவர்       எழுதிய     ‘The       Witness       for       Liberty’       என்ற        அவரது       நூலில்       வருகிறது.       அதற்கேற்பவே       அவரின்     எழுத்துலக       வாழ்க்கை       இறுதிவரை       இருந்திருப்பதாகக்       கருதமுடியும்.      
 
                காமுவை       ஓர்       இலக்கியவாதியாய்,       அரசியல்காரனாய்,        அரங்காடல்       பிரதிகாரனாய்       என       பல்தளங்களில்       இனங்காண     முடியும்.       ஒட்டுமொத்தமாய்       அவரது       ஆக்கங்கள்       அனைத்தையும்        ஒரு       பார்வைக்குட்படுத்துவோமானால்,       அப்போது       தெரிய       வரும்,     முதன்மையாக       அவர்       ஓர்       இலக்கியவாதியாகவே       இருந்திருந்தார்     என்பது.       அவரது       அரசியல்       நிலைப்பாடு       இலக்கிய        நிலைப்பாட்டின்       அடுத்த       தளமாகவே       என்றும்       இருந்திருக்கிறது.      
 
                Alger       Republicain       என்ற       இடதுசாரிப்       பத்திரிகையில்     வேலை       செய்திருந்தாலும்,       ஸ்பானிய       உள்நாட்டுப்       போரில்        குடியரசு       சார்பானவராக       இருந்திருந்தபோதும்       அவரது       எழுத்துக்கள்     இலக்கியத்தைநோக்கியும்,       சித்தாந்தத்தைநோக்கியும்       நகர்ந்துகொண்டேதான்       இருந்திருக்கிறது.       1936-1942க்கு     இடைப்பட்ட       காலத்தில்       வெளிவந்த       அவரது       கட்டுரைகளின்     தொகுப்புகளான       Betwixt       and       Between,       Nuptials        என்ற       இரண்டு       நூல்களும்       தனிமனித       அனுபவங்களான     மரணம்,       வறுமை,       நோய்,       இயற்கை       பற்றியனவாகவே     இருந்திருப்பதிலிருந்து       அவரது       எழுத்தின்       செல்நெறி       தெரியவருகிறது.      
 
                பிரான்ஸின்       அதிகாரத்தின்       கீழிருந்த       அல்ஜீரிய        நாட்டில்       உலகப்       போரும்,       உள்நாட்டு       விடுதலை     யுத்தமும்,       பசி       பட்டினி       நோய்கள்       என்று       பெருவாரியான     மக்களை       தற்கொலைநோக்கி       விரட்டிக்கொண்டிருந்த       நிலையிலும்,       பிரான்ஸின்     முக்கிய       இலக்கிய       ஆளுமையான       அல்பேர்       காமு,        இவைபற்றி       தன்       எழுத்துக்களில்       மேலெழுந்தவாரியான       பிரஸ்தாபங்களுக்கு     மேல்       எதையும்       செய்துவிடவில்லையென்பது       ஒரு       முக்கிய     குறைபாடாக       அவர்மேல்       சுமத்தப்படுவதுண்டு.       ஒரு       நாட்டின்     பெருவாரியான       மக்கள்       போரினதும்,       வறுமையினதும்       கொடுமையினால்     சுயஹத்தி       நோக்கித்       தள்ளப்பட்டுக்கொண்டிருந்த       தருணமொன்று       ஒரு     படைப்பாளியிடத்தில்       அவனது       இலக்கியத்துக்கான       மகத்தான       உந்துசக்தியாக     வெளிப்பட்டிருக்கவேண்டும்.       ஆனால்       காமுவோ,       ‘அந்நியன்’       (1942)     என்ற       தன்       நாவலில்       வரும்       Maursault     கதாபாத்திர       மாதிரியில்       Indifferent       of       politics     as       well       as       love,       ambition     and       friendship              என       விமர்சகர்கள்     குறிப்பிட்டிருப்பதுபோல்       இருந்திருக்கிறார்.              the       Stranger,     The       Myth       of       Sissyphus       (1943)     ஆகிய       நூல்கள்       இரண்டிலும்       திட்டமுடனேயே        காமு       அறம்       சார்ந்த, சமூகம்       சார்ந்த       விமர்சனங்களைத்       தவிர்த்திருக்கிறார்     என்பது       அவர்கள்       சுமத்துகிற       மேலுமான     குற்றச்சாட்டுகளாகும்.  
                                                                                 
 
                அவரது       கம்யூனிச       எதிர்ப்பும்       பிரபலமானது.        தனிமனித       சுதந்திர       ஈர்ப்பு       என்கிற       தளத்திலிருந்து     நோக்கினால்,       அவரது       பாசிசம்மீதான       தாக்குதல்       தீவிரமானதாக        இருந்திருக்;கவேண்டும்.       ஆனால்       தம்       காலத்து       ஏனைய     படைப்பாளிகள்       பலரைப்போல       காமுவும்       இத்       தாக்குதலில்        அதிக       நேரத்தைச்       செலவிடவில்லை.       1940இன்       பின்னர்     மிகச்       சிறு       அளவிலான       அறிவுஜீவிகள்       பாசிசம்        பக்கம்       சார்ந்ததன்       (உதாரணமாக       எஸ்ரா       பவுண்ட்)     நிலைமையின்       பிரதிபலிப்பாக       இதைக்       கொள்ளமுடியுமோ       என்ற     ஒரு       சரியான       கேள்வியும்       நிமிர்ந்து       இங்கே     நின்றுகொண்டு       இருக்கிறது.       இதன்       காரணமாகவே       சார்த்தருக்கும்     காமுவிற்கும்       இடையில்       தகராறு       ஏற்பட்டதையும்       இங்கு     சீர்தூக்கிப்       பார்க்கவேண்டும்.        1935இல்       அல்பேர்       காமு       அல்ஜீரிய       கம்யூனிஸ்ட்     கட்சியிலிருந்து       விலகுவது       அவரது       வாழ்வில்       ஒரு       கட்டமாகவே     அமைந்துவிடுவது       தெரிகிறது.       இன்னும்       அச்சொட்டாக       ஒரு        காலத்தைக்       கணிப்பதானால்       இரண்டாம்       உலக       மகாயுத்தம்     தொடங்கிய       காலத்தைக்கூட       இங்கே       எடுத்துக்கொள்ள       முடியும்.  
                 
                       இக்காலகட்டத்தில்       காமுவின்       நிலைப்பாடு       ‘Each       man        had       the       duty       to       see     that       the       integrity       of       his        neighbors'       personality       was       respected’       என்ற     தனிமனிதவாதத்தின்       தளம்       நோக்கியதாகவே       இருந்திருக்கிறது.        போருக்குப்       பின்னால்       இது       இன்னும்       அதிகமானதாகவே    கருதமுடிகிறது.1942இலிருந்து       பிரான்ஸின்       எதிர்ப்பாளர்       அணியில்       இருந்திருக்கிறார்  
         
               அல்பேர்       காமு.       இது       டுநவவநசள       வழ       ய    புநசஅயn       குசநைனெ       என்ற       1942இல்       இரகசியமாக       வெளிவந்து       1944இல்       மறுபடி       பிரசுரம்       கண்ட    நூலிலிருந்து       தெரிகிறது.       இதுவே       பின்னால்       வெளிவந்த    நான்கு       அரசியல்       நிலைப்பாட்டு       நூல்களுக்கும்       தூண்டுதலாக    அமைகிறது.       1)       The       Plaque            
                                   2)       State       of       Seige      
3)    The       Just       Assassin       4)       The       Rebel       ஆகிய       அந்த       நான்கு       நூல்களிலும்கூட    எல்லா       சட்டதிட்டங்களையும்       நிராகரிப்பதையோ,       சமூகத்தை       நசிக்கும்    சக்திகளுக்கெதிராக       தீவிரமான       புரட்சியில்       இறங்குவதையோ       இதில்    வரும்       சொற்கள்       ஆதரிப்பதாக       அர்த்தமில்லையென்று       விமர்சகர்கள்    கருதுகிறார்கள்.       மேலும்       அவரது       அரசியல்       சார்பு    என்பதுகூட       பாசிசம்       ஐரோப்பாவில்       மங்க       ஆரம்பித்த    பின்னரே       சூடு       கொள்கிறது       என்பதும்       கவனிக்கப்படவேண்டும்.    இந்தச்       சமயத்தில்தான்       அவரது       கம்யூனிஸத்துக்கு       எதிரான       நிலைப்பாடும்       தீவிரமாவதைக்கொண்டு       அல்பேர்    காமுவின்       மனநிலை       சார்ந்த       கருதுகோள்களை நாம்       கண்டுகொண்டாகவேண்டி       இருக்கிறது.       லூயி       ஆரகன்,       போல்       எலுவார்ட்,       பிக்காசோ,    றோஜர்       வையான்ட்       போன்றோர்       பிரான்ஸிய       கம்யூனிஸ்ட்       கட்சியின்       அங்கத்தவர்களாகவும்,       சார்த்தர்       மற்றும்       மார்டன்    அரங்க       குழுவினர்       கம்யூனிஸத்துக்குச்       சாதகமாகவும்       இருந்த    வேளையில்,       அல்பேர்       காமுவின்       கம்யூனிஸத்துக்கு       எதிரான    மனநிலை       சிந்திக்கப்பட       வேண்டியதாக       உள்ளது.       அவர்    கம்யூனிஸமானது       இரண்டு       தேசிய       அடையாளங்களிலிருந்து,       முதலாவது:    ஜேர்மனியின்       ஹெகலியனிஸம்,       இரண்டாவது:       ரஸ்யாவின்       நிகிலிஸம்,    உருவானதென்றார்.       Denial       of       all       morals       நிகிலிஸத்தின்       அடிப்படையாக       இருந்தது.       நிகிலிஸத்தின்    சகல       அறம்சார்       அம்சங்களினதும்       நிராகரிப்பு,       ஒருவேளை    காமுவின்       கம்யூனிஸ       மறுப்புக்கான       உந்துதலை       ஏற்படுத்தியிருக்க    முடியுமோ       என்பதும்       சிந்திக்கப்படவேண்டிய       ஒன்று.
அபத்தம்                     என்கிற       இலக்கிய       சிந்தனையின்    மூலகர்த்தாவான       அல்பேர்       காமு,       வாழ்வின்       மரணம், நோய்,       புத்தி       மாறாட்டம்       போன்ற       அம்சசங்களை    ஆரம்பத்தில்       தன்       எழுத்துக்களில்       அழுத்தமாய்த்       தெரிவித்துவந்தாலும்,       தி       மித்       ஒப்    சிசிபஸ்       நூலின்       வெளியீட்டுக்குப்       பின்னால்       அத்       தீவிரத்தை       இழந்துபோகிறார்       என்பதை    அல்பேர்       காமுவின்       படைப்புகள்       குறித்தான       விமர்சனங்களிலிருந்து       நம்மால்       தெரிந்துகொள்ள       முடிகிறது.    அபத்த       சிந்தனைகள்       அதிகமாகவும்       வெளிப்பட்ட    நூல்       இரண்டாம்       கட்டுரைத்       தொகுப்பான    Nuptials       என்பதாகவே       இருக்கிறது.       அதன்    பின்னால்       அபத்தத்தின்       செல்வாக்கிலிருந்து       அவர்    மீள்கிறார்       என்பதைவிட,       என்       வாசிப்புக்களிலிருந்து    நான்       அடையக்கூடிய       ஒரு       முடிவு,    காமு       அபத்தத்தையும்       மனிதாபிமான       தளத்துக்கு    உயர்த்துவதாய்       ஆகியதுதான்       என்றே       ஆகிறது.
இருத்தலியலின்       மூலவர்களில்       ஒருவராகவும்       காமு       குறிப்பிடப்படுகிறார்.    வாழ்வின்       விகாசத்தையும்,       அதன்       அழகையும்    எடுத்துக்காட்டி       தற்கொலையைக்       கண்டித்த       ஒரு  சிந்தனாவாதி       மொத்த       மனித       குலத்துக்குமான மனிதாபிமானத்தை       வற்புறுத்துவதில்       மிகத்       தீவிரமான       ஆர்வம்       காட்டியதற்கு    காமுவைவிட்டால்       வேறு       பேர்       இல்லையென்றே    கூறிவிடமுடியும்.       ஆயினும்,       ஒரு       நேர்காணலில்    கேட்கப்பட்ட       கேள்வியொன்றுக்கு       பதிலளிக்கையில்,    ‘நான்       ஒரு       இருத்தலியல்வாதி    இல்லை.       சார்த்தரும்       நானும்    எங்களது       பெயர்கள்       இருத்தலியல்வாதிகளின்  பட்டியலில்       இடம்பெற்றிருப்பதைக்       கண்டு    பலவேளைகளிலும்       ஆச்சரியமே       பட்டிருக்கிறோம்’    என்கிறார்.  
                                                                                                                                                     
 
                ஆகவே       அபத்தத்தின்       ஆதிகர்த்தாவான       அல்பேர்       காமு       பின்னாளில்       அதன்மீதான       ஆதர்~ம்       குறைந்ததும்,    தான்       ஒரு       இருத்தலியல்வாதியல்ல       என்று       பகிரங்கப்படுத்துவதும்    கொண்டு       நம்மால்       ஒரு       முடிவுக்கு       வரமுடிகிறது.       அவரது       தீவிரமான       இலக்கிய       இயங்குதளமே       இதற்கான    காரணமென்பதைச்       சொல்லவேண்டியதில்லை.       இன்னுமொன்று.       தீவிர       மனிதாயத    தளத்தில்       சிந்தனையைச்       செலுத்தியிருந்த       காமு,       கம்யூனிஸ    சித்தாந்தத்தின்படி       கொள்ளப்படும்       வர்க்க       பேதத்தையும்       மறுத்தது    என்று       கொள்வதில்       பெரிய       மாறுபாடுகளில்லை.       1947க்கு       மேலே       அவரது       கவனம்       முழுவதும்    தீவிரமான       இலக்கியத்திலேயே       செறிந்திருந்ததை       நம்மால்       அவரது    தொகுப்புகளையும்,       நூல்களையும்       கொண்டுகூட       அறிய       முடியும்.       The       Fall       (1956),       Exile       and    the       Kingdom(1957)       ஆகிய       படைப்புக்கள்       மிக்க       இலக்கியார்த்தமானவை.       ‘the       Fall       is       a    long       monologue,       a       confession,       a       methodical    introspection’       என்பது       தி       போஃல்              விமர்சகர்களால்    மதிப்பிடப்பட்டிருக்கிறது.  
                     
 
                1957இல்       உப்சலா       பல்கலைக்கழகத்தில்       டால்ஸ்டாயின்       ‘கலை       என்றால்       என்ன?’       என்ற       நூலின்    ஞாபகார்த்தமாய்       நிகழ்த்தப்பட்ட       அல்பேர்       காமுவின்       உரை       பின்னால்       ‘The       Artist       and       His    Time’       என்ற       நூலாக       வெளிவந்தது.       எழுத்து       பற்றி       காமுவின்       சிந்தனை       எவ்வாறு       இருந்ததென்பதை    துல்லியமாகக்       காட்டுவதாக       அதிலுள்ள       ஓரிரு       வரிகளே       அமைந்துவிடுகின்றன.       ‘The       only       justification       is    to       speak       up       for       those       who    can       not       do       so’       என்று       தெரிவிக்கையில்,       நலிந்த       மக்களின்       குரலாக  எழுத்து       இருக்கவேண்டும்       என்ற       அவரது       கருத்து    வெளிப்பாடடைகிறது.  
                                
                இவ்வாறாக       சிறுகதை,       அரங்காடல்       பிரதியாக்கம்,       நாவல்,       கட்டுரைகள்       என       பல்வேறு       கலைத்    துறைகளிலும்       ஆழமான       சுவட்டினைப்       பதித்து       1960       இல்    ஒரு       விபத்தில்       மறைந்துபோகிறார்       அல்பேர்       காமு.       The       Fall,       The       Stranger,       Exile    and       the       Kingdom,       Caligula,       A       Happy       Death,       The       Aduterous       Woman,    The       Growing       Stone,       The       Possessed,       Requiem       for       a       Nun       போன்ற    முக்கியமான       நூல்கள்       அவரின்       ஞாபகங்களைச்       சுமந்துகொண்டிருக்கின்றன.      
 
                இந்த       இடத்தில்       ழீன்       போல்       சார்த்தரின்    காமுவினது       மரண       அஞ்சலிச்       செய்தியில்       தெரிவிக்கப்பட்ட       கருத்தொன்றினைக்       காண்பது       பொருத்தமானது.       அதில்       சார்த்தர்    கூறுகிறார்,       ‘காம்யுவை       கொன்ற       விபத்தை       ஒரு       மாபெரும்       ஊழல்       என்றே       நான்       அழைக்கிறேன்.    ஏனென்றால்       இவ்விபத்து       மனித       உலகின்       மையத்தைநோக்கி       நமது       அடிப்படைக்       கேள்வியான       அபத்தத்தை       முன்னிறுத்துவது.   தனது       இருபதாம்       வயதில்       மனிதனை       மறுக்கும்       அபத்தத்தைக்       கண்டுபிடித்தார்       காம்யு.       அதனுடன்       பழக்கமானார்.       அதனது       தாங்கொணாத       நிலையை       எண்ணிச்    சிந்தித்தார்.       அதன்       வழியைப்       பின்பற்றினார்.       இருப்பினும்,    அவரது       படைப்புகளால்       மட்டும்தான்       அவரது       வாழ்க்கைபற்றிய    உண்மைகளைத்       தீர்க்கமாகச்       சொல்லமுடிந்தன’       என.       ஆம்,       அவரது       படைப்புகளே       இன்று       அல்பேர்    காமு       என்கிற       படைப்பாளியை,       அவரது       சிந்தனைப்       போக்கினை,       தத்துவார்த்த       நெறியினை       எடுத்துச்       சொல்லிக்கொண்டிருக்கின்றன.       காமு       வலியுறுத்தி       வந்த       மனிதாபிமானம்,       திடீரென்று    அவரைப்       பறித்துச்       சென்ற       மரணத்தின்       மீதும்       மனிதாபிமானம்       கொண்டதாகும்       என்ற       சார்த்தரின்       வார்த்தைகளில்    மெய்யிருக்கிறது.
000  
             
 
                காற்றுவெளி       மின்சஞ்சிகை,              நவ.       2013      
  



8. அல்ஜீரியா - மருதன்

அல்ஜீரியப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அது பற்றி எழுதியும் பேசியும் வந்த இரு பெரும் ஃபிரெஞ்சு எழுத்தாளர்கள், அல்பேர்ட் காம்யு மற்றும் ழான் பால் சார்த்தர்.

முதலில், அல்பேர்ட் காம்யு (Albert Camus). இவர் அல்ஜீரியாவில் பிறந்தவர். தத்துவம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் ஆர்வம் செலுத்தியவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். அல்ஜீரிய மக்களின் விடுதலை வேட்கையை மிகச் சாதுரியமாக ஒதுக்கித்தள்ளுகிறார் காம்யு. ஃபிரெஞ்சு காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் எஃப்.எல்.என். இயக்கத்தை அறிவுஜீவிகள் யாரும் ஆதரிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறார். அவ்வாறு செய்வது ஆபத்தானது என்று சுட்டிக்காட்டுகிறார்.

காம்யு முன்வைக்கும் தீர்வு இதுவே. ஃபிரெஞ்சு மக்களோடு அல்ஜீரிய முஸ்லீம்கள் கைகோர்த்துக்கொள்ளவேண்டும். அவர்களுடன் ஒத்துப்போகவேண்டும். அதைவிட்டுவிட்டு கொடிபிடித்து போராடுவதும் கோஷம் போடுவதும் பயன் தராது. அல்ஜீரியா விடுதலைப் பெறவேண்டும் என்னும் கோஷம் உணர்ச்சிமயமானது. யதார்த்தமானது அல்ல. ஃபிரெஞ்சு ராணுவத்தின் சித்திரவதைகளை சிறிது காலம் கண்டித்துப்பேசிய காம்யு தன் இறுதி காலத்தில் அதையும்கூட நிறுத்திக்கொண்டார்.

ழான் பால் சார்த்தர் (Jean-Paul Sartre) 1929 முதல் 1931 வரை ஃபிரெஞ்சு ராணுவத்தில் கட்டாயப் பணியாற்றியவர். அரசியல் போக்குகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த சார்த்தர், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்படுகிறார். போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்டு வெளிப்படையாக ஆதரிக்கவும் செய்கிறார். எரிச்சலைடந்த ஃபிரெஞ்சுக்காரர்கள் சிலர் அவர் வீட்டு வாசலில் வெடிகுண்டு வைக்கிறார்கள். சார்த்தரின் சீற்றம் அதிகரிக்கிறது. ஒடுக்குமுறையை கையாளும் ஐரோப்பியரைக் கொன்றால் தவறே இல்லை என்று ஒரு புத்தகத்தின் முன்னுரையில் எழுதினார். தன் இறுதி காலம் வரை பல்வேறு அரசியல் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருக்கும் இலக்கியத்துக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. சார்த்தர் மறுத்துவிட்டார்.

ஒரே காலகட்டம். ஒரே போர். காம்யு பிரான்ஸை ஆதரித்திருக்கிறார். சார்த்தர், அல்ஜீரியாவை. காலனியாதிக்கத்தைக் கொண்டாடும், நியாயப்படுத்தும் வழக்கம் பல முக்கிய எழுத்தாளர்களுக்கு இருந்திருக்கிறது. Evelyn Waugh எழுதிய Waugh in Abyssinia சட்டென்று நினைவுக்கு வருகிறது. இத்தாலியர்களின் ஆக்கிரமிப்பு அபிசீனியாவுக்குத் தேவை என்று காலனியாதிக்கத்தை வரவேற்று எழுதியிருப்பார் ஆசிரியர். இந்தப் புத்தகம் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

1) The Torture of Algiers, Adam Shatz2) My Encounter with Sartre by Edward Said


8. அபத்தவாதம்

அவர் வாழ்வதற்கான ஒரு வழியை கண்டுபிடிக்க யத்தனித்தார்.அவருடைய அந்நியன் நாவல் பிளேக்வீழ்ச்சி சிசிபஸின் தொன்மம் கட்டுரைகள் எல்லாவற்றிலும் வாழ்வை ஒரு குறிப்பிட்ட தளத்தில் தொகுக்க முயல்கிறார்.

முதலில் அவர் இந்த வாழ்க்கை அபத்தமானது என்கிற முடிவுக்கு வருகிறார்.இந்த அபத்த வாழ்வை அது அபத்தமானது என்கிற பிரக்ஞையின் வழி மட்டுமே கடக்க முடியும் என்று நினைக்கிறார்.பின்னர் இந்த அபத்த வாழ்வின் வழியும் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க முடியும் என்று எண்ணுகிறார்.

முதலில் அபத்தம் என்கிற கருத்தை முன்வைக்க அந்நியன் நாவலும் சிசிபஸின் தொன்மம் என்கிற கட்டுரை தொகுப்பையும் எழுதுகிறார்.அபத்தம் என்கிற போது அவர் ஒரு கேலிச்சிரிப்பை உருவாக்க முனைவதில்லை.மாறாக உங்கள் கைகளை பற்றி நாம் இருவரும் தேநீர் அருந்தலாம் என்றே சொல்கிறார்.எல்லா வாழ்க்கை நிலைகளும் மதிக்கத்தக்கதே என்பதே அவர் முன்வைக்கும் அபத்தம்.மாறாக எதுவுமே மதிக்கத்தக்கதல்ல என்பதல்ல.சிசிபஸின் தொன்மம் கட்டுரை தொகுப்பில் சரியான பிரக்ஞையோடு இருந்தால் ஒரு தபால்காரராக இருப்பதற்கும் பிரதமராக இருப்பதற்கும் எந்த வித்யாசமும் இல்லை என்கிறார்.இந்த சரியான பிரக்ஞை என்பது சூட்சமமானது.அந்த பிரக்ஞையை எப்படி அடைவதுஏன் அடைய வேண்டும் என்பதில் அவர் கூறும் ஒரே விஷயம் வேற்றுமையின்மை தான்.ஆனால் அந்த வேற்றுமையின்மையை நாம் தான் உணர வேண்டும் அது புறத்தில் இல்லைஅகத்தில் தான் இருக்கிறது.

வீழ்ச்சி நாவலில் மிகத் தீவிரமாக தன்னைத் தானே குதறி சுய விசாரனை செய்கிறார்.அவர் இறுதியாக இங்கு நல்லவர்கள் யோக்கிமானவர்கள் யாருமில்லை என்கிற முடிவுக்கு வருகிறார்.இந்த நாவல் ஒரு வகை குற்ற ஏற்புரைதான்.அவரின் மனைவி காம்யுவின் திருமணத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளும் உறவுகளால் தற்கொலைக்கு முயல்கிறார்.அந்த குற்றவுணர்வில் உருவான நாவல்தான் வீழ்ச்சி.

பிளேக் நாவல் ,வளரும் கல் சிறுகதை ஆகியவற்றில் ஒரு ஆழமான நட்பை முன்வைக்கிறார்.பிளேக் நாவலில் கதைசொல்லியும் பிளேக்கால் இறுதியில் இறந்துவிடுபவருக்கும் இடையில் உருவாகும் நட்பு மிகவும் வசீகரமானது.அவர்கள் இருவரும் ஒரு நாள் கடலில் நீந்த செல்லும் இடம் அத்தனை அழகாக இருக்கும்.அவர் எந்த அர்த்தமும் இல்லாத அபத்த வாழ்வில் ஒரு மானுட நேசத்தை முன்வைக்கிறார்.அங்கே மருத்துவர் காவலாளிபொறுக்கி என்கிற பேதங்கள் இல்லை.
அதாவது வேற்றுமையின்னமை.தஸ்தாவெய்ஸ்கியின் பேதை நாவலில் இப்போலிட் அவசியமான விளக்கம் என்ற ஒரு கட்டுரையை வாசிப்பான்.அவன் காசநோயால் பாதிக்கப்பட்டவன்.

ஏதோ ஒரு வகையில் தோல்வி, வெறுமைதான் ஒருவரை வாழ்வின் அபத்தம் நோக்கி நகர்த்துகிறதா.இருக்கலாம்.வாழ்வை கொண்டாட்டமாக பார்ப்பவர்கள் ஏன் வாழ்வின் அபத்தம் குறித்து எண்ணப்போகிறார்கள்.எல்லா வாழ்க்கைநிலைகளும் மதிக்கத்தக்கதே என்பவர் , ஏன் வாழ்வில் பொருளியில் ரீதியில் முன்னேற முனைவார்கள்.இருப்பதே மகிழ்ச்சிதானே.ஆனால் இந்த தரிசனம் ஒருவரின் வாழ்க்கை பற்றிய பார்வையை முற்றிலுமாக மாற்ற வல்லது.ஆல்பர் காம்யூ முன்வைக்கும் நேசம் வாழ்வின் அபத்தம் மூலமாக நாம் அடையும் வேற்றுமையின்மை எனும் ஆன்மிக தளத்தை அடைகிறது.அதை ஒருவரால் அடைய முடியும் என்றால் அவர் ஞானிதான்.அந்த மனநிலையே வசீகரமானது.அதன்பின் இந்த உலகில் உங்களை யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது.

9.

“ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ம் திகதி, தனது 39வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறு நாள் இறந்தான்”
- ஜே ஜே: சில குறிப்புகள்